505. முக்கணக்கரா முதல்வனா ரவர்திரு நல்லூர்  
  மிக்க சீர்வளர் திருவிழா விருப்புடன் வணங்கித்
தக்க வன்பர்க ளமுதுசெய் திருமடஞ் சமைத்தார்
தொக்க சுற்றமுந் தாமும்வந் தணைந்தனர்
                               தூயோர்.

4

     (இ-ள்.) வெளிப்படை. மூன்றுகண்ணுடையராய், நக்கராய்
உள்ள முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானது திருநல்லூரிலே
மிகுந்த சிறப்புவளரும் திருவிழாவை விருப்பத்துடன் சேவித்து,
அடியார்கள் அமுது செய்தற்குத் தக்க திருமடத்தை அமைத்தார்.
(அதன்பின்,) கூடிய சுற்றத்தாரும் தாமுமாய்த், தூயவராகிய நாயனார்
திருநல்லூரினை வந்து அடைந்தனர்.

     (வி-ரை.) முக்கண் நக்கரசம் முதல்வனார் - முக்கண் -
சோமன் - சூரியன் - அக்கினி என்பன இறைவனது முக்கண் எனப்
பெறுவன. நக்கர் - கோவணமுமின்றியுள்ள நீருவாணமான
திருவுருவம். முதல்வனார் - யாவர்க்கும் தலைவராகிய
சிவபெருமான். மூன்று கண்ணும் நக்கராய உருவமும் அவரது
முதன்மைத தன்மை குறிப்பன. என்னை? முக்கண்கள் முழு
ஒளியுருவத்தையும், நக்கவுருவம் பிறவெல்லாம் மேற்கொண்ட உடைமாத்திரையா யொழியத், தாம் ஒருவரே எஞ்சி நிற்கும்
நிலையையும் குறிக்கும். இவரது அற்றத்தை மறைக்கும் கோவணம்
வேதமாதலின, அஃதில்லாத நக்க வுருவம் வேதத்தினுள்
விளங்குவதும், வேதங்கடந்ததும் ஆகிய நாதாந்தமாகிய சொரூபம்
என்ப. நக்கராம் அவர் - நக்கனாராகிய அவர். சுட்டுப் பெயர்
உயர்வு குறித்து வந்தது. “சிவனவனென் சிந்தையுள்“என்புழிப் போல.

     அவர் திருநல்லூர்
-அவர் விரும்பி வெளிப்பட வீற்றிருக்கும்
திருநல்லூர். “தேற்றப் படத்தரு நல்லூ ரகத்தே சிவனிருந்தான்“,
“வடபாற், கயிலையந் தென்பா னல்லூருந்தம் வாழ்பதியே“ என்ற
திருவிருத்தங்கள் காண்க. நல்லூரின் முதல்வனாரது திருவிழா
என்று கூட்டுக.

     திருவிழா விருப்புடன் வணங்குதலும், அன்ப ரமுதுசெய்
திருமடஞ் சமைத்து அவர்களை அமுது செய்வித்தலும்
என்னுமிரண்டுமே தாம் வருபயனாம் என்று கொண்டனர்
அமர்நீதியார். “மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதிசூடும்,
அண்ண லாரடியார்தமை யமுதுசெய் வித்தல், கண்ணி னாலவர்
நல்விழாப் பொலிவுகண் டார்தல், உண்மையாம்“ என்ற
திருஞானசம்பந்த மூர்த்திகள் புராணமும், அவரது திருமயிலைத்
தேவாரமும் காண்க. இதுபற்றியே இங்கு நாயனார் திருவிழா
வணங்கியதும், திருமடஞ்சமைத்ததும், அமுதளித்தலும் ஆயின.
506-பார்க்க.

     மிக்க சீர்வளம் திருவிழா - திருவிழா மிகுந்த
சிறப்புக்களுடன் கூடியிருந்தது என்பதாம். அவை பலவற்றையும்
“முத்துவிதானம்“ என்ற (குறிஞ்சிப்பண்) திருவாரூர்ப் பதிகத்தில்
அப்பர்பெருமான் எடுத்தருளி யிருப்பது காண்க. சீர்களின்
மிக்கதாகிய வீடுபேற்றினுக்கும் காரணமாகி மக்கட்கு உறுதி தரும்
திருவிழா. சீரினை வளர்க்கும் விழா என உரைப்பினுமமையும்.

     அன்பர்கள் அமுதுசெய் தக்க திருமடம் என மாற்றிக்
கூட்டுக. அன்பர்களிலே, தக்கார், தகவிலர் என்ற பாகுபாடின்மையால்
தக்க என்பதனை அன்பர்களுக்கு அடைமொழியாக்கி உரைப்பது
பொருந்தாதென்க. தக்க அன்பினை உடையார் - இறைவனை
அடைவிக்கத்தக்க அன்பு எனக்கொண்டு இயற்கைகுறித்த
அடைமொழியாக உரைப்பாருமுண்டு. திருமடத்திற்குத் தகுதியாவது
இடத்தாலும், பிறவசதிகளாலும், வரும் அன்பர்க்குத் தக்கவாறு
அமைதல். 513 பார்க்க. திருமடம் - இறைவன் எழுந்தருளுமிடம்.
திருக்கோயில் எனப் பெறுவதுபோலவே, அவனது அடியார்கள்
எழுந்தருளுமிடமும் திருமடம் என்று கூறப்பெறும். “திங்களு
ஞாயிறுந் தோயுந் திருமட மாங்கொன்று செய்தார்“ (திருநாவு -
புரா - 389), “அமைச்சனார் திருமடங் காடட“ (676), “செங்கமலத்
திருமடமற் றிது“ - (877) - திருஞானசம்பந்தமூர்த்திகள் புராணம் -
முதலிய ஆட்சிகள் காண்க.

     தொக்க சுற்றமும் தாமும் - தொக்க - தம்மைச் சுற்றிக்
கூடிய. சுற்றியிருப்பது சுற்றம். மனைவி மக்கள் முதலியோர்.
“சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான், பெற்றத்தாற் பெற்ற
பயன்“ - குறள். சுற்றமுந் தாமும் வந்து அணைந்தார் ஏன்

றதனாற்றமது ஊராகிய பழையாறையை விட்டுத் திருநல்லூரில் விழாச்
செய்வித்து. அடியார்க்கமுது அளித்து இருக்கும் பொருட்டு வந்து
குடிபுகுந்தனர் என்பதாம். தாம் இருக்கும் இடத்துச் சுற்றமுஞ் சுற்றும்;
(வாணிபத்தின்)வருவளத்தியல்பால் மிக்கவராதலின் சுற்றந்தழுவும்
கடமைப்பாடு முடையார்; சுற்றத்தாரையும் இறைவன் பணியிலும்
அடியார் பணியிலும் ஈடுபடுத்தும் கருத்துமுடையார்; சுற்றத்தாரும்
அவ்வாறே ஈடுபடும் கருத்தினர்; ஆதலின் சுற்றமும் தாமும்
வந்தணைந்தனர் என்க. இந்நாயனார் இல்லறத்தில் நல்வாழ்வு
வாழ்ந்தாராதலின் இல்வாழ்வாரால் ஓம்பப்பெறும் ஐவரில் ஒருவராகிய
சுற்றத்தாரைத் தழுவி விளங்கினார் என்றலுமாம். “தென்புலத்தார்
தெய்வம் விருந்தொக்க றானென்றாங், கைம்புலத்தாறோம்ப றலை“ -
குறள். பழையாறை தமது பிறந்த ஊரும், தொழில் நிகழ்ந்த ஊரும்
ஆயினும் அதைவிடுத்து, இறைபணியும் அடியார்க் கமுதுபடைக்கும்
பணியும் கருதித் திருநல்லூரிற் குடிபுகுந்தது நாயனாரது அன்பின்
உறைப்பினைக் காட்டிற்று. மனைவியாரும் மகனும் நாயனாருடன்
துலையிலேறிச் சிவபுரியணை தலின் சுற்றமும் என்று குறிப்பிட்டவாறு.

     தூயோர் - மன மெய்களாற் றூய்மையுடையார். 527-ல் கண்ட
நிகழ்ச்சியுடன் இதனை வைத்துப் பார்க்க.

     அணைந்தனராகிச் சமைப்பார் என, அணைந்தனர்
என்றதை முற்றெச்சமாக்கி யுரைப்பாரு முண்டு. பணிசெய்து
இருக்கைக்குத் திருமடஞ்சமைத்த பின்னரே சுற்றமுந் தாமும் வந்து
அணைதல் உளதாம்; ஆதலின் அவ்வுரை பொருந்தாதென்க.
சிவதருமங்களைப் பிறர்பால் விடாது தாமே நேரிற் கண்டு செய்தல்
வேண்டுமென்னும் விதி பற்றி நாயனார் திருநல்லூரிற் குடிபுகுந்தனர்
என்க. 4