512. பேணு மன்பரை நோக்கி“நீர் பெருகிய அடியார்க்  
  கூணு மேன்மையி லூட்டிநற் கந்தைகீ ளுடைகள்
யாணர் வெண்கிழிக் கோவண மீதலகேட்
                               டும்மைக்
காண வந்தன“ மென்றனன் கண்ணுதற்
                              கரந்தோன்.
11

     (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு வழிபடும் அன்பரை நோக்கி,
“நீர், (அன்பினாற்)பெருகிய அடியவர்களுக்கு மேன்மையில் உணவும்
ஊட்டிக், கந்தை - கீள் - உடை ஆகிய இவைகளையும், புதிய
வெள்ளிய உயர்ந்த கோவணங்களையும் கொடுத்தல் கேட்டு
உம்மைக் காணவந்தோம்“ என்று நெற்றிக்கண்ணை மறைத்து
வந்தஇறைவர் சொன்னார்.

     (வி-ரை.) பேணும் - வழிபடுகின்ற. “பேணியநற்
பிறைதவழ்செஞ் சடையினானை“ - (திருவாவடுதுறை -
திருத்தாண்டகம்), “பேணித் தொழுமவர் பொன்னுலகாள“ -
(திருவையாறு - திருவிருத்தம்) என்ற தேவாரங்கள் காண்க. முன்னர்
“அருள்பேணி“ (506) என்றதுங் குறிக்க.

     பெருகிய
- ஒரு அடியாருக்கு இடம், உணவு, உடை முதலிய
எல்லாம் உதவுதல் கேட்டுப் பல அடியார்களும் அணைவார்க
ளாயினமையால் அளவினிற் பெருகிய என்றலுமாம். “ஆளு நாயக
ரன்ப ரானவ ரளவி லாருள மகிழவே“ (444).

     மேன்மையில் ஊட்டி - மேன்மையாக ஊட்டுவித்து.

     மேன்மையில் ஊணும் என்று கூட்டி உணவின்
சிறப்புரைத்ததாகக் கொள்ளினு மமையும். ஊட்டுதலின் சிறப்பும்,
உணவின் சிறப்பும் 442, 443 திருப்பாட்டுக்களிற் பார்க்க. ஊட்டி -
ஊண்பித்து. தாய் குழந்தையை ஊட்டுவதுபோலக்.
காலம் -அளவு -
தகைமை - விருப்பு - முதலியன அறிந்து அன்போடு உண்ணச்
செய்து என்பதாம். “பானினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப் பரிந்து“
என்ற திருவாசகங் காண்க. உண்பது அடியவர் செயல் என்று காண
இயலாதபடி அவர் உண்பது இவர் ஊட்டுவதாகிய செயலேயாய்
நின்றது எனக் குறிக்கும் பிறவினைக் கூற்றிற் கூறிய சுவை காண்க.

     கந்தை முதலியன 504 பார்க்க. கந்தையாவது கிழிந்த
துணிகள் பல சேர்த்துத் தைத்த பொந்தையேயாயினும் பற்றற்ற
அடியார்கள் இதனையே வேண்டுவா ராதாலானும், வேண்டுவார்
வேண்டியது தருதலே சிறந்த கொடையாதலானும், அதனையே
உதவினர் என்ப.

     யாணர்வெண்கிழிக் கோவணம்
- இச்சரித நிகழ்ச்சிக்குக்
கோவணம் காரணமாதலின் இதனை உடை வகைகளினின்று வேறு
பிரித்து, யாணர் - வெண் - கிழி - என மூன்று அடைமொழிகள்
தந்து சிறப்பித்துக் கூறினார். யாணர் - புதிய - அழகிய - நல்ல
என்றலுமாம். கிழி - கிழி போன்ற. கிழி - பொன் முடிப்பு. எழுது
படம் என்றலுமாம்.

     உம்மைக்
காண - உம்முடைய தொண்டின் விளக்கங் கண்டு
உலகிற்குக் காட்டும்பொருட்டு என்க. “விளக்கங் காண“ - 369
பார்க்க. ஒன்றை வாங்கவாவது,கொண்டு போகவாவது அன்று;
காணமட்டும் என்ற குறிப்புமாம். “சும்மா உங்களைப் பார்க்க
வந்தேன்“ என்னும் உலக வழக்கும் காண்க.

     காண - கண்ணுதற் கரந்தோன் - காண வந்தவன்
கண்ணைத் திறந்து வராமல் அதனைக் கரந்து வந்தான் என்ற
நயமுங் காண்க. அக் கண் அடியாரிடத்துக் காட்டாது
மறைத்தருளுங் கண் என்ற குறிப்புமாம்.

     ஈவது கேட்டு - பேணிய அடியார்க்கு - என்பனவும்
பாடங்கள். 11