514. வணங்கு மன்பரை நோக்கியம் மறையவரிசைந்தே  
  “யணங்கு நீர்ப்பொன்னி யாடிநான் வரமழை
                                 வரினு
முணங்கு கோவணம் வைத்துநீர் தாரு“ மென்
                            றொருவெண்
குணங்கொள் கோவணந் தண்டினி லவிழ்த்தது
                            கொடுப்பார்,
13

     (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு வணங்கிய அன்பரைப்
பிரமசாரியாக வந்தஅந்த வேதியர் நோக்கி அவர்
வேண்டுதலுக்கிசைந்தவராய், “அணங்கு நீரையுடைய காவிரியில்
நீராடி நான் வரும்போது மழைவர நேர்ந்தாலும், (அப்போதுஉதவ)
உலர்ந்த இக்கோவணத்தை உம்மிடத்தில் வைத்து நீர் தருவீராக!

என்று கூறிக், குணமுடையவெள்ளிய கோவணத்தைத் தண்டிலிருந்து
அவிழ்த்து அதனைக் கொடுப்பாராகி,

     (வி-ரை.) வணங்கும் - மேற்கூறியவாறு, அமுதுண்ண
வேண்டுமென குறையிரந்து நின்று வணங்கிய.

     அன்பரை - குறையிரந்ததும் வணங்கியதும் அன்பு
காரணமாக என்பது குறிப்பார் அன்பர் என்றார்.

     மறையவர் - மறைகளை ஓதும் பிரமசாரியாய் வந்தவர் -
மறைக்குடையவர் - மறை சொன்னவர். மறையாற் சொல்லப்பட்டவர்
என்றலுமாம். தமது உண்மைவேடத்
தைப் பிரமசாரி வேடத்தினுள்
மறைத்து நின்றவர் என்ற குறிப்புமாம். புன்சடை கரந்த - (508)
முதலியன காண்க.

     இசைந்தே - அவரது வேண்டுதலுக்குத் தமது இசைவை
யுணர்த்திய பின், மொழியாலன்றித் தலையசைவு முதலிய மெய்ப்
பாடுகளாலும், பின்னர்க் கூறும் மொழியின் குறிப்பாலும் இசைவு
உணர்த்தப்பெற்றது.

     அணங்குநீர்ப் பொன்னி - தெய்வத்தன்மை பொருந்திய,
பொய்யாத நீர்ப் பெருக்கையுடைய காவிரி. காவிரியின்
தெய்வத்தன்மையானது திருக்கைலாயத்தில் உள்ள பொன்னி என்ற
தீர்த்தத்திலிருந்து ஒரு கமண்டலம் அகத்தியரால் கொள்ளப்பெற்று
வந்து பெருகிய வரலாற்றிலிருந்து விளங்கும். சரிதம் கந்தபுராணத்துட்
காண்க. கமண்டலத்தினின்றும் பெருகி உலகிற் போந்த பின்னர் மலர்
நீரால்வழிபட்டு இருகரையிலும் எண்ணில் சிவாலயத்து எம்பிரானை
இறைஞ்சலினாலும் (57) தெய்வத் தன்மை பெற்றதாம். பொய்யாத
நீரையுடையதால் நீர்ப்பொன்னி என்றார். “பூந்தண் பொன்னி
யெந்நாளும் பொய்யாதளிக்கும் புனல்“ - சண்டீசர் புராணம் (1).
பொன்னி - பொற்பொடிகளை மலையினின்றும் வாரி வருதலாற்
பொன்னின் குணம் விரவிய காரணத்தாற் பொன்னி எனப்பெறும்.
அணங்கு - அழகிய - தெளிவுடைய - என்பாருமுண்டு. உலகூட்டி
வளர்க்கும் நீரையுடைமையால் ஆறுகளைப் பெண் என வழங்கும்
வழக்கும் காண்க. பவாநி, கோதாவரி, கன்னி, குமரி முதலியவை
காண்க. அணங்கு - பெண் எனக்கொண்டு பொன்னி என்ற எமது
தாயாகிய பெண்ணின்பாற் கொண்ட நீரினாற் பெருகிய பொன்னி
எனவும் உரைத்தலுமாம். அணங்கின்நீர் என்க. பொன்னியாகிய
அணங்கின் நீராடி எனவும் கூட்டி யுரைக்க நின்றது.

     பொன்னி ஆடி நான் வர - நீவிர் வேண்டியவாறு
திருமடத்தில் அமுது செய்தற்கு முன்னர்நீராடல் வேண்டுமாதலின்
அதற்காகப், பொன்னி ஆடிவர என்று தனது இசைவினைக் குறிப்பிற்
கூறியவாறு.

     மழைவரினும் - இஃது முதுவேனிலாகிய ஆனிமாத மாதலின்
மழை வருதற்கேதுவில்லை; ஒருவேளைவந்தாலும் என்க. உம்மை
எச்சவும்மை. நாயனார் திருவடிப்பேறு பெறும் இந்நாள் ஆனிமாதப்
பூர நாள் என்பது காண்க. மழை வராவிடின் தண்டின்மேலுள்ள
மற்றொரு கோவணமே உதவும்; வரினும் இதுவுதவுவதாக என்று
கூறியதுமாம். உணங்கு - காய்ந்த - உலர்ந்த.

     வெண்குணங்கொள் கோவணம் - வெண்கோவணம்,
குணங்கொள் கோவணம் எனத் தனித்தனிப் பிரித்துக்கூட்டுக.
குணம்
- இங்கு நிறங்குறிப்பதாகக்கொண்டு வெண்ணிறங் கொண்ட
கோவணம் என ஒன்று சேர்த்தி யுரைப்பாருமுண்டு. இக்கோவணம்
மறையேயாமாதலானும், மறை இறைவனது வாலறிவாகிய மெய்ஞ்
ஞானத்தினின்றும் வெளிப்பட்ட நாத காரியமாகி அதன் குணமே
கொள்ளுமாதலானும் (பிறப்பிடத்தின்) வாலிய
குணங்கொள்கோவணம்என்ற குறிப்புமாம். “வாலறிவன்“ என்ற
குறளில் மெய்யுணர்வினை யுடையான் எனப் பரிமேலழகர் உரை
கூறியது காண்க

     தண்டு - இவர் கையிற் றாங்கி வந்தது. (510) பார்க்க.
தண்டினில் - தண்டினின்றும். அவிழ்த்து - தண்டிலிருந்த கோவண
மிரண்டினிலொன்றை அவிழ்த்து. எஞ்சிய கோவணம் இவர்
திரும்பிவரும்போது நனைந்து ஈரமாயினமை பின்னர்க் காண்க. (520).
இறைவர் தந்த கோவணம் அருளுருவாதலின் மலசம்பந்தமாகிய
தற்போதத்தை வாட்டி நின்மலமாகிய அன்பினைத் தருவதாம்.
நின்மலமாதலின் வெண் என்றும் மலத்தை வாட்டுதலின் உணங்கு
என்றும் குறித்தார் என்றுரைப்பாருமுண்டு.

     கொடுப்பார் - முற்றெச்சம். வரும்பாட்டில் “என்று
கொடுத்தார்
“ என்றதனுடன் முடிந்தது. 13