517. தந்த கோவணம் வாங்கிய தனிப்பெருந்
                              தொண்டர்
 
  முந்தை யந்தணர் மொழிகொண்டு முன்புதாங்
                              கொடுக்குங்
கந்தை கீளுடை கோவண மன்றியோர் காப்புச்
சிந்தை செய்துவே றிடத்தொரு சேமத்து
                              வைத்தார்.
16

     (இ-ள்.) வெளிப்படை. (பிரமசாரியார்) தந்த கோவணத்தை
வாங்கிய ஒப்பற்ற பெருந் தொண்டர் முந்தையந்தணராகிய அவரது
மொழியினைக் கொண்டவராய், இதற்குமுன் தான் அடியார்களுக்குக்
கொடுப்பதற்காக வைத்திருக்கும் கந்தை - கீள் - உடை -
கோவணம் எனுமிவற்றை வைத்த இடத்தினன்றி ஒரு காவலுள்ள
இடமாய் மனத்தில் ஆலோசித்து அவ்வாறே தனியான ஓரிடத்தில்
ஒப்பற்ற சேமத்தில் அதனை வைத்தார்.

     (வி-ரை) தந்த கோவணம் வாங்கிய தனிப்பெரும்
தொண்டர்
- முன்னர்க் “கொடுத்த கோவணங் கைக்கொண்டு
கோதிலா வன்பர்“ என்ற ஆசிரியர் இங்குத் தந்த - என்றும்,
தொண்டர் - என்றும் கூறினார். கொடு என்பது மிக்கோனுரையும்,
தா என்பது ஒப்போனுரையுமா மென்பதிலக்கணம். இறைவர்
கொடுத்தபோது அவர் கொடுப்பாராயும் நாயனார் ஏற்போராயு
மிருந்தமையால் கொண்ட அன்பர் என்றார். கொள்வதற்கு அன்பே
காரணமாயினமையின் அன்பர் என்றதாம். அவ்வாறு கொண்ட
பின்னர் அந்நிலை மாறி அதனைத் திருப்பித் தரும் நிலையிலே
நாயனார் தருவோரும் அவர் பெறுவோருமாயினர். கோவணமோ
திருப்பித் தரப்படாமல், நாயனார், கோவணத்துக்கு ஒப்பாக
ஒப்புவித்துத் தன்னையே தந்தமையால் ஒப்புமை மொழியாகிய தந்த
கோவணம் வாங்கிய தொண்டர் என்றார். பின்னரும் “நான் தந்த
கோவணத்தை“ (520) “நீர் தந்த கோவணத்தை“ (524), “உம்கையிற்
றர“ (532) என்றமை காண்க. முதிர்ந்த அன்பின் விளைவே
தொண்டா மென்பதாம். “முதிருமன்புடைத் தொண்டர்“ (519),
“கொண்ட வன்பினிற் குறைபடா அடியவரடிமைத், தொண்டு
மொத்தலால்“ (545) என்ற இடங்களில் இக்கருத்தினை விளங்கக்
காண்க. முன்னர்க் கோதிலா அன்பர் என்றதற் கேற்ப, அதன்
முதிர்ந்த நிலைமையில் தனிப்பெருந்தொண்டர் என்றார்.
சிறுமையிலுந் தனிமை யுண்டாதலின் அதனை விளக்கத் தனிப்
பெரும்
என்றார்.

     முந்தை அந்தணர் - அந்தணர்கட்கெல்லாம் முற்பட்டவர்.
தந்தை - தந்தை தன்றந்தை - அவர் தந்தை - என்றிவ்வாறு
போயின முடிவில் முதலிலே நிற்பவர். அந்தணன் என்னும்
பிரமனிடம் கச்சியபர் முதலிய முனிவர் தோன்றி அவர் மூலம்
உலகில் தோற்றமுளதாதலால் அவன் பிதா மகன் எனப்படுவான்;
அவனுக்குப் பிதா விட்டுணு; அவற்கும் பிதா இவர்; ஆதலின்,
முந்தை - முன்னோனாகிய - அந்தணர் என்ற குறிப்புமாம்.
அந்தணர்கட்கெல்லாம் மூல அந்தணராகிய பிரமாவைப் படைத்து
வேதங்களை அவருக்கு ஓதுவித்த அந்தணர் சிவபெருமான் என்பது
உபநிடதம்.

     மொழிகொண்டு - காப்பில் வைக்கும்படி சொல்லிய
சொல்லினை யேற்றுக் கொண்டு. அவர் மொழியாகிய மறையேயாம்
கோவணத்தினைக் கொண்டு என்றலுமாம். கொடுக்கும் -
அடியார்களுக்குக் கொடுக்கும்.

     கோவணம் அன்றி - கோவணம் முதலியன வைத்த
இடமல்லாது. பொருளின் பெயர் அது வைத்திருக்குமிடத்திற்கு
ஆகுபெயர்.

     ஓர் காப்புச் சிந்தைசெய்து - தனியான காவல்பெற்ற
நிலையினைச் சிந்தித்து.

     வேறிடத்து - அவ்வாறு சிந்தித்து நிச்சயித்த தனியிடத்திலே.
வேறு -தனி. காப்பு - காவல்பெற்ற இடத்துக்காயிற்று. “வேறிடத்து“
- 479 பார்க்க. சிந்தை செய்து என்பது நாயனார் இதனைச்
செம்மைபெறச் சிந்தித்த சிறப்பு உணர்த்திற்று.

     ஒரு சேமத்து - ஒப்பில்லாத மிக்க காவலிலே. இடமும்
தனிமை; அவ்விடத்துக் காவலும் தனிமை. ஆதலின் ஓர் காப்பு
என்ற பின்னம் ஒரு சேமத்து என்றது கூறியது கூறலாகாமை
உணர்க. 16