521. ஐயர் கைதவ மறிவுறா தவர்கடி தணுகி  
  யெய்தி நோக்குறக் கோவண மிருந்தவே
                              றிடத்தின்
மையில் சிந்தையர் கண்டிலர்; “வைத்தகோ
                              வணமுன்
செய்த தென்“னென்று திகைத்தனர் தேடுவா
                              ரானார்.
20

     (இ-ள்.) வெளிப்படை. ஐயருடைய கள்ளங் காரணமாக, அறிவு
பெறாதவராகிய நாயனார் விரைந்து உள்ளே சென்று நோக்கவே,
தனியிடத்திற் சேமத்தில் வைத்திருந்த அவரது கோவணத்தைக்
கண்டிலர்; “நான் முன்னே இங்குச் சேமத்தில் வைத்த கோவணம்
செய்ததென்னை?“ என்று திகைத்து அதனைத் தேடுவாராயினர்.

     (வி-ரை.) ஐயர் - பெருமையுடையவர். கைதவம் -
பொய்ம்மை - வஞ்சம். ஐயர் கைதவம் - ஐயராகியிருந்தும் செய்த
கைதவம். முரண் அணி. “கைதவம் பேச மாட்டேன்“ - திருஞான
புரா - 749. கோவணத்தை - வைத்த இடத்தில் இல்லையாகச் செய்து,
அதனை அவர் அறியாமற் செய்து, பின் தேடவும் செய்து,
இல்லையென்று சொல்லவும் செய்த செயல் கைதவம் எனப்பட்டது.
கைதவம் - இங்கு மறைப்புச் சத்தியாம். இறைவன் அறிவிக்கவே
உயிர்கள் அறியும். அவன் அருளால் அறிவியாவிடில் அறியா.
“காட்டுவித்தா லாரொருவர் காணா தாரே; காண்பாரார் கண்ணுதலாய்
காட்டாக் காலே“ என்றருளினார் அப்பர் சுவாமிகள். பின்னர்
உண்மையை இறைவர் காட்டியருளும் நிலையை “அங்கணர்
அருளால்“ (542) என்பது காண்க. இங்கு மறைப்பு என்னும்
திரோதான சத்தியாகி நின்றதே பின்னர் அருட்சத்தியாய் விளைந்தது
என்ற ஞான சாத்திர உண்மையும் காண்க.

     அறிவுறாதவர் - மறைப்புச் சத்தி தொழிற் பட்டமையால்
அறிவுபெறாதவராகி. அறிவுறாதவர் தேடுவாரானார் என முடிக்க.

     இருந்த வேறிடத்தில்
- “ஓர் காப்புச் சிந்தைசெய்து
வேறிடத்து ஒரு சேமத்து வைத்தார்“ (517) என்றபடி தாம் வைத்த
தனியிடத்தில். மையில் சிந்தை - அழுக்காறு அவா வெகுளி
முதலியவற்றி லொன்று மில்லாத சிந்தை. இவை சிந்தைக்
குற்றங்களாம். தாமே சிறிது போழ்திற்கு முன் காப்புச் சிந்தித்து
வேறிடத்துச் சேமத்தில் வைத்தனராதலின் ஐயம் முதலிய எவையும்
சேர்தற்கியல்பில்லை என்றபடி. இதுவேயு மன்றி எஞ்ஞான்றும்
எக்குற்றமும் சேராத தூய சிந்தையுடையார் என்றலுமாம்.

     வைத்த கோவண முன் செய்தது என்? - வைத்த
- தாமே
சிந்தித்து வைத்த. முன் - வைத்த எனவும், முன்செய்தது - தாம்
தேடும் முன்னர்ச் செய்தது எனவும் இருவழியும் கூட்டியுரைக்க
நின்றது. தாம் முன்னர்ச் செய்தது என்றது இவ்விடத்து வைத்தேனோ
அன்றி வேறிடத்து வைத்தேனோ என்றுரைப்பாருமுளர். மையில்
சிந்தையார்
என்றதனால் இவ்வையத்திற்கிடமில்லை என்க.

     கோவணம் செய்தது
- தாம் செய்ததன்று; பிறர்
செய்ததுமன்று; ஆதலின் கோவணம் தானே செய்ததாகல்
வேண்டுமென்பதாம். அக்கோவணத்திற்கே இவ்வாறு மறைவு செய்து
சரிக்கும் செயல் உண்டென்று ஐயங்கொண்டார் போன்று வரும்
பாட்டிலும் “கோவணம் போயின நெறிமேற் றப்பியது“ என்பதும்
காண்க. நாம் செய்ததென்ன? நம்மைக் கோவணம் செய்ததென்ன?
என்றுரைப்பாருமுண்டு.

     திகைத்தனர்
- 463 பார்க்க, துணியக்கூடாத நிலையிலே
திகைத்தனராகித் தேடினார்.

     எய்த முன்சென்று
- என்பதும் பாடம். 20