522. “பொங்கு வெண்கிழிக் கோவணம் போயின
                               நெறிமேற்
 
  சங்கை யின்றியே தப்பின“ தென்றுதஞ் சரக்கி
லெங்கு நாடியுங் கண்டில; ரென்செய்வார்; நின்றா;
ரங்கண் வேதியர் பெருந்தொடக் கினிலகப்
                                பட்டார்.
21

     (இ-ள்.) வெளிப்படை. (ஐயரது) “பொங்கு வெண்கிழிக்
கோவணம் போன வழியிலே சந்தேகமில்லாமற் றப்பிவிட்டது“ என
முடிவு கொண்டு, தமது துகில் முதலிய சரக்குகளிலேயும் எங்கும்
நாடியறிந்தும் கண்டிலர்; என்செய்வார்; (ஒன்றுந் தோன்றாது) நின்றார்;
அங்கண் வேதியருடைய பெரிய தொடக்கிலே அகப்பட்டார்.

     (வி-ரை.) பொங்கு வெண் கிழிக் கோவணம் - பெருமை
பொங்கும் என்க. “ஓங்கு கோவணப் பெருமை“ (515) என அவர்
கூறியதனை நினைவுட்கொண்ட நாயனார் இங்குப் பொங்கு
கோவணம்
என எண்ணினார். வெண்மையாகிய கிழி போன்ற
கோவணம். “யாணர் வெண்கிழிக் கோவணம்“ (512) என்றதுங்
காண்க; கிழித்தலாற் பெற்ற கோவணமென்றலுமாம். “அக்கிழித்த
கோவணம்“ (532)

     போயின நெறி மேல் - போதல் - புகுதல்; புக்க வழியிலே.
தாம் வைக்கப் புகுந்த அந்த வழியிலே. மேல் - இல் என்ற
ஐந்தனுருபாக நீக்கப் பொருளில் வந்தது. நெறியில் - நெறியினின்றும்
-தப்பினது என்க. போயின நெறி - தன் இனமென்று போயிருக்கும்
என்ற வழி எனுங் குறிப்புமாம். தப்பினது - தவறி வீழ்ந்ததோ என
ஐயவினாக் குறித்த ஓகாரம் விகாரத்தாற் றொக்கது.

     தம் சரக்கில் - தம்மதாகத் தாம் கொண்டிருந்த துகில், கீள்,
உடை, கோவணம் முதலிய சரக்குக்களிலே.

     எங்கும் - எல்லாவற்றிலும் - எவ்விடத்தும். “எந்நிலத்தினும்
உள்ளன வருவளத்தியல்பால் அந்நிலைக்கண் மிக்க“ (503) வாணிபம்
வாய்த்தவர் ஆதலின், தாம் வைத்திருந்த சரக்குப் பலவற்றுள்ளே
எங்கும். உம்மை முற்றும்மை. ஒன்றும் ஓரிடமும் ஒழியாது.

     நாடியும் - தாம் தேடியும் கருதிப் பார்த்தும். பிறரால்
நாடுவித்தும் என்றலுமாம். உம்மை சிறப்பும்மை.

     அங்கண் வேதியர் - அழகிய அருட்கண்ணுடைய இறைவர்.
“காண வந்தனம்“ - (512) என்று அவரே கூறினாராதலின், அவ்வாறு
காண அருட் கண்ணுடன் வந்தார் என்றது குறிப்பாம். அஃது
அருட்கண் என்பார் “கண்ணுதற் கரந்தோன்“ என்றதனாலுங்
குறித்தார்.

     வேதியர் - வேதிப்பர் என்ற குறிப்புமாம். வேதித்தல் -
அடியவர்களது உலகச் சார்பினை யெல்லாம் தம் வசமாக்கித் தம்
சார்பினை யவர்க்களித்து அவர் தன்மையினை மாற்றுதல். தரிசன
வேதி-பரிசன வேதி என்பன காண்க. இங்கு வேதிக்கத்
தொடங்குகின்றராதலின் வேதியர் என்ற சொல்லாற் கூறினார்.
“வேதியாதவர்தம்மை வேதிப்பன“ (339). வேதியர் - மறையோர்
என்றலுமாம்.

     பெருந்தொடக்கு - தொடக்கு - தொட்டுப் பற்றிக்கொள்வது.
பொருந்தொடக்காவது அதன் பற்றினின்றும் மீள முடியாதது.
இறைவனாற் பற்றப்பட்ட - நிலை மீளா நெறியேயாம்.
பெருந்தொடக்கு மாயை என்பாருமுண்டு.

     அகப்பட்டார் - தொடக்கின் அகத்தே பட்டவர் - அதனுட்
சிக்கியவர்.

     அவர் - கண்டிலர் - நின்றார் எனப் பெயர்ச் சொற்களாகவும்,
கண்டிலர் - நின்றார் - அகப்பட்டார் என வினைமுற்றுக்களாகவும்
உரைக்க நின்ற நயம் காண்க. வினைமுற்றாகிய வழிப் பெயர்
மயங்கும் தன்மை இப்பெருந் தொடக்கின் றன்மை யாம் என்பதும்
உன்னுக. வேதியர் பெருந் தொடக்கினில் அகப்பட்டார் ஆதலின்,
அதன் பயனாக உலகத் தொடக்கினின்றும் புறப்பட்டார் எனக்
காரணகாரிய முறைப்படுத்தி, இப்பாட்டில் அகப்பட்டார் என்ற
ஆசிரியர் வரும் பாட்டிற் புறப்பட்டார் என முடித்த நயமும்
உள்ளுறையுங் காண்க.

     பெருந்துவக்கினில் - என்பதும் பாடம் 21