527. “நல்ல கோவணங் கொடுப்பனென் றுலகின்மே
                                னாளுஞ்
 
  சொல்லு வித்ததென் கோவணங் கொள்வது
                             துணிந்தோ?
வொல்லை யீங்குறு வாணிப மழகிதே யுமக்!“கென்
றெல்லை யில்லவ னெரிதுள்ளு னாலென
                           வெகுண்டான்.
26

     (இ-ள்.) வெளிப்படை.“நல்ல கோவணந் தருவேன் என்று
உலகிலே பல நாளும் சொல்லச் செய்வது எனது கோவணத்தைக்
கொள்வதற்குத் துணிந்துதானோ? விரைவாக நீர் இங்குச் செய்த
வாணிபம் உமக்கு அழகிதே!“ என்று கூறி, எல்லையிலாதவராகிய
இறைவர் எரிதுள்ளினாற் போலச் சினந்தார்.

     (வி-ரை,) நல்ல....சொல்லுவித்தது - நாயனார் உலகில்
தமது செயலைத் தாமே விளம்பரப்படுத்தியதாகக் கூறியவாறு.
விளம்பரப்படுத்தலே (Advertisement) வியாபார முறை என்ப
திந்நாள் மக்களுக்குச் சொல்லவேண்டுவதில்லையன்றோ?
சொல்லுவித்தது - பலரும் எடுத்துச் சொல்லும்படி செய்தது.
உலகின் மேல்
- உலகிலே மேற்போக்காக. மேன்மையாக
என்றலுமாம்.

     கொடுப்பன் என்று சொல்லுவித்தது.......கொள்வது
துணிந்தோ?
- கொடுப்பதும் கொள்வதுமே வாணிபத்
தொழிற்குரியன. “கொடுப்பதுங் குறைபடாது கொள்வது மிகைபடாது“
என்ற தமிழ் இலக்கியமும் இங்கு நினைவு கூர்க. இக்கருத்தினைத்
தொடர்ந்தே பின்னரும் “ஈங்குறு வாணிபம் அழகிதே“ என்றார்
இங்கு மறையவர் நாயனாரது குலத்தொழிலையும் சுட்டி இழித்துக்
காட்டுவது போலக் கூறியது. தமது மிக்க வெகுட்சியையும் அறிவித்து,
அவர் செயலைமிக இழிவுபடுத்துவது போன்று காட்டி, அதற்கும்
கீழ்ப்பட்டுநின்ற அவரது அன்பின் பெருமை காட்டுதற்காம்.

     அழகிதே - அழகன்று. எதிர்மறை குறித்தது. “நிலைமை
நன்று“
(526) என்றது போல உடன்பாட்டுப் பொருட் குறிப்பும்
பெறக்கூறிய சுவை காண்க.

     எல்லையில்லவன் - அளவுட்படாதவன். “அளவிலா
அளவுமாகி“ முதலியனவாக முன்னர் உரைத்தனவுங் காண்க.

     எரிதுள்ளினால் என வெகுண்டான் - கோப மிக்கவழிக்
கண்கள் தீப்பொறி பறக்க உள்ளனபோலச் சிவக்கும். இது மிகு
கோபத்தின்தியல்பு என்பர். தீயும் சிவந்து மிகுதியும் பற்றியவழிப்
பொறி பறக்க நிற்கும். ஆதலின் - எரிதுள்ளினாலென தீப்பொறி
பறக்க மிகுவதுபோல என்றதாம். இதனைக் “கதமிக் கெரிகதிரின்
முன்னிருள்போல்“ என்ற சிவஞானபோதம் 10-ம் சூத்திர உதாரண
வெண்பாவினுரையில் “ஒப்புமைபற்றிக் கதமிக் கெரிகதிர்“ என்றார்.
ஒப்புமையாதல் “எல்லை யில்லவ னெரிதுள்ளினாலென வெகுண்டான்
என்றதனானுமறிக“ என்று சிவஞானபோத மாபாடியத்துள்
விளக்கியருளினார் எமது மாதவச்சிவஞான சுவாமிகள்

     அழகிதீதுமக் கென்று - என்பதும் பாடம். 26