528. மறிக ரந்துதண் டேந்திய மறையவர் வெகுளப்  
  பொறிக லங்கிய வுணர்வின ராய்முகம் புலர்ந்து
“சிறிய வென்பெரும் பிழைபொறுத் தருள்செய்வீ!
                                  ரடியே
னறிய வந்ததொன் றன்“றென வடிபணிந்
                                தயர்வார்;
27

     (இ-ள்.)வெளிப்படை. மானை ஒளித்துத் (அதற்குப் பிரதியாகத்)
தண்டினை யேந்திவந்த மறையவர் இவ்வாறு கோபிக்க,
“உணர்வெல்லாம்பொறி கலங்கியவராகி முகம்வாடிச், “சிறியவனாகிய
எனது இந்தப் பெரிய பிழையினைப் பொருத்தருள் செய்வீராக; இஃது
அடியேன் அறியும்படி வந்து நிகழ்ந்ததொரு பிழையன்று“ என்று
கூறி அவரது திருவடிகளில் நிலமிசை வீழ்ந்துஅயர்வாராகி,

     (வி-ரை.) மறிகரந்து தண்டு ஏந்திய மறையவர் - மறி -
மான். தாருக வனத்து இருடிகள் செய்த யாகத்தில் எழுந்த உலகை
அழிக்க வந்தது; அதனை இறைவர் தமது இருவிரல் நுனிகளில்
ஏந்தினார் என்ற சரிதம் புராணங்களுட் காண்க. மான் காட்டி மான்
பிடிப்பது என்பது ஒருநெறி; தன் முன்னே தூங்குகின்ற மாணவகனை
ஆசான் தண்டு கொண்டு எழுப்புவன் என்பது மற்றொரு நெறி;
இங்கு மானைக் கரந்து பின்குறித்த நெறியினில் வருவார் போன்று
வந்தனர் என்றதோர் உட்குறிப்பும் காண்க. “ஆசான் முன்னே துயின்
மாணவகனைத், தேசாய தண்டாலே யெழுப்புஞ் செயல்போல்“
என்பது திருமந்திரம். இறைவன் குருவாய் வந்து ஆட்கொள்ளும்
முறையினையே மான்காட்டி மான்பிடிப்பதுபோல மானிடச் சட்டை
சாத்தி வருவதாம் என்பது மரபு. மானை ஒளித்து அதன் தானத்தில்
தண்டினை யேந்தினர். “புன்சடை கரந்ததோர் திருமுடிச்சிகை“ (508),
“கண்ணுநற் கரந்தோன்“ (512), “கங்கை மடுத்ததும்பிய வளர்சடை
மறைத்தவம் மறையோர்“ (516) என்று முன்னர்ப் பலபடியும்
இவ்வாறே குறித்தனவுங் காண்க. மறையவர் - கரந்தமையால் -
மறைத்ததனால் - மறையவர் என்றதும் குறிப்பு. (516)

     வெகுள - இவ்வெகுட்சியும் மறைவானதேயாம். இது
திரோதானமாகியஆதிசத்தி சொரூபம். இது பின்னர்
அருட்சத்தியாகியது. இது வெகுட்சிபோலக்காட்டியதேயன்றி
உண்மையில் வெகுட்சியன்று. உண்மையின் வெகுட்சியாயின் உலக
மழியும். மன்மதன் - பிரமன் - திரிபுராதிகள் முதலியோர் அழிந்த
சரிதங்கள் காண்க.


     பொறி கலங்கிய உணர்வு - பொறி - புலன்களை அறியும்
கருவிகள். அவை கலங்கியபோது உணரும் இயல்பில்லையாம்.
இன்னது செய்வதென்று ஒன்றும் தோன்றாத நிலைமை குறித்தது.
“நினைவ தொன்றிலர்“ (523) என்ற நிலையின் மேலும் அதற்குப்
பரிகாரமாகத் தாம் வேண்டியஅதுவும் ஏற்கப்படாமல் இவ்வாறு
மறுக்கப்பட்டபோது, பின்னும் உணர்வு கலங்கினார் என்க. தம்
செயலற்றநிலையை விளைத்தது. “நஞ்செய லற்றிந்த நாமற்ற
பின்னாதன், றன்செய றானே யென் றுந்தீபற“ என்றபடி இதன்பின்
இங்கும் நாயனார் செயல் என்பதொன்றின்றி எல்லாம் நாதன்
செயலே யாவதுங் காண்க. “நான் கெட்டவா பாடி“, “தன்னை
மறந்தாள் தன்னாமங் கெட்டாள்“ என்றற் றொடக்கத்த
திருவாக்குகளும் காண்க.

     சிறிய என் பெரும்பிழை பொறுத்தருள் செய்வீர் -
“சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயிற் பொறுப்பது
கடன்“; ஆனால் “சிறியோர் பெரும் பிழை செய்தனராயின் பெரியோ
ரப்பிழை பொறுத்தலு மரிதே“ என்பன நீதிநூல் விதிகள். ஆயின்
இங்குப் பெரும்பிழை என ஒப்புக் கொண்ட நாயனார் அதனைப்
பொறுக்குமாறு அடிகளை வேண்டியது என்னை? எனின், அதன்
காரணமறிவிப்பாராய் “அடியேன் அறியவந்ததொன் றன்று“ என
உடன்கூறியவாறு காண்க. அருள் செய்வீர் - பிழை பொறுத்து
மாற்றுக் கோவணமாக இதனைச் சாத்தி யருளுவீர்.

     அடிபணிந்து அயர்வார் - முன்னர், நின்று வணங்கினார்
(525). அதுபோதாத போது அடியில் வீழ்ந்து அயர்வார். அடி
வீழ்தலுக்கு மேற்பட்ட பணிவும் தீர்வுமில்லை என்பர். அயர்வார் -
அயர்வாராகி. முற்றெச்சம். அயர்வார் வருந்துவாராகி - அடிமிசைப்
பலமுறை பணிந்தார் என வரும்பாட்டுடன் முடிந்தது. 27