529. “செயத்த கும்பணி செய்வனிக் கோவண மன்றி  
  நயத்த குந்தன நல்லபட் டாடைகண் மணிக
ளுயர்த்த கோடிகொண் டருளு“மென் றுடம்பினி
                               லடங்காப்
பயத்தொ டுங்குலைந் தடிமிசைப் பலமுறை
                               பணிந்தார்.
28

     (இ-ள்.) வெளிப்படை. “செய்யத்தக்கதென்று தேவரீர்
பணிக்கும் பணி எதுவோ அதனைச் செய்வேன்; இந்தக்
கோவணமேயன்றி, விரும்பத்தக்கன வாயுள்ள நல்ல பட்டாடைகளும்
மணிகளும் என்னும் இவற்றிலே உயர்ந்தனவாகிய கோடிகளைத்
தேவரீர் ஏற்றுக்கொண்டருளுவீர்!“ என்று சொல்லி உடம்பிலே
அடங்கமுடியாது மீதூர்ந்த பயத்தினை உடையராகி மனங் குலைந்து,
அவரது திருவடிமேல் பலமுறையும் பணிந்தனர்.

     (வி-ரை.) செயத்தரும் பணி - தகுவதாய் நீர் பணிக்கும்
பணி. முன் நான் செய்தவை செயத்தகாதன; கோவணம்
போக்கியதொன்றும் அதற்குப் பிரதியாக இதனைத் தரலாம் என்று
எனது தற்போதத்தாலே எண்ணியது மற்றொன்றுமாக இருவகையிலும்
தவறு செய்தேன்; இனி நான் செய்வேன் என்பதின்றித் தேவரீர்
செய்தக்க என்று பணிக்கும் பணிகள் எவையேயாயினும் அவற்றைச்
செய்வேன் என்பதாம்.

     நயத்தகுந்தன - நயக்கத்தகுந்தனவாகிய. நயத்தல் -
விரும்புதல். நயத்தகும் தனம் - தனம் - ஆடைகள் ஒழிய மற்றை
ஐசுவரியங்கள் என்று கொண்டுரைப்பாரு முண்டு.

     பட்டாடைகள் - மணிகள் - இவ்விரண்டுமே இவர்
வாணிபஞ் செய்த சரக்குக்களாம். “பொன்னு முத்துநன் மணிகளும்
பூந்துகில் முதலா“ (503) காண்க. போயின கோவணத்தின்
இனம்பற்றிப் பட்டாடைகளை முன்னர்க்கூறினார். உயர்ந்தகோடி -
உயர்த்த
- உயர்ச்சியை யுடையனவாய். உயர்ந்த என்பது எதுகை
நோக்கி உயர்த்த என வந்ததென்றலுமாம். கோடி - அனேகம்
என்ற பொருளில் வந்தது. உயர்த்தப்பட்ட கோடி என்னும் தொகை
என்பாருமுண்டு. குணத்தால் உயர்வும் எண்ணால் அளவின்மையும்
கொண்ட. கோடி - புதுத்துணி - மணிகளின் எண்ணிக்கை
என்றலுமாம்.

     கொண்டு - போன கோவணத்திற்குப் பிரதியாக
ஏற்றுக்கொண்டு.

     உடம்பினில் அடங்காப் பயம் - தாம் அடக்கினும்
அடங்காது வெளிப்படும் அடையாளங்களுடன் காட்டும் பயம். உடல்
நடுக்கம் முதலியவை பயமிகுதியின் வெளித் தோற்றங்களாம்.
குலைந்து - மனமுடைந்து. நிலை குலைந்து.

     அடிமிசைப் பலமுறை பணிந்தார் - முன் பாட்டில்
அடிபணிந்து என்றது ஒரு நிலை; தன் செயலற்ற நிலை மேலும்
முதிர்ந்த செயல் இங்குக் குறிக்கப்பட்டது. பிழை பொறுத்தருளும்
என வேண்டிய நாயனார் அவ்வாறு பொறுத்தருள்வதில் மணிகள்
பட்டாடைகள் கோடி கொண்டருளும் என அதன் மேலும் வேண்டிப்
பலமுறை பணிந்தனர் என்க. 28