530. பணியு மன்பரை நோக்கியப் பரம்பொரு ளானார்  
  தணியு முள்ளத்த ராயினார் போன்று, “நீர் தந்த
மணியும் பொன்னுநல் லாடையு மற்றுமென்
                                செய்ய?
வணியுங் கோவண நேர்தர வமையு“மென் றருள,
29

     (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு பணியும் அன்பரைப பார்த்து,
அந்தப் பரம்பொருளாயினவர், கோபந் தணிந்த
மனத்தையுடையார்போலக் காட்டி, “நீர் தந்த மணி பொன்,
ஆடைகளும் மற்றும் பிறவும் எனக்கு என்ன பயன்தரும்?
(அவற்றைக் கொண்டு நான் செய்வதென்னை?) அணியுங்
கோவணத்திற்கு நேராகிய கோவணத்தைத் தருதலே சாலும்“ என்று
அருளிச் செய்ய,    

     (வி-ரை.) பணியும் அன்பரை - அன்பு மூலத்தினாலே
பலமுறையும் பணிந்த நின்றவரை.

     பணியும் - இறை இவ்வாறு இணங்கியமொழி - சொல்லும்வரை
பணிந்து கொண்டே யிருந்தனர் என்பார் பணிந்த என்னாது
பணியும்
என்றார்.

     அப்பரம்பொருள் ஆனார் - அகரச்சுட்டுச் சிறப்புக்
குறித்தது. பரம்பொருள் - எல்லாப் பொருள்கட்கும் மேலானவர் -
எஞ்சி நிற்பவர்.

     தணியும் உள்ளத்தர் ஆயினார் போன்று - உண்மையில்
வெகுண்டவரல்லர். ஆதலின் தணிந்தார் போன்று காட்டினர்
என்றார்.

     தந்த - தருவதாகச் சொன்ன. கொண்டருளும் என்ற
உடன்பாட்டு மொழியே தந்ததாயிற்று என்று கொண்டுரைத்தலுமாம்.

     மணியும் பொன்னும் ஆடையும் மற்றும் - நாயனாரது
வாணிபப் பொருள்கள் எல்லாவகையும் குறித்தது. 503 பார்க்க.
மற்றும் - இவை போல்வனவாகிய கோவணமல்லாத பிறவும்.

     என்செய்ய - என்ன செய்தற்குப் பயன்படும்? இவை
பிரமசரிய நிலையில் உள்ள எனக்கு எதற்காக உதவும்? எனக்கு
உதவா. ஆதலின் அவை வேண்டுவதின்று என்றபடி. என் செய்ய -
என்றதைக் கோவணத்துக்கு அடைமொழியாக்கிச் செய்ய -
செம்மையே தருவதாய், நான் அணியும் கோவணம்
என்றுரைப்பாருமுண்டு. இவ்வுரைக்கு வரும்பாட்டிலே இசைந்து
அருள் செய்தீர்
- என்று பாடங் கொண்டுரைப்பர்.

     நேர்தர அமையும் - நேரானது - எடையிலே சமனானது -
ஆகியதொரு கோவணம் தருதலே அமையும். நீர் எனக்குத்
தருவதாகச் சொல்லும் மணி முதலியன எதற்காக வேண்டும்? நான்
அணியும் கோவணத்திற்குச் சமனான எடையுள்ள கோவணம்
தருதலே அமையும் என்றது கருத்து. 29