538. மங்கை பாகரா மறையவர் மற்றதற் கிசைந்தே  
  “இங்கு நாமினி வேறொன்று சொல்லுவ
                             தென்கொல்!
அங்கு மற்றுங்க டனங்களி னாகிலு மிடுவீர்;
எங்கள் கோவண நேர்நிற்க வேண்டுவ“
                             தென்றார்.
37

     (இ-ள்.) வெளிப்படை. மங்கையைப் பாகமாக உடையவராகிய
மறையவர் அதற்கு இசைந்து, “இங்கு, நாம் இனி வேறொன்று
சொல்ல என்ன இருக்கின்றது? அங்கு, மற்றுமுள்ள உங்கள்
தனங்களில் உள்ளவற்றையாகிலும் இடுவீராக! எவ்வாற்றானும் எங்கள்
கோவணம் நேர் நிற்க வேண்டுவ தொன்று தான் நாம் வேண்டுவது“
என்று சொன்னார்.

     (வி-ரை.) மங்கைபாகராம் மறையவர் - இதுவரை
சடையையும் பிறையையும் மறைத்த பிரமசாரியாகிய மறையவர் என்று
குறித்த ஆசிரியர் இங்கு மங்கை பாகராம் என்றார்.
பிரமசாரியாகியவர் தாம் மறைத்த மங்கை பாகத்தை இனி விரைவில்
மேற்கொண்டு இல்வாழ்வாராகிய நிலையில் வெளிப்படுகின்றார்
என்பதும். தனங்களை இடப்பெற இசைந்ததனால் இவர்பாற் கருணை
வெளிப்படும் காலம் விரைவில் அணுகியதென்பதும், மங்கைபாகமே
அருட்சத்தி பதிந்தநிலை என்பதும் குறிப்பாம். மற்றதற்கு -
மற்று
- இனமல்லாத தனங்களை இடப்பெறுதற்கு என்ற பொருளில்
வினைமாற்றுக் குறித்தது. அதற்கும் எச்சவும்மை தொக்கதெனக்
கொண்டு முன் இசைந்த பலவற்றின் மேலும் என்றலுமாம்.

     நாம் - எங்கள் - முன்னர் நான் (514 - 515 - 520 - 526)
என்றவர் இப்போது அருட்சத்தியும் தாமுங் கூடிய நிலையின்
அணிமை குறிக்கப் பன்மையாற் கூறியவாறு. இவ்வாறே வந்தனம் -
512, நாம் - 532 - என்பன திரோதான சத்தியும் தாமுமாகிய
பன்மையில் வந்ததும் காண்க. இவ்வாறே உங்கள்தனம் என்ற
பன்மை நாயனார் - மனைவியார் - புதல்வர் என இவர்கள் மூவரும்
அணிமையில் அருள்பெறும் நிலையினைக் குறிப்பாலுணர்த்துவதும்
காணப்பெறும். எங்கள் கோவணம் - எங்கள் என்றபன்மை என்
போன்ற பிரமசாரிகளுக்குரியது என்றது வெளிப்பட்ட பொருளாம்.

     சொல்லுவ தென்கொல் - “உமக்கு ஈங்கு நான்
சொல்லவேண்டுவதில்லை“ - 515 என்று முன்னமே கூறினேன்;
இப்போது நான் சொல்லாமல் நீரே அறிந்து கொண்டீர் - என்பது.
இதுவரை இசைந்ததுபோல இசைவதனைத் தவிர வேறு
சொல்லுவதற்கு என்ன உள்ளது? என்றலுமாம்.

     அங்கு மற்று உங்கள் தனங்களின் ஆகிலும் - அங்கு -
சேய்மைச் சுட்டு, துலை நாட்டி நறுக்கின்ற இங்கில்லாமல்
சேமங்களாகிய அங்கு என்க. எல்லாம் என்னுடைய
பொருள்களேயாயினும் உங்களுடையன என்று எண்ணிக்
கொண்டிருக்கும் அவ்விடத்தே உள்ள என்பது குறிப்பு. இங்கு -
தம்முடையதான சிவச்சார்பு. அங்கு - அதற்கு வேறாகிய மாயா
உலகம். ஆகிலும் - கோவணத்திற்கு எவ்வாற்றானும் தொடர்பு
கொண்ட இனமல்லாவிடினும் அவற்றிலாகிலும். மேலே ஏனைய
என்றதற் கேற்ப இவ்வாறு கூறினார். 37