543. மனம கிழ்ந்தவர் மலர்க்கழல் சென்னியால்
                               வணங்கிப்
 
  புனைம லர்க்குழன் மனைவியார் தம்மொடு
                               புதல்வன்

றனையி டக்கொடு தனித்துலை வலங்கொண்டு
                                  தகவா
லினைய செய்கையி லேறுவார் கூறுவா ரெடுத்து,

42

     (இ-ள்.) வெளிப்படை. மனமகிழ்ச்சி யடைந்து அவருடைய
மலர் போன்ற பாதங்களைத் தலையினால் வணங்கிப், புனைந்த
மலரணிந்த கூந்தலையுடைய மனைவியார் தம்முடனே புதல்வரையும்
துலையில் இடுவதற்காக உடனே கொண்டு தகைமையினாலே
இத்தன்மைத்தாகிய செயலிலே துணிந்து ஏறுவாராகிய நாயனார்
எடுத்துக் கூறுவாராய்,

     (வி-ரை.) மனமகிழ்ந்து - மறையவர் இசைந்தது பற்றி
மனமகிழ்ந்தார். இவ்வாறிசைந்ததனாற் றம்மைக் கொடுத்தாயினும்
கோவண நேர்தந்து அடியவர் பாற் பிழையினின்றும்
உய்திபெறலாமென்ற வழி கிடைத்ததுவே மகிழ்ச்சிக்குக் காரணம்.

     முன்னர்த் திருவருள் பெறத் தொழுதார் (541); இப்போது
அருள்பெற்றாராதலின் அதன் பொருட்டுக் கீழ் வீழ்ந்து அவரது
திருவடிகளில் தமது முடிதோய வணங்கினார் என்று குறிக்க இங்குச்
சென்னியால் வணங்கி என்றார்.

     புனைமலர்க்குழல் - புனைகுழல் - மலர்க்குழல் என்று
தனித்தனி கூட்டுக. புனைகுழல் - ஐந்து வகையாகப் புனையும்
தன்மையுடையதாகி, அவற்றில் ஒரு வகையிலே மங்கலமாகப்
புனையப்பெற்ற என்க. ஒருவாற்றானும் புனையப்பெறாது
அமங்கலக்குறிதோன்ற மயிர் விரித்துச் சரிப்பதோ; அன்றி
எவ்வாற்றானும் புனையலாகா வகையிலே துண்டித்து நிறுத்தலோ,
நீடிய மங்கலமாகக் கொண்டொழுகும் இந்நாள் மக்களின்
உள்ளக்கிடை இதன் மங்கலமாகிய உள்ளுறையை நன்குணராது
என்க.

     மலர்க்குழல் - மலரணிதலும் மங்கலத்தின் அடையாளமரம்.
அவை இந்நாட்காணும் கோரக்காட்சியாகிய காகிதம் துணி முதலிய
பலவற்றானு மியன்ற போலிகளா யொழியாது உண்மையான இயற்கை
மணந்தங்கிய பூக்களாம். இங்குப் புனைதலும் மலரணிந்தமையும்
கூறியது இவ்வலங்காரக் கோலத்துடனே நித்திய மங்கலமாகிய
வீட்டினை மனைவியார் தமது நாயகனாருடனே அடைய
நின்றாராதலின் என்பதாம். மலர்புனை குழல் என மாற்றிவைத்து
உரை கொள்வாருமுண்டு.

     மனைவியார் தம்மொடு புதல்வன்றனை இடக்கொடு - இட
- துலையில் இடுதற்கு. “ஏறிட“ - 541 பார்க்க. மனைவியாருடன்
புதல்வன்றனைக் கொண்டு. ஒடு என்னும் மூன்றனுருபு உடனிகழ்ச்சிப்
பொருள் குறித்தது. புதல்வனுடன் மனைவியாரை என்னாது இவ்வாறு
கூறியது, ஒரு புறம் நாயனாரையும் ஒரு புறம் புதல்வரையும்
கூட்டிவைக்கும் தொடர்பு பற்றி மனைவியார் என்றதுடன் சேர்த்துக்
கூறியதாம். தம்மால் மனைவியாரும் பின்னர் அவரால் புதல்வரும்
பெற்றுள்ளபடியால் இம்முறை வைத்தோதினார். “இருவராகத்து
ளோருயிர் கண்டனம்“ - (திருக்கோவையார்) என்றபடி
மனைவியாரும் தாமும் உருவிற் பன்மையாகக் காணப்படுவது கருதிப் பன்மையிற் றம்மொடு என்றும், “பெறுமவற்றுள் யாமறிவதில்லை“
(குறள்) என்றபடி பெறற்கரியதும் இடுதற் கரியதுமாகிய தம்பொருள் என்ற சிறப்புத்தோன்ற தனை என்றுங் கூறியபடி. சிறுவனும்
என்றதனால் இளம் புதல்வர் மனைவியாருடன் இருந்தனர் (541)
என்று குறிப்பார் தம்மொடு என்றார் எனக் கொள்வாருமுண்டு.

     கொடு - உடன் அழைத்துக் கொண்டு. முன்னர்த் தனம்
முதலிய பொருள்களை இட்டதுபோல இவர்களையும் ஒவ்வொருவராக
இடாமல் இவ்விருவரையும் தம்முடனே கொண்டு
துலையேறியதென்னையோ? எனின், சிறுவரை முன்னர் இடுவது
என்னிலோ? அவர் தாய்தந்தையரை விட்டு நிற்க இயைபில்லை.
அவரையும் மனைவியாரையும் ஒக்கவே முன்னர் இடுவதென்னிலோ;
என்றும் பிரியேன் என்ற மணக்காலத்து உறுதிச் சொல்
வழுவாமாதலின் அஃதும் இயைபில்லை. துலையில் முன்னர்
தம்மையே இடுவதென்னிலோ? “உங்கள் தனங்களி னாகிலுமிடுவீர்“
(538) என்று மறையோர் பணித்தலின், “தம்பொருள் என்ப தம்
மக்கள்“, “மங்கல மென்ப மனைமாட்சி “ என்பவாதலின் மனைவி
மக்களே தமது பொருளாகிய உயிர்ச் சார்புகளாதலின்
அப்பொருள்களை இடாது ஒழியவும் நியாயமில்லை; தாம் மட்டில்
முன்னர் ஏறத் துலை நேர் நிற்குமாயின் தாம் முதல்வரிடமும்
இவர்கள் உலகினிடமுமாக நிற்கவந்து, தாம் ஆயுளளவும் பிரியேன்
என்ற சொற்பிழைக்கும்; தாம் ஏறித் துலை நேர் நில்லாதாயின்
தம்மை அவ்வாறு மறையவருக்கு நிறுத்துக் கொடுத்து
அவருடமையாயின பின்னர்த் துலைநேர் காண இவ்வுயிர்ப்
பொருள்களை அவருக்குத் தாம் ஒப்புக்கொடுக்க உரிமையின்றாம்;
இவை முதலிய நியாயங்கள் பற்றி மனைவியாரொடு புதல்வன்
றனையும் தம்முடன் கொண்டு தட்டு ஏறினார் என்க. மேலும் தமது
செயலில் பாதி உரிமையும் பொறுப்பும் மனைவியார்க்கு உண்டு
என்பது நீதி நூல். இக்காரியத்தில் அதுபற்றி மனைவியார் “இடர்
கூர்ந்தனர்“ என 523-முன்னர்க் கூறியதுங்காண்க. அவர் பொருள்
தந்தம் “வினையான் வரும்“ என்றபடி புதல்வரும் தமது செயலினை
நேர்காணும் பொறுப்புடையார் என்பனவாதி நியதிகளுங் காண்க.

     தனித்துலை - அளக்கலாகாதனவாகிய இறைவன்
கோவணத்தையும் அடிமைத் திறத்தையும் அளந்து காட்டும்
கருவியாயினமையின் தனி என்றார். தகவால் - தகவினாலே. தகவு
- தகுதி. மேலே கூறிய நியாயவகை குறித்தது.

     இனைய செய்கையில் - இத் தன்மைத்தாகிய செயல்.
இனைய
- முன்னர் நிகழ்ந்த செய்தியாவும் குறித்தது.
இனையதொன்று - 523 பார்க்க. செய்கை - அந்த நிலையினை
மாற்றுதற்கு இறுதியாகத் துணிந்த பரிகாரச் செயலாகிய இது.
இதற்குமேல் வேறு செயல் இல்லையாதலின் இவ்வாறு முடித்துக்
கூறினார். ஏறுவார் - வினையாலணையும் பெயர்; ஏறுவாராகிய
நாயனார். கூறுவார் - முற்றெச்சம். கூறுவாராகி. வரும் பாட்டில்
என்று எனும் வினையெச்சங் கொண்டது. எடுத்துக் கூறுவார் -
என மாற்றுக. எடுத்து - முடிந்த பொருளாக எடுத்து. உரத்த
சத்தத்திலெடுத்து என்பாருமுண்டு.

     தனையுடன் கொடு தலைத்துலை - என்பதும் பாடம். 42