545. மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்துட னேற,  
  வண்டர் தம்பிரான் றிருவரைக் கோவண மதவுங்
கொண்ட வன்பினிற் குறைபடா வடியவ ரடிமைத்
தொண்டு மொத்தலா லொத்துநேர் நின்றதத்
                              துலைதான்.
44

     (இ-ள்.) வெளிப்படை. மிகுந்த காதலினாலே மற்று அவர்கள்
மகிழ்ந்து உடனே தட்டிலே ஏறினார்களாக, எல்லா
அண்டமுடையார்க்கும் பெருமானாகிய இறைவனது திருவரையிற்
சாத்தும் கோவணமும், அவர்பாற் கொண்ட அன்பினிற் குறைபடாத
அடியவர்களது தொண்டும் ஒப்புடையன ஆதலால் (மேலும் கீழுமாய்
நிற்றலன்றி) ஒத்து அத்துலைதான் நேர் நின்றது.

     (வி-ரை.) மண்டுகாதலின் - மேன்மேல் மிகுகின்ற
ஆசையால், கோவண நேர்நிற்கப் பெறுவோம் என்ற திண்மையான
உறுதி பெற்றாராதலின் தமது பிழையினை மாற்றப் பெற்றோமென்ற
உணர்ச்சிவர அதுவே மண்டுகாதலை விளைத்தது.

     மற்றவர் மகிழ்ந்து உடன் ஏற - மகிழ்ச்சியோடு மற்ற
அவர்கள் ஒன்று சேரத்தட்டிலே ஏறினார்களாக. காதல் மண்டியவழி
மகிழ்ச்சி உண்டாகியது. காதல் உள்ளத்தும் மகிழ்ச்சி புறத்தும்
நிகழ்வன. மகிழ்ச்சி - மெய்ப்பாடு, 543 உரை பார்க்க.

     கோவணம் அதுவும் அடிமைத் தொண்டும் ஒத்தலால் -
கோவணம் மறையாதலின் இறைவனை உள்ளே பொதிந்து வைத்துப்
பற்றி நிற்பது. அடிமைத் தொண்டும் அவ்விறைவனையே உள்ளத்திற்
பொதிந்து பற்றிக் கிடப்பது. ஆதலின் இரண்டும் ஒத்தன என்க.
அடிமைத் தொண்டு - அடிமையாந் தன்மை பெற்றதனாற் செய்யும்
தொண்டு, இது பற்றி முன்னர் உரைத்தவை இங்கு நினைவு கூர்க.
(516 - 517)

     அண்டர் தம்பிரான் - அண்டங்களுக்கு நாயகர்களாகிய
வானவர்களுக்குத் தலைவர். “அண்டவா னவர்கட் கெட்டா
அருட்கழல்“ என்பது முதலியவை காண்க.

     கொண்ட அன்பினிற் குறைபடா அடிமைத் தொண்டு -
இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோம்
என்ற நிலைமை. கொண்ட - உயிர்க்கீடாகக் கொண்ட-
கடைப்பிடியாகிய. அன்பினிற்குறைபடா - எந்தவகை முட்டுப்பாடு
நேரினுங் குறையாத. “முட்டில் அன்பா“ (536) என்றமையுங் காண்க.

     அத்துலைதான் - நேர் நின்றது என மாற்றுக.
இரண்டுதட்டுக்களிலும் இட்ட பொருள்கள் தம்முள் ஒத்தபோதே
துலையும் நேர்நிற்கும். ஆதலின், கோவணமும் கொண்டும் ஒத்தலால்
என்று காரணங்கூறியவாறு. இங்குத் தட்டில் நின்றது நாயனாரும்
மனைவியாரும் புதல்வருமே யாயினும் அவர் தம்மையே அடியவர்க்கு
(இறையவர்க்கு) ஒப்புக் கொடுத்த தொண்டின் செயலே இங்கு
ஒப்புமை செய்தது என்பார் தொண்டரும் என்னாது கோவணமும்
தொண்டரும் ஒத்தலால்
என்றார். “மெய்யடிமை பிழைத்திலோம்
எனில்“ (544) என நாயனாரும் அடிமையையே குறித்ததும் காண்க.

     அத்துலைதான் - துலைக்கோல் துலை எனப்பட்டது. தான்
- அசையென்றொதுக்குவாரும் உண்டு. இறைவனது கோவணங்
தொண்டதேயாயினும் என்க. “அன்றே யென்ற னாவியு முடலு
முடைமை யெல்லாமுங், குன்றே யனையாய் என்னை யாட்கொண்ட
போதே கொண்டிலையோ? இன்றோரிடையூ றெனக்குண்டோ“ என்ற
மணிவாசகத்தின்படி உடல் பொருள் ஆவி என்ற மூன்றையும் அவன் வசமாக்கிய வழியே இறைவன் அவர் இடரடையாது வெளிப்படத்
தாங்கி நிற்பன். பணிசெய்து கிடப்பதே கடமையாகிப் பிறிதொன்று
மில்லாத பொழுதே இறைவன்றன்கடன் அடியேனையும் தாங்குதலாம்
என்று அருளிய தேவாரமும் காண்க. பணிசெய்து கிடக்கும்
நிலையினையே இங்கு அன்பினிற் குறைபடா அடியவர் அடிமைத்
தொண்டு
எனப்பட்டது. முன்னர் உடைமை மட்டும் நேர்தந்தார்.
உடலும் உயிரும் தம்மதாக நிறுத்தினராதலின் தட்டு நேர்படாது
நின்றது. இப்போது உடலையும் உயிரையும் நேர்பெற ஒப்புவித்தனர்.
குறைநிரம்பிட இறைவனும் நேர் கொண்டனர் என்க. “ஆட்கொண்ட
வார்த்தை“ என்று இது பற்றிய அப்பர் சுவாமிகள் திருவிருத்தமும்
சிந்திக்க. (பக்கம் 677).

பொட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை
யொட்டடித் துள்ளமர் மாசெலாம் வாங்கிப்பின்
றட்டொக்க மாறினன் றன்னையு மென்னையும்;
வட்டம தொத்தது; வாணிபம் வாய்த்ததே.
           - ஏழாந்தந்திரம் - சம்பிரதாயம் - 78

என்ற திருமூலர் திருமந்திரம், இச் சரிதத்தினையும் அதன்
தத்துவத்தினையும் நினைவூட்டிநிற்பது ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. 44