6. தெரிவ ரும்பெரு மைத்திருத் தொண்டர்தம்
 
  பொருவ ருஞ்சீர் புகலலுற் றேன்முற்றப்
பெருகு தண்கட லூற்றுண் பெருநசை
ஒருசு ணங்கனை ஒக்குந் தகைமையேன்.
6

     (இ-ள்.) முற்றப் பெருகு.......உண் - பெருத்த அமிர்தமாகிய
பாற்கடலை உற்றுக்காண உண்ணவேண்டும் என்கின்ற; பெருநசை
......தகைமையேன்
- பேராசை கொண்டதொரு நாயினைப்
போல்கின்ற தன்மை யுடையேன் யான்; ஆதலின், தெரிவு
அரும்பெருமைத் திருத்தொண்டர்தம் - அறிதற்கரிய பெருமை
வாய்ந்த திருத்தொண்டர்களுடைய; பொருவருஞ்சீர் புகலலுற்றேன்
-ஒப்பற்ற சீர்களை எடுத்துச் சொல்ல முற்படுகின்றேன்.

     (வி-ரை.) முற்றப் பெருகு - இதற்குமேற் பெரிதில்லை என
சவால் மிகவும் பெருகிய.
கடல் ஊற்று உண் பெருநசை - சிறு
ஊற்றை உண்டு வற்றச்செய்து விடுவது போலக் கடலாகிய
இதனையும் (ஊற்றுக்காண) உண்டு வற்றச்செய்து விடுவோம் என்ற
பேராசை. சிறிது சிறிதாக நக்கி உண்பதல்லாமல் ஒரு சேர உண்ண
முடியாததால் நாயைக் கூறியவாறு. பேராசையும் அதனாலே
விளங்கும். மேற்பாட்டில் அளவில் ஆசை என்றமை காண்க.
இதனையே கம்பர் “பூசை முற்றவும் நக்குபு புக்கென” என்றமை
காண்க.


     ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன் - சுணங்கன் -
நாய். நாயை ஒக்கும் தன்மையுடையேன். நாயைப்போல என்று
உவமித்தார். கட்டுப்பட்ட காலம் தவிர மற்றைக் காலத்திலே
மலமருந்துதல் முதலிய துர்க்குணமுடையது நாய். மனிதர், நற்
கூட்டத்தின் நீங்கிய உடன் இழி செயல் செய்வார்; நாயாயிருந்தால்
அந்த இழி குணம் அதன் இயல்பென்பர்; நாய் அல்லாதிருந்தும்
அதுபோன்ற இழிகுண முடைமை மிக்க இழிவு என்பதாம்.

     தெரிவரும் பெருமை - பின்னர்த் திருக்கூட்டச் சிறப்பில்
காண்க. “மண்பா தலம்புக்கு.....”; “வானந்துளங்கிலென்......”;
“எங்கெழிலென் ஞாயிறு” “வடகோ டுயர்ந்தென்ன.......” முதலிய
திருவாக்குக்களிலும் காண்க.

     தொண்டர் - தொண்டு செய்வோர். இறைவனுக்கும்
அடியார்க்கும் பல வகையாலும் அடிமைசெய்தலைத் தவிர வேறு
ஒரு செயலும் செய்யாதவர்.

     தண்கடலூற்றும் என்று பாடமாயின், ஊற்றும் - கவிழ்க்கும்
எனப்பொருள்கொள்க. கடலையே கவிழ்க்கும் பேராசை என்க. 6