509. முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய வரையிற்  
  றஞ்ச மாமறைக் கோவண வாடையின் றசைவும்
வஞ்ச வல்வினைக் கறுப்பறு மனத்தடி யார்க
ணெஞ்சி னீங்கிடா வடிமலர் நீணிலம் பொலிய,
8

     (இ-ள்.) வெளிப்படை. முஞ்சிப் புல்லைத் திரித்த வடத்தினை
முடிந்து அரைஞாணாகச் சாத்திய இடையிலே, தஞ்சமாம் மறையாகிய
கோவண ஆடையின் பிணிப்பும் கொண்ட கோலமுடையவராகி,
வஞ்சனையுடைய தீவினையாகிய கறுப்பு அறும் மனத்தினையுடைய
அடியார்களது நெஞ்சிலே நீங்காது பொருந்திய திருவடி மலர்கள்
நீண்ட நிலத்திலே பொலிய,

     (வி-ரை.) முஞ்சி.....அரையில் - முஞ்சி என்ற தருப்பைப்
புல்லை அரை நாணாகத் திரித்துச் சாத்திய இடையிலே.
முஞ்சியரைஞாணும் பிரமசரியத்துக் குரியது. முஞ்சி - வைதிக
வழக்கிற் கொள்ளப் பெற்ற ஏழுவகைத் தருப்பைகளில் ஒன்று. நூல்
பட்டு முதலிய கயிறுகளைப் பிரமசாரி அரைஞாணாகக்கட்டக்கூடாது
என்பது விதி.

     தஞ்சம் ஆம் மறைக் கோவணம் - தம்மையே ஓலமிட்டுத்
தஞ்சமாகி யடைந்த வேதம். “மயக்கறு மறையோ லிட்டு மாலயன்
றேட நின்றான்“ (432). யாவர்க்குந் தஞ்சமாகிய மறை என்றலுமாம்.
இச் சரித நிகழ்ச்சிக்குத் தஞ்சமாகியது கோவணம் என்ற குறிப்புமாம்.
மறைக்கோவணம்
- 515 உரை பார்க்க.

     வஞ்ச வல்வினைக் கறுப்பு - வஞ்சனையால் விளைகின்ற
வலிய வினையாகிய கறை. வஞ்சம் - வஞ்சனை. இது ஐம்புலன்களின்
சேட்டையால் விளைவது “புலனைந்தும் வஞ்சனையைச், செய்ய“,
(சிவபுராணம்); “மாறி நின்றெனை மயக்கிடும் வஞ்சப் புலனைந்
தின்வழி“ (கோயிற்றிருப்பதிகம்) முதலிய திருவாசகங்கள் காண்க.
“வஞ்ச மாக்கடம் வல்வினையும்“ (305). திருவடியிலே மனம்
வைத்திருத்தலால் வினைக்கறுப்பு அறப்பெற்றவர்கள். அறும் மனம்
- அறப்பெற்ற மனம்.

     நெஞ்சில் நீங்கிடா அடிமலர் - அவர்களது நெஞ்சிலிருந்து
அகலாது நிலைத்திருக்கின்ற திருவடிக் கமலங்கள். “யானெனதென்
றற்ற விடமே திருவடியா“ என்றபடி தன்னை வணங்கிய இடத்து
நிலைபேறுபெற்றது இறைவன் திருவருள் வியாபகம் என்க.
“துஞ்சிடைக் கண்டு கனவின் றலைத்தொழு தேற்கவன்றான்,
நெஞ்சிடை நின்றக லான்பல காலமு நின்றனனே“ (4) “கண்ணுளு
நெஞ்சத்தகத்து முளகழற் சேவடியே“ (5) என்ற இத்தலத்
திருவிருத்தங்களுங் காண்க. வல்வினை - வலிமை விலக்கற்கருமை
குறித்தது.

     நிலம் பொலிய - நிலத்தின்மேல் விளங்க. நிலத்தைப்
பொலிவிக்க எனப் பிற வினையாக்கி யுரைப்பினுமாம். பொலிய -
வந்து
என முடிக்க.

     ஆடையின் அசைவும் - என்பதும் பாடம். 8