70. காவி னிற்பயி லுங்களி வண்டினம்  
  வாவி யிற்படிந் துண்ணு மலர்மது
மேவி யத்தட மீதெழப் பாய்கயல்
தாவி யப்பொழி லிற்கனி சாடுமால்.
20

     (இ-ள்.) காவினில்...மது - சோலையிலே பயில்கின்ற வண்டுகள்
அடுத்து உள்ள வாவியிலே நீர்ப்பூக்களிலும் படிந்து தேன் உண்ணும்;
மேவி....சாடுமால் - அவ்வாறு வண்டுகள் தேனை உண்ணும்
வாவியில் வாழ்ந்தும் (அதனுள் அடங்கியிராது) மேலே எழுந்து
பாயுந்தன்மையுடைய கயல்மீன்கள் தாவி (வண்டுகள்வந்த)
அச்சோலைகளின் இனிய கனிகளின் மேற் பாய்ந்து அவற்றை
உதிர்த்துச் சிதைக்கும்.

     (வி-ரை.) அத்தடம் - அப்பொழில - காவிலே வாழும்
வண்டுகள் வாவியிலே வருதலும், அதற்காக மாறுகொண்டு
பாய்வனபோல அவ்வாவியிலே வாழும் கயல்கள் வண்டுகளின்
இருப்பிடமாகிய அச்சோலைகளைச் சூறையிட்டுச் சிதைப்பன போலும்
- என்பதுகுறிப்பு; அந்தத் தடம் - அந்தப் பொழில் என்பன
முன்னறி சுட்டு. வண்டு மலர்மது உண்ண வந்த அந்தத் தடம்
என்றும், வந்த வண்டுகள் இருந்த இடமாகிய அந்தப் பொழில்
என்றும் அகரச் சுட்டுக்குப் பொருள் வருவித்துக்கொள்க.

     களிவண்டு...பாய் கயல் - தமக்குரிய உணவாகிய தேனை
எவ்வகைப் பூக்களிலும் சென்று முயன்று தேடும் வண்டுகள்
போலல்லாது, கயல்கள் தாம் வாழுமிடத்துள்ள தேனைத் தாமும்
உண்ணாது பிறர் உண்ணவும் பொறாது, சினந்து, தகாத செய்கை
செய்வன - என்று கோபம் எனும் தீக்குணத்தின் செயலை
உள்ளுறையாகக் கற்பித்தவாறு. இது குறிக்கக் களி வண்டு என்றும்,
பாய் கயல் என்றும் அடைமொழி புணர்த்ததும் குறிக்க.

     கனி சாடுதல் - இதனால் தமக்கு ஒரு பயனுமில்லையாயினும்,
இக்கனிகளாற் பிறர்க்குவரும் பயனை அழித்தல் மரத்திரமே கருதிய
செயலாம் என்பது குறிப்பு மனிதர்க்குள்ளும் இவ்வியல்புள்ளார்
பலராதலின், அவர்க்கு அறிவுறுத்துவதும் குறிப்பு.

     வண்டு உண்ணும் - அவை உண்ணவே - கயல்சாடும் -
எனவருவித்து உரைக்க

     பயிலும் - சிறப்பாய் வாழுமிடமாகக் கொண்ட.


     பயிலல் - படிதல் இவற்றால் முயற்சியினது சிறப்பும்,
பாய்தல் - சாய்தல் இவற்றால் சினத்தின் இழிபும் குறித்தவாறு.
சோலையும் வாவியும் அடுத்துள்ளன என்பதும் குறிப்பு. இது
முன்னரே விளக்கப்பெற்றது.

     இனி, களி வண்டு - உயர்ந்த இடத்தில் (சோலையில்)
வாழ்ந்து, உயர்ந்த உணவை (தேனை) உண்ணுதலால் உயர்ந்த
குணமும் செயலும் மகிழ்ச்சியுடையது என்பார் களிவண்டு என்றார்.
(களி - மயங்கிய - என்று உரைப்பாருமுளர்.) இதற்கு மாறாய்த்
தாழ்ந்த இடத்திலே (வாவி) வாழ்ந்து, தாழ்ந்த உணவை (அழுக்கு,
பாசி முதலியன) உண்ணுதலால் தாழ்ந்த குணமும் தாழ்ந்த
செயலுமுடையது கயல் மீன் என்பதும் குறிப்பார் பாய் கயல் என்றார்.
இவ்வுண்மையை மனிதர் உலக வாழ்க்கையிலும் பொருத்திக்காண்பது
பயன்தரும் என்பதும் குறிப்பு. இந்நாட் புதிய சீர்திருத்தங்கள்
பேசுவோர் இதனை உய்த்துணர்வாராக.