71. சாலிநீள் வயலி னோங்கித் தந்நிகரின்றி மிக்கு  
  வாலிதாம் வெண்மை யுண்மை கருவினாம்
                          வளத்த வாகிச்
சூன்முதிர் பயலை கொண்டு சுருள்விரித் தரனுக்
                                கன்பர்
ஆலின சிந்தை போல அலர்ந்தன கதிர்க
                             ளெல்லாம்.
21

     (இ-ள்.) சாலி - நெல்; நீள் வயலின்...விரித்து - நீண்ட
வயலிலே ஓங்கி வளர்ந்து, தமக்கு ஒப்பில்லாமல் மிகுந்து,
தூயவெள்ளிய உண்மைக் கருவின் வளத்தை உடையனவாகி, சூல்
முதிர்வதனால் பசலை அடைந்து, பின்னர்ச் சுருளை
விரித்துக்கொண்டு; அரனுக்கு அன்பர் ஆலின சிந்தை போல -
இறைவனுக்கு அன்பர்களுடைய மனம் போலவே; அலர்ந்தன
கதிர்கள் எல்லாம் - கதிர்கள் எல்லாம் அலர்ந்தன.

     (வி-ரை.) நீள்வயலின் சாலி - ஓங்கி - மிக்கு - கரு -
வளத்தவாகிப் பயலைகொண்டு - சுருள் விரித்துக் - கதிர்கள்
அலர்ந்தன என்று கூட்டி முடிக்க.

     கதிர் அலர்தல் என்பது - ஒரு சொல் நீர்மைத்தாகிக்
கதிர்களை அலரச் செய்தன - எனப் பொருள் தரும்; மரம்
பூப்பூத்தன என்பதுபோல. இவ்வாறன்றிப் பயலைகொண்டு
என்பதனைப் பயலை கொள்ள எனக் கொண்டு, சாலி சூல்முதிரவே
அதன்பின் சுருள்விரித்துக்கதிர்கள் அலர்ந்தன என்று உரைத்தலுமாம்.
பயலை - பசலை எனவும் வரும். வெண்மையும் பொன்மையும்
கலந்ததொரு நிறம்.

     முன் 63-வது பாட்டிலே களை களையப் பெற்ற நெற்பயிர்
காலமுறையாலே வளர்ந்து கதிர் விரியும் செயல்களை ஓங்கி முதலிய
அவ்வவ் வினையெச்சங்களாலே தொடர்ந்து கூறி இப்பாட்டினாற்
குறித்தவாறாம்.

     இப்பாட்டு, நெற்பயிர் விளைவிற்கும், அரன் அன்பா
சிந்தைக்கும் சிலேடையுவமையாக அமைந்தது-மேல்வரும்
திருப்பாட்டும் இவ்வாறே அமைந்தமையும், இவை இரண்டும்
தொடர் நிலையுவமமாய்த் தொடர்ந்து வருதலும் காணத்தக்கது.
இதனைப் பின் பற்றிய ஆசிரியர் காஞ்சிப்புராண முடையாராகிய
எமது மாதவச் சிவஞானமுனிவர் தம் புராணத்து நாட்டுப் படலத்திற்
பல பாடல்கள் தொடர்ந்து தொடர் நிலை உவமம் கூறியவாறு
காண்க.

     இனி, ஓங்குதல் - மிகுதல் - கருவளம் ஆதல் - பயலை
கொள்ளுதல் - சுருள் விரிதல் - கதிர் அலர்தல் என்ற செயல்கள்
ஒவ்வொன்றும் சாலியிலும், அன்பர் சிந்தையிலும் பொருந்துமாறு
காண்க.

     ஓங்குதல் சாலி - செழித்து வளர்தல். அன்பர் சிந்தை -
மேல் ஓங்கிநிற்றல் - உயர்ந்த நோக்கமுடையதாதல். “பெரியோர்
உள்ளம் போல, ஓங்குநிலைத் தன்மைய வாய்” (திருக்குறிப்பு - புரா
- 88) என்று பின்னர்க் கூறுதல் காண்க.
     

     தந்நிகரின்றி மிகுதல் - சாலி
- ஒப்பற்றுத் தூறுபடர்ந்து
எழுதல். அன்பர் சிந்தை - ஒப்புயர்வற்ற மேன்மை செறிதல்;
அன்பினால் “மெய்தழைத்து விதிர்ப்புறு சிந்தையார்” முதலியன
காண்க.

     வாலிதாம் வெண்மை உண்மைக் கருவினாம் வளத்தன ஆதல்
- சாலி = வாலிது, தூய்மை, வெண்மை - வெள்ளிய நிறம்; உண்மை
- உட்பதடியில்லாமை; கரு - நெல் ஊறுகின்ற பால். அன்பர் சிந்தை
= வாலிது - கலப்பில்லாமை; வெண்மை - புகழ்; உண்மை -
மெய்யுடைமை; கரு - உண்மையிலே விளையும் வளம்.

     “வாலிதாம் நிலைமை காட்ட”, “மெய்ம்மையின் வேறு
கொள்ளாச் சிந்தை” என்பனவாதி திருவாக்குக்கள் காண்க.

     “அன்பர்க்குச் சொல்லுங்கால்: நிகரற்ற சுத்தமாகிய
வெள்ளிய உண்மை ஞானத்திற்கேதுவாயுள்ள சிவத்தைப்
பெற்றமையால் வந்த வளமுடையதாகிச் சத்தி பதிதலைப்
பெற்றுச் சிவோகம்பாவனையினாலே குவிதலின்றி விரிந்த
அன்பர்களது மனதைப் போல. (சூன்முதிர் பயலை கொண்டு -
சர்வான்மாக்களையும் பெறுங் கருப்பங் கொண்ட பசிய
நிறத்தையுடைய சத்தி பதிதலைப் பெற்று)”, இது, தில்லை
- நடராச ஓதுவார் அவர்கள் பாடங் கேட்ட குறிப்பிற் கண்டது.

     வெண்மை யுண்மைக் கரு என்புழி வெண்மை என்றதே
அந்நிறத்தையுடைய பாலுக் காயிற்று என்றும், பாலையுடைய கரு -
என்றும்; வாலிதாம் வெண்மை - மாசகன்ற சாத்துவிக குணம்
என்றும் கூறுவதும் உண்டு.

     சூல்முதிர் பயலை கொள்ளுதல் - சாலி - கரு - முதிர்ந்து
பசுமையுடைத்தாதல். அன்பர் சிந்தை - அன்பு முதிரமுதிரச்
சிவபெருமான் திறத்திலே ஈடுபட்டுத் திருமேனி நிறம் வேறுபடுதல்.
“பயலை மெய்ப்போர்ப்ப”, “மெய்ப்பயலை...விளம்பாயே” முதலியவை
காண்க.

     சுருள் விரிதல் சாலி - கருவிற்றங்கிச் சுருண்டு
பிணைந்திருந்தவை அதினின்றும் வெளிப்பட்டு விரிதல். சிந்தை -
தொக்கிருந்த அறிவு வளர்ந்து விரிந்து வெளிப்படுதல். ”மனமுகிழ்த்த
சுருணீக்கி மலர்விக்கும் கலைபயிலத் தொடங்கு வித்தார்” (திருநா -
புராணம்); “முகைத்த மலரின் வாசம் போல் சிந்தைமலர
உடன்மலரும் செவ்வி யுணர்வு...” (சண்டேசுர நாயனார் புராணம்)
முதலியவை காண்க.

     நீள் வயல்
- சாலி நீளுதற்கிடமாகிய வயல்.

     ஆலின அன்பர் சிந்தை - ஆலுதல் - விரிதல்; ஆலின -
நீர்மை பொருந்திய - என்றலுமாம். இவ்விரண்டு பொருளும்
சாலிக்கும் பொருந்துவன.

     கருவினால் - என்றும் பாடம்.   21