72. பத்தியின் பால ராகிப் பரமனுக் காளா மன்பர்  
  தத்தமிற் கூடி னார்கள் தலையினால் வணங்கு
                                மாபோன்
மொய்த்துநீள் பத்தி யின்பான் முதிர்தலை
                          வணங்கி மற்றை
வித்தகர் தன்மை போல விளைந்தன சாலி
                               யெல்லாம்.
22

     (இ-ள்.) பத்தியின்...போல் - அன்பின்
வசப்பட்டவர்களாகி இறைவனுக்கு ஆட் செய்யும் அன்பர்கள்
கூடியபோது ஒருவருக்கொருவர் தலை வணங்கி இறைஞ்சுவதுபோல;
மொய்த்துநீள்...வணங்கி - செறிந்து நீண்ட எதிர் எதிராகக் கூடிய
வரிசைகளிலே கதிர்களிற் பால் ஊறி முதிர்ந்த வகையினால் தலை
வணங்கியவைகளாய்; மற்றை...எல்லாம் - அந்த அன்பர்களுக்குச்
சிவபோகம் விளைவது போல நெல் முதிர்ந்து போகம் விளைந்தது.

     (வி-ரை.) மொய்த்து - கதிர்களில் இடமின்றி மணிகள்
செறிந்து நிறைந்து இருத்தல். நீள் - அவ்வாறு மணி நிறைந்ததே
யன்றிக் கதிர்கள் நீண்டு மிருத்தல்; பத்தி - வரிசை - மொய்த்தும்
நீண்டும் உள்ள கதிர்கள் வரிசையாகிப் பலவா
யிருத்தல். கதிர்கள்
முதிர்தலை வணங்குதல்
- நென்மணிகளிற் பால் ஊறி மிகுந்து
காய்த்து முதிர்தலின் பாரத்தினால் என்க. அன்பர் தலை வணங்குதல்
- அரனையும் அடியாரையும் வணங்குதற்காகவே தலையை இறைவன்
கொடுத்தாராதலின் தலைவணங்கி என்றார். “தலையே நீவணங்காய்”
“வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும், தாழ்த்தச் சென்னியும் தந்த
தலைவன்” “வணங்கத் தலைவைத்து,” என வரும் திருவாக்குக்கள் காண்க.

     அன்பர்கள் கூடியபோது ஒருவரை ஒருவர் வணங்கும்
வணக்கம் இங்கே குறிக்கப்பெற்றது. இது சைவ சம்பிரதாயம்.
தலைதூக்கி நிற்றல் அகங்காரத்தையும், தலை தாழ்த்தல் அதன்
நீக்கத்தையும் (பணிவு) குறிக்கும்.

     வித்தகர் - வாலறிவாளர்கள்; வித்தகம் - மெய்ஞ்ஞானம்.
சிவனிடத்தே பதிந்த நிறைந்த அறிவு. மற்றை வித்தகர் -
அவ்வித்தகர் என்க.

     விளைவு - சிவபோகமும் - நெற்போகமும் என்க.
மேற்பாட்டிலே சாலி கதிர் அலர்ந்தன என்றாற்போல
இப்பாட்டிலேயும் சாலி பயன் முதிர்ந்து வணங்கி விளைந்தன
என்று முடித்துக் காட்டினார். விளைவு - வித்தகம்.
ஆணவமுற்றும் வலிகெட்டு, முழுவதும் ஆளாம் தன்மை;
இதுவே வணக்கத்தின் முதிர்வு. “வித்தகன் தன்மை ஒன்று
மறிந்திலை” என்ற திருவிளையாடற் புராணமும் காண்க.

     ஆளாம் அன்பர் வணங்குமாபோல் - என்றமையால்
அவ்வணக்கமே பரமனுக்கு ஆளாக்குவிக்கும் - என்ற சாதன
விளக்கமும் பெற்றாம். பரமனுக்காளாவார் அரன்போலவே
அடியார்களையும் வணங்குவர் என்று அடியார் இலக்கணம்
பெற்றாம்.

“நேயம் மலிந்தவர் வேடமும், ஆலயந் தானும் அரனெனத் தொழுமே”
என்பது சாத்திரம்.

     அப்பர்சுவாமிகள் சீகாழியிலே திருஞானசம்பந்த சுவாமிகளைத்
தரிசித்த போதும், சுந்தரமூர்த்திசுவாமிகளைத் திருவாரூரிலே
அடியார்கள் எதிர்கொண்ட போதும், இவ்வகைய பிற இடங்களிலும்
இவ்வணக்கத்தினியல்பு காணலாம்.

“...தொண்டர் திருவேட நேரே தோன்றிய தென்று
                                தொழுதே
அண்டரும் போற்ற வணைந்தங் கரசு மெதிர்வந்
                             திரைஞ்ச... ”

                     - திருஞா - புரா - 271

“பணிந்தவர்தங் கரங்கள் பற்றி எழுதரிய மலர்க்கையா
லெடுத்திறைஞ்சி”

                       - திருநாவு - புரா - 182

“வந்தெதிர் கொண்டு வணங்குவார்முன் வன்றொண்டர்
அஞ்சலி கூப்பிவந்து...”

                      - தடுத் - புரா - 123

இவை நமது சமய ஆசாரியர்கள் நடத்திக் காட்டிய முறையாம்.

“...தேர்ந்தநூற், கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக்                             காய்த்தவே”

என்றார் பிறரும், ஆயின், அவர் சாலி விளைவிலே, இவ்வாறு
முழுதும் அன்பு மயமாய்க் காணமாட்டார். பசும் பாம்பின்
தோற்றமும் - மேல் அலார் செல்வமும் - காண்பார் ஆயினர்.
சிவமே காணும் சேக்கிழார் பெருமானது பத்திக் கண்ணுக்கு நெல்
விளைவு முழுதும் சிவவிளைவேயாய்க் காணும் தொடர்நிலை
உவமத்தின் அழகு காணத்தக்கதாம்,

     68 முதல் 70 வரை பாட்டுக்களிற் கண்ட செயல்களினின்றும்
வேறாய், நெற் போக விளைவாகிய செயலுக்குள் செல்வார், வேறு
யாப்பாகிய பாட்டினாற் றொடங்கிச் செல்வதும் காண்க. “தொழுது
நாறு நடுவார் தொகுதியே” (62) எனச் சிறு நாற்சீரில் நட்டநாற்று,
“மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரிய” என்று பெரு
நாற்சீராய் உயிர் ஊன்றிச், “சாலிநீள் வயலி னோங்கித் தந்நிகரின்றி
மிக்கு” என்று அறுசீராய் வளர்ந்து முற்றிய செய்யுள் யாப்பு

அமைதியின் அழகும் கண்டு களிகூரத்தக்கது. சிறு நாற்றுக்கேற்றச்
சிறு நாற்சீர்ச் செய்யுளமைதியும் காண்க.    22