73. அரிதரு செந்நெற் சூட்டி னடுக்கிய வடுக்கல்
                               சேர்ப்பார்;
 
  பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று
                               செய்வார்;
சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும்
                       பொருப்பு யர்ப்பார்;
விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு
                               வைப்பார்.
23

     (இ-ள்.) அரிதரு.....சேர்ப்பார் - அரிகளாற் றரப்பெற்ற
செந்நெல்லினது சூடு அடுக்கிய பெரும்போர் சேர்ப்பார்கள்;
பரிவுற.....செய்வார் - பரிவுபடப் பிடித்த பல வகை மீன்களையும்
நீண்ட குன்றுபோலக் கூட்டுவர்; சுரிவளை......உயர்ப்பார் - புரியாகச்
சுரிந்த சங்குகள் ஈன்ற முத்துக்களையும் ஒளிவீசும் குன்றம் போல
உயர்த்துக் கூட்டுவார்கள்; விரிமலர்...வைப்பார் - விரிந்த மலர்த்
தொகுதிகளைத் தேன்வடியச் சேர்த்தி ஒரு புறம் இட்டுவைப்பார்.

     (வி-ரை.) அரி - சூடு - நெல் விளைந்த பின்னர்ச்
செய்யப்படுந் தொழில்கள் அரிதல், சூடு அடுக்குதல் முதலியன.
இவை, - நெற்குவை சேர்த்தல் புற்போர் சேர்த்தல் வரை - இது
முதல் மூன்று பாட்டாலும் கூறப்பெற்றன. பெரும் பான்மை பற்றி
நாற்றுநடுதல் முதல் குவை சேர்த்தல்வரை நெல்லையே விரித்துச்
சொன்னார். பிற, கரும்பு - வாழை - முதலியவையும் இவ்வாறே
அவ்வவற்றிற்குப் பொருந்துமாறு அமைத்துக் கொள்க. “சோழ
வளநாடு சோறுடைத்து” எனச்சோற்றுச் சிறப்பே மிகுதியாம்.
அதுவே மக்கட்கு இன்றியமையாதது. அதற்குப் பெரும்பான்மையும்
நெல்லே வேண்டப்படுவதாம். ஆதலின் இதன் சிறப்பு இப்பகுதியில்
விதந்தோதப் பெற்றதென்க. ஆயினும் சோற்றுக்கு வேண்டிய
இனிப்புத் தரும் கரும்பு முதலியவும், கனிகளும், பூவும், பிறவும்
உடன்சேர்த்துக் கூறுதலும் காண்க.

     அரி - நெற்கற்றை; அரி - அரியப்பட்டது. செயப்படு
பொருளுணர்த்தும் விகுதி புணர்ந்து கெட்டது. இது உழவர்
இந்நாளிலும் வழங்கும் உயர்ந்த தனித் தமிழ்ச் சொற்களில் ஒன்று,
நெல் முதல்களைக் கையாற் சேர்த்து அரிதலால் பெறும் கற்றையை,
அரி என்பர்.

     சூட்டின் அடுக்கல் - பன்மீன் குன்று - முத்தின்
பொருப்பு - மலர்க் கற்றை வெற்பு
- இவை பலவகைப்
பொருள்களையும் பெரு வளம்பெறச் சேர்த்துக் குவிக்கும்
மிகுதிப்பாட்டைக் குறிக்கும். அடுக்கல் - குன்று - பொருப்பு -
வெற்பு - இவை யாவும் மலையின் பல பெயர்கள். அளவின்
மிகுதியைக் காட்டுதற்கு உவமமாகக் கூறுவது மலையேயாம்.
ஆயினும் இங்குக் குறித்த வெவ்வேறு பொருள்களுக்கு ஏற்றபடி
வெவ்வேறு பெயர்களாற் கூறினமை கூர்ந்து நோக்குக.

     அடுக்கல் - மேன்மேல் அடுக்குதலால் உயர்ந்த தென்னும்
நயமும், மற்றவற்றை விட அளவிற் பெருமையும் தோன்றச் சூட்டின்
அடுக்கல் என்றார். அடுக்கல் - போர்மலை. அடுக்கல் போன்றதை
அடுக்கல் என்ற தாகுபெயர்.

     சூட்டின் அடுக்கல் = சூடு - உழவு தொழிற் பொருள்களின்
வழக்கப் பெயர்களில் ஒன்று. அரிகளைப் பெருங்கற்றைகளாகச்
சேர்த்துக் கூட்டித் தட்டிய போது முதிர்ந்த பெருமணி நெற்கள்
பெரும்பாலும் உதிர்ந்துவிடும். இதற்குத்தலை உதிரி நெல் என்று
பெயர். உதிராது சிலமணிகள் பசுமை முதலிய காரணங்களால்
பின்னும் கதிர்களில் ஒட்டி எஞ்சி நிற்கும். ஆதலின் இவ்வாறு
உதிர்த்த கற்றைகளைப் போர் செய்து குவிப்பர். இதற்குச் சூடு
அடுக்குதல் என்பது வழக்கப்பெயராம். இவற்றைச் சிலநாட்கழித்து
மேதிகளால் மிதிக்கச்செய்து எஞ்சிய நெல்மணிகளை
உதிர்த்துச்சேர்ப்பர். இந்நெல்லுக்குச்
சூட்டடி நெல் - சூட்டு நெல்
என்று பெயர். இவை நிறம் - குணம் - உரு -முதலியவற்றால்
தலைப்பில் உதிர்ந்த
நெல்லுக்குத் தாழ்ந்திருக்கும்; ஆதலின்
அதினின்றும் வேறு பிரிப்பர். இவ்விரு வகைகளை மேலே 25-ம்
பாட்டிற் காண்க. அடுக்குதலால் சூடுபெறச் செய்யநிற்றலின் இதற்கு
இப்பெயர் வந்ததுபோலும்.

     பரிவுற - வாழு மிடத்திலிருந்து உயிர்கள் வருந்த
எடுக்கப்படுதலால் அத்துன்பமும் இரக்கமும் தோன்றப்
பரிவுறப்படுத்த - என்றார். மீன் படுத்தல் - படச் செய்தல்
கொல்லாமலே, பிடித்து எடுத்தலாலேயே, உயிர் போக்கிக்
கிடைக்கும்படி செய்தல்; என்க. இது மீன் பிடிக்கும் தொழிலின்
மரபுப் பெயர். அதிபத்த நாயனார் புராணத்துட் காண்க.

     படர் நெடுங் குன்று - மீன் படுத்துக் குவித்த பின்னும் சில
நேரம் அவை உயிருடன் தவழ்ந்தும் குதித்தும் நிற்றலால் படர்
என்றார். படர்தல் - செல்லுதல்; போதல்.

     விரைவிற் கெடுந்தன்மை யுடையதாதலின், குன்றுபோற்
குவிப்பினும் விரைவிலே செலவாக்கப்படும் எனக்குறிக்கச், சென்று
கழியும் (படர்) நீண்ட (நெடும்) குன்று - என்று உரைப்பதுமாம்.
குன்று
- மலையிற் சிறியது - அளவாற் சிறுமையும் குணத்தால்
இழிவும், தோன்றக் குன்று என்றார். குன்றுதல் - குறைதல்.

     சுரிவளை சொரிந்த முத்து - முன் 63-ல் “தண்டரளம்
சொரி பணிலம்” என்ற கருத்தைத் தொடர்ந்து அனுவதித்து, அந்த
முத்துக்களை அரித்துச் சேர்க்கும் கால மிதுவேயாதலால் சொரிந்த
என்று இறந்த காலத்தாற் குறித்தார்.

     சுடர்ப் பெரும் பொருப்பு - முத்திலே பல நிறங்களும்
விரவி ஒளிர்வதனால் சுடர்கள் விட்டு விளங்கி அதனாற் பெரிய
மலையாயிற்று என்க. சோதிமலை என்றவாறு. முத்து உருவத்தாற்
சிறியன ஆயினும் சுடராற்பெரியவாயின.

     மலர்க் கற்றை வெற்பு - நெல்லோடு பயிராய் விளைந்த
கமலம் முதலிய நீர்ப் பூக்களைப் பிரித்து ஒரு புறம் இட்டு வைக்கும்
சேர்க்கை, இங்கு வெற்பு எனப்பெற்றது. கற்றையாகிய வெற்பு; வேரி
பொழிந்திழி வெற்பு; என்று தனித்தனி கூட்டுக.

     இழிவெற்பு - முன்னே குறித்த நெல் முதலிய மூன்று
பொருள்களும் அவ்வவற்றின் தகுதிக் கேற்ப விரும்பும் விலை
பெறுவன; அவ்வாறு விரும்பப்பெறாத இதனை அவற்றினின்றும்
பிரிக்குமாறு, கடைசியிற் கூறுவதுடன், இழிவெற்பு என்று நயம்
பெறவும் கூறுதல் காண்க.   23