77. கரும்படு களம ராலைக் கமழ்நறும் புகையோ
                                   மாதர்
 
  சுரும்பெழ வகிலா லிட்ட தூபமோ யூப வேள்விப்
பெரும்பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய
                         புகையோ வானின்
வருங்கரு முகிலோ சூழ்வ மாடமுங் காவு
                               மெங்கும்.
27

     (இ-ள்.) கரும்பு...புகையோ - மள்ளர்கள் கரும்பைக்
காய்ச்சுதலால் ஆலைகளினின்றும் எழுகின்ற நறிய புகையோ?;
மாதர்...தூபமோ - பெண்கள் தங்கள்
தலையிற் சூட்டிய பூக்களில்
மொய்த்த வண்டுகள் எழும்படியாகத் தலைக்கு ஊட்டும்
அகிற்றூபமோ?; யூப...புகையோ யூபத்தம்பங்களை நட்டு இறைவனை
நோக்கியாகம் செய்யும் பொது அற வேள்விச் சாலைகளிற் காணும்
புகையோ?; (அது காரணமாக) வானின்...முகிலோ - வானிலே கூடும்
கருமுகிலின் கூட்டமோ?; சூழ்வ மாடமும் காவுமெங்கும் -
(இன்னதென்றறிய ஒண்ணாதபடி) சூழ்வனவாகிய மாடங்களும்
சோலைகளும் எங்கும் உள்ளன.

     (வி-ரை.) களமர் - ஆலை - மள்ளர். (களமர்) கரும்பு
அடும் தொழிற் கிடனாகிய ஆலை. கரும்பு அடுதல் - கரும்பிற்
சாறு பிழிந்து காய்ச்சுதல்.

     பெரும் பெயர் - மகா வாக்கியம். ஆகு பெயராய் ஈசுவரனை
யுணர்த்திற்று. “தத்துவமசி” முதலிய மகா வாக்கியங்களாலே பேசப்
பெறுபவன். “பெரும் பெயர்க் கடவுளிற் கண்டு” என்ற சிவஞான
போதச் சிறப்புப்பாயிரமும் “பெரும் பெயர் முருக” என்ற
திருமுருகாற்றுப்படையும் முதலியனவும் காண்க. பெரும் பெயர்ச்
சாலை - ஊருக்கு வெளியிலே யூபத்தம்பங்கள் நாட்டி இறைவனை
முன்னிட்டுச் செய்யப்பெறும் பொது வேள்விச் சாலைகள். சண்டேசு
வர நாயனார் புராணம் (4) பாட்டிற் காண்க. இவற்றை அந்தணர்தம்
இலலந்தோறும் செய்யக் கடவனவாகிய நித்திய வேள்விகளினின்றும்
பிரித்துணர்ந்து கொள்க. “நாதனாரை னாகவே புரியுநல் வேள்வி”
எனப் பின்னருங் கூறுவார். வேள்வி - வேள் - பகுதி. ஒவ்வோர்
விருப்பத்தைக் கொடுப்பது.

     வானின் வரும் கருமுகிலோ - இவை வேள்வி காரணமாக
வருவன என்பார் வரும் என்று கூறி அதனை அடுத்து வைத்தார்.
“அது காரணமாக” என்பதனை வருவிக்க. “மண்ணிற் பெருவேள்வி
வளர்தீப் புகைநாளும், விண்ணிற் புயல் காட்டும் வீழிம் மிழலையே.”
(தேவா)

     களமர் ஆலை - மேலே “ஆலை பாய்பவர்” (18) என்ற
பாட்டிற் கூறிய செயல்களையே பின்னும் அனுவதித்துக் கூறியது
காண்க. புகையோ - தூபமோ - புகையோ - முகிலோ இவை
யாவும் சேர்ந்து இன்னதென்று அறியப்படாமல் என்க. சூழ்வ
மாடமும் காவும் எங்கும் - சூழ்வனவாகிய மாடங்களும்
சோலைகளும் எங்கும் அப்பதிகளில் உள்ளன. பதிகளாவன
மேற்பாட்டில் “மாடநீடி மலர்ந்துளபதிகள்” என்றவையாம்.
மாடங்களை முன்னரே குறித்தவாறு. சோலையும் மாடங்களும்
சூழ்வன என்று உரைத்தலும் ஒன்று. இவற்றின் அணிமையும்
குறிக்கப்பெற்றதாம்.

“ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகி
                                       யழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட மூசுமயி லாடு துறையே”

என்ற திருஞானசம்பந்த நாயனார் தேவாரமும் காண்க.   27