82. பண்டரு விபஞ்சி யெங்கும் பாதசெம் பஞ்சி
                                யெங்கும்
 
  வண்டறை குழல்க ளெங்கும் வளரிசைக் குழல்க
                                ளெங்கும்
தொண்டர்த மிருக்கை யெங்கும் சொல்லுவ
                        திருக்கை யெங்கும்
தண்டலை பலவு மெங்குந் தாதகி பலவு மெங்கும்.
32

     (இ-ள்.) (அந்நாட்டில் எங்கும்) பண்தரு விபஞ்சி - பாத
செம்பஞ்சி - திணைக்கு ஏற்ற பண்களைத் தருகின்ற வீணைகளும்,
பெண்களின் பாதங்களில் ஊட்டிய செம்பஞ்சிக் குழம்பும் உள்ளன;
வண்டு அறை குழல்கள் - வளர் இசைக் குழல்கள் - வண்டுகள்
சத்திக்கும் கூந்தல்களும், வளர்கின்ற இசை முழக்கும்
வேய்ங்குழல்களும் எங்கும் உள்ளன; தொண்டர்தம் இருக்கை -
எங்கும் தொண்டர்களுடைய இருப்பிடங்கள் உள்ளன; எங்கும்
சொல்வது வடமொழி தென்
மொழி வேதங்கள்; தண்டலை பலவும் -
தாதகி பலவும் - எங்கும் சோலைகள் பலவுள்ளன; ஆத்தியும்
பலாமரங்களும் உள்ளன.

     (வி-ரை.) பாத செம்பஞ்சி எங்கும் என்றதனால் ஆடல்
குறித்தவாறு.

“பாடலாடல் இன்னியங்கள் பயிறன் முதலாம்                         பண்ணையினில்
நீடு மினிய வினோதங்கள் நெருங்கு காலந்                            தொறுநிகழ
மாடு விரைப்பூந் தருமணஞ்செ யாரா மங்கள்                           வைகுவித்து”
  - கழறிற்றறிவார் நாயனார் புராணம் - 154

என்று பின்னர் எடுத்துரைக்குமாறும் காண்க.

     விபஞ்சி - யாழ்வகைகளுள் ஒன்று. வளரிசை - என்றதனை
யாழுடனும் சேர்க்க. யாழுங் குழலும் இன்னிசைக் கருவிகளிற்
சிறந்தவையாதலின் அவையிரண்டும் சேர்த்து யாழ் - இசைக்குழல்
என இங்குப் பேசப்பெற்றன. “குழலினிது யாழினிது” என்று சேர்த்து
நாயனார் எடுத்துக் காட்டியமை காண்க.

     வண்டறை குழல் - பெண்கள் வேய்ங்குழற் கானஞ்
செய்யும்போது அடுத்துக் கூந்தலில் உள்ள வண்டுகளும் ஒத்துச்
சத்தித்தன ஆதலின் இரண்டையும் ஒன்று சேர்த்து வளரிசை என்றார்
என்பதுமாம்.

     இருக்கை - இருப்பிடம், இருக்கு + ஐ (இரண்டாம் வேற்றுமை
யுருபு) வேதத்தை என்க; இருக்கு வேதத்துக்குப் பொதுப்பெயர்.
“தூயகா விரியி னன்னீர் கொண்டிருக் கோதி யாட்டி” என்ற
தேவாரம் காண்க. மெய்யினாற் செய்யும் தொண்டும், வாய்த்
தொண்டும் கூறியவாறு. இவை மனத்தொண்டும் இன்றியமையாது
உடனே பெறுதலும் காண்க.

     தண்டலை பல - சோலைகளே தொண்டர்க்
கிருப்பிடமாகவும், அவ்விடமே வேத கானம் நிகழுமிடமாகவும்
உள்ளனவாதலும், அவ்விடங்களே யாழ் - குழல் - ஆடல் -
பாடல் - பயிலும் இடமாதலும் குறிப்பிட்டமை காண்க. தண்டலை
- சோலை. தாதகி ஆத்தி. பல - பலா.

     இப்பாட்டிற் சொல்லியவை சொல்லணியாய்க் கூறிய
துணையேயன்றிப் பொருளியல்பில் ஒன்றற்கொன்று வேறுபட்ட
பொருள்களென வெளித் தோற்றத்தில் தோன்றினும் அழகிய
தொடர்புபெற்ற ஒரே உள்ளுறை கொண்டனவாதல் கண்டுகளிக்கத்
தக்கதாம். அந்நாட்டு மக்களது இன்பவாழ்க்கையின் இயல்பு
கூறியவாறு.

    இவ்வாறே மேல்வருகின்ற இரண்டு பாட்டினும்
கண்டுகொள்க.  32