83. மாடுபோ தகங்க ளெங்கும் வண்டுபோ தகங்க
                                ளெங்கும்
 
  பாடுமம் மனைக ளெங்கும் பயிலுமம் மனைக
                                ளெங்கும்
நீடுகே தனங்க ளெங்கும் நிதிநிகே தனங்க
                                ளெங்கும்
தோடுசூழ் மாலை யெங்குந் துணைவர்சூழ் மாலை
                                யெங்கும்.
33

     (இ-ள்.) வெளிப்படை.

     (வி-ரை.) போதகம் - யானைக் கன்று, மாடு - பக்கம்.
போது + அகங்கள் - மலர்களின் உள்ளிடங்கள். போதுகள்
அலரும்போது வண்டுகள்குடையும் என்க. பாடும் + அம் +
மனைகள் + எங்கும் - பாடல்கள் பாடப்பெறும் அழகிய வீடுகள்
எங்குமுள்ளன. பயிலும் + அம்மனைகள் - பெண்கள் பயில்கின்ற
அம்மனை என்கின்ற விளையாட்டுக்களும் எங்கும் உள்ளன.
சேதனம
- கொடி. நிதி + நிகேதனம் - நிதிகள் பலவகையும்
நிறைந்த சேமவைப்புகள். பொன்னாற் செய்யப்பெற்ற கோயில்
என்றும் கூறுவர். தோடு - இதழ்கள் செறிந்த பூக்கள். சூழ்மாலை
- பூக்கள்
சூழ்ந்து பிணைக்கப்பெற்ற மாலைகள். எங்கும் - எங்கும்
அணிந்த. துணைவர் சூழ்மாலை - காதலர் காதலிகள் தொடர்ந்து
உள்ள வரிசை. இவைகள் எங்கும் உள்ளன.

     அம்மனை - மகளிர் விளையாட்டுக்களுள் ஒன்று. இஃது
இறைவன் புகழ்களை வாயினாற் பாடிக்கொண்டே அம்மனைகளைக்
கையில் ஏந்தி மேலே மேலே மாற்றி மாற்றி எறிந்து
விளையாடுவதாம். அம்மனைகள் மூன்று முதல் ஐந்து வரை
கொள்வர். ஏனைக்கழல் - பந்து முதலிய ஆட்டங்கள் போலவே
அம்மனையும் பாடலுடன். சேர்ந்து பயிலப் பெறுவதென்பது,

“தருந்தடக்கை முத்தழலோர் மனைகடொறு மிறைவனது
                                 தன்மை பாடிக்
கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயருங்
                                    கழுமலமே”

என்பனவாதி திருவாக்குக்களால் உணரப்பெறும். இதுபற்றியே “பாடும்
அம் மனைகள் எங்கும் பயிலும் அம்மனை” என்று உடன் சேர்த்துக்
கூறினார்.

     மேற்பாட்டிற் கூறிய சோலைகளிற் பயிலும் வீணை குழல் -
இசைகளும் இவ்வாறே இறைவனைப் பற்றியன என்பதைத் தொண்டர்
தம்மிருக்கை என்ற குறிப்பாற் காண்க.

     இப்பாட்டிலும் குறித்த பொருள்கள் தொடர்பு பெற்று ஓரிடத்து
நிகழ்வன. யானைக்கன்றுகள் வளருமிடங்களும், மலர்ச்
சோலைகளும் நிறைந்து, இவற்றிற் கிடையே தோன்றும் மனைகள்
மாளிகைகள் பல வளங்களும் நிறைந்தனவாய்ப் பெண்கள்
விளையாடுமிடங்களாகவும், நாயகர் நாயகிகள் இன்ப
வாழ்வுகொள்ளுமிடங்களாகவும் உள்ளன.

     யானைப்பந்திகள் ஊருக்கு வெளியே உள்ளன என்பதை
மேலே கண்டோம். யானைக்கன்றுகள் மாளிகைகளின் பக்கம்
சோலைகளில் வளர்க்கப் பெறுவன.

     கேதனம் - “வீதிகள் தோறும் வெண்கொடியோடு
விதானங்கள்”, “விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்”
என்றபடி கொடிகள் மனைகளின் மேலும் மற்றும் நகரங்களின்
பல இடங்களிலும் காணப்படும் மங்கலப் பொருளாம்.     33