94. விளக்க மிக்க கலன்கள் விரவலாற்,  
  றுளக்கில் பேரொலி யாற், றுனனு பண்டங்கள்
வளத்தொ டும்பல வாறு மடுத்தலால்,
அளக்கர் போன்றன வாவண வீதிகள்.
9

     (இ-ள்.) (சிலேடை விரிவு) விளக்கம்...விரவலால் - (1)
(ஆவண வீதிகள்) ஒளி மிகுந்த ஆபரணங்கள் பொருந்தியிருத்தலால்;
(2) (கடல்) பல்வகை விளக்குகள் கொண்ட மரக்கலன்களை
யுடைமையாலே; துளக்கில் பேரொலியால் - (1) (ஆவண விதிகள்)
அசைவற்ற பெருஞ்சத்தங்களால்; (2) (கடல்) அலைகளின்
அசைதலினாலே உளதாம் பேரிரைச்சலினால்; துன்னு
பண்டங்கள் ... மடுத்தலால் (1) (ஆவண வீதிகள்) நெருங்கிய
பற்பல சரக்களும்பிறவும் வளம்பெறப் பற்பல வகைகளாலே
காண்டிருத்தலினாலே; (2) (கடல்) மலை காடு நாடு முதலியபல
இடங்களின் பண்டங்களையும் வாரிக் கொணர்ந்த வளங்களுடன்
பல ஆறுகள் வந்து சேர்தலாலே; அளக்கர் ... ஆவண வீதிகள் -
கடைவீதிகள் கடலைப் போன்றன.

     (வி-ரை.) விளக்கம் - ஆவண வீதிக்கு ஒளி என்றும்,
கடலுக்கு விளக்குக்கள் என்றும் கொள்க. மரக்கலங்கள் இரவிலும்
செல்வன ஆதலின் ஒளிமிகும் பெருவிளக்குக்களைக்
கொண்டிருந்தன. அவற்றிற்காகக் கரைகளிலும் பலவகைப்
பெருவிளக்குக்கள் வைக்கப் பெற்றிருத்தலின் அவற்றோடு விரவிய
மரக்கலங்கள் என்பதுமாம்; கலங்கரை விளக்கம் என்ற வழக்கும்
காண்க. இவ்விளக்கங்களைப் பற்றிப் பட்டினப்பாலை யுள்ளே
காணலாம். முற்காலத்துத் தமிழ் மக்கள் கடற்செலவுங் கொண்டு
வாணிபத்திற் சிறந்திருந்ததனைச் சரிதங்கள் பேசும்.

     கலன் - ஆவண வீதிக்கு அணிகலன் என்க; கடலுக்கு
மரக்கலன் என்க.

     துளக்கில் - ஆவண வீதிக்கு துளக்கு இல் - நீங்காத -
நிலைத்த என்றும், கடலுக்குத் துளக்கினாலே அசைதல் -
அலைகளினாலே என்றும் கொள்க. துளக்கில் (பேரொலி)
ஆவணவீதியிற் பண்டமாற்றின் பொருட்டுப் பல தேயத்தவரும்
பல பண்டங்களும் பல கடைகளும் பொருந்தியதால்) மாறாத -
இனம் பிரித்தறிய முடியாதபடி கலந்த ஓரிரைச்சல். சந்தையிரைச்சல்
என்ற வழக்கும் காண்க. பட்டினப்பாலையில் இவ்வகைகளின்
விவரங் காணலாம். இந்நகர். சோழர்களது தலைநகராதலின் (நமது
சென்னைபோல்) ஆவணவீதிச் சிறப்புப் பெரிதாயினமை குறிக்கப்
பெற்றதாம்.

     துன்னு பண்டங்கள் - ஆவண வீதிக்கு - மணி - பொன் -
நெல் முதலிய விளைவுப் பொருள்கள் - உப்பு முதலிய பல
பண்டமாற்றுச் சரக்குகள். வளத்தொடும் பலவாறு மடுத்தல் -
வளம்பெற - கண்ணுக்குப் பார்வையாகப் பலவகைகளிலே வைத்து
வாங்கப்பெறுதல் எனவும், கடலுக்கு - மலைபடு பண்டம் - காடுபடு
பண்டம் - நாடுபடு பண்டங்களின் பலவளங்களையும் வரும் வழியில்
வாரிக்கொண்டு ஆறுகள் கடலிலே சேர்தல் - எனவும் கொள்க.
பலவாறு என்றும், பல ஆறு என்று பிரித்தும் உரைக்க.

     கலன் - கலம் - கலனென வரும். “கலங்கொள் கடனாகைக்
காரோணத் தானே“ (திருஞான - குறிஞ்சி - 8) “கலஞ்சமைத் தற்கு
வேண்டும் கம்மியர்“, “பொருகடற் கலன்கள் போக்கும் புகழினான்“
- காரைக்காலம்மையார் புராணம் (33 - 37) முதலியவைகளையும்,
சிலப்பதிகாரம் - தொல்காப்பியம் முதலிய பழந்தமிழ் நூல்களையும்
நோக்குக.   9