1000. நீங்கும்மிர வின்க ணிகழ்ந்தது கண்ட தொண்டர்
"ஈங்கெம்பெரு மானரு ளாமெனி லிந்த வையந்
தாங்குஞ்செயல் பூண்ப"னென் றுள்ளந் தளர்வு
                                 நீங்கிப்
பூங்கொன்றைமி லைந்தவர் கோயிற் புறத்து நிற்ப,
33

     1000. (இ-ள்.) வெளிப்படை. கழிந்துபோன இரவில் நிகழ்ந்த
செய்திதெரிந்த தொண்டராகிய மூர்த்தியார், "ஈங்கு எமதுபெருமானது
திருவருள் இதுவாம் என்றால், இந்த நிலந்தாங்கும் அரசாட்சியை
மேல்கொள்வேன்" என்று துணிவுகொண்டு, முன்னர்த் தமது
உள்ளத்திற் கொண்ட தளர்ச்சிநீங்கிக், கொன்றைப் பூவினைச் சூடிய
சிவபெருமானுடைய கோயிலின் புறத்திலே வந்து நிற்க. 33
    

     1000. (வி-ரை.) நீங்கும் இரவின்கண் - கழிந்துபோன
இரவிலே. "பொழுது புலர்வுற்றது" (993) என்று கூறியபடி கழிந்த
முன்னாளிரவு. கொடுங்கோன்மையும் வெஞ்சமண் பீடையும்
அடியார்க்கிழைத்த வன்கண்மையும், அடியார் கவலையும் ஒருங்கே
நீங்கிய காலமாகிய இரவு.

     நிகழ்ந்தது - 986 - 990 - திருப்பாடல்களிற் கூறிய
நிகழ்ச்சிகள் ஒரு தொடர்பாய் ஒரு பொருள்பற்றி வந்தனவாகலின்
ஒருமையிற் கூறினார். கண்ட - கண்ணாற்கண்டும் காதினாற்கேட்டும் அறிந்த என்ற பொருளில் வந்தது.

     தொண்டர் - மூர்த்தி நாயனார். சந்தன மெய்ப்பூச்சுத்
திருத்தொண்டு புரிந்தவர் ஆதலின் தொண்டர் என்றார்.

     "ஈங்கு ..... பூண்பன்" என்று - அருளாம் எனில் -989-ல்
கூறியவாறு கண்ட இறைவனது திருவருள். வையந் தாங்குவன் -
"மண் எல்லாங் கொண்டு" என்றது குறித்தது.

     உள்ளந் தளர்வு - "சிந்தைசாய்வுற்றிட" (986). உள்ளத்
தளர்ச்சியின் நிலை 985-ல் விரிக்கப்பட்டது. உள்ளந் தளர்வு -
வேற்றுமையில் மகரம்போய் மெல்லெழுத்துமிக்கது.

     பூங்கொன்றை மிலைந்தவர் - சிவபெருமான்.திருவாலவாயின்
அவிர்சடைக் கடவுள்.

     கோயிற்புறத்து நிற்ப - திருக்கோயிலின் உள்ளே
சந்தனந்தேய்க்கும் பாறையினிடத்து நிகழ்ந்தவை யறிந்ததொண்டர்
அதன் விளைவு என்னாகுமோ? என்று காணக் கோயிலின் புறத்து
வந்து நின்றார் என்க. 33