1012. குலவுந்துறை நீதி யமைச்சர் குறிப்பின் வைகக்,
கலகஞ்செய மண்செய லாயின கட்டு நீங்கி
நிலவுந்திரு நீற்றுநெ றித்துறை நீடு வாழ,

உலகெங்குநி ரம்பிய சைவமு யர்ந்து மன்ன,
45

     1012. (இ-ள்.) வெளிப்படை. குலவுகின்ற பல துறைகளிலும்
நீதிநடத்தும் அமைச்சர்கள் தமதுகுறிப்பின்படி நிற்கவும்,
கலகம்செய்த அமணர் செயலாயின கட்டு நீங்கி நிலவுகின்றதிருநீற்று
நெறியும் துறையும் நீடுவாழவும், உலகமெங்கும் நிரம்பிய
தன்மையுடையசைவம் ஓங்கி நிலைபெறவும், 45

     1012. (வி-ரை.) குலவுந்துறை - அரசியலிற்பட்ட பற்பல
துறைகளைக் குறித்தது. ஒவ்வோர் அரசியற் றுறையும் ஒவ்வோர்
அமைச்சரின்கீழ் உள்ளது.

     நீதி அமைச்சர் - அறநூல் விதித்தபடியே ஒழுகவல்ல
அமைச்சர்கள். நீதி - நியதி - ஒழுங்கு.

     குறிப்பின் வைக - குறிப்பு - வாக்கினாற் சொல்லாமலே
கண்ணின் பார்வையால் வெளிப்படுக்கும் மன்னவனது உட்கோள்.
வைகுதல் - அதனை அறிந்து அதற்குத் தக்கபடி செய்தல்."கண்ணிற்
சொலிச்செவியி னோக்கு மிறைமாட்சி" என்பது நீதிநூல். குறிப்பின
வைகுதல்
அமைச்சர்க் கின்றியமையாத இலக்கணமாம். இது பற்றியே
அமைச்சு என்ற பகுதியில் மன்னரைச் சேர்ந்தொழுகல் என்றும்
அதனை அடுத்துக் குறிப்பறிதல் என்றும் இரண்டதிகாரங்கள்
வகுத்தோதினர் திருவள்ளுவனார். அவற்றுள் "குறிப்பறிந்து காலங்
கருதி" என்றும், "குறிப்பிற் குறிப்புணர்வார்" என்றும். "நுண்ணிய
மென்பா ரளக்குங்கோல் காணுங்காற், கண்ணல்ல தில்லை பிற"
என்றும் பலவாறாக அமைச்சர்க்கு இஃதின்றியமையா தென்பதனை
வற்புறுத்தியதும் காண்க.

     கலகம்........கட்டு - அமணரது கலகம்பற்றி 981 - 982 -983-ல் உரைத்தவை காண்க. கலகமாவது தம்மளவில் நில்லாது பிறசமயத்துக்
கிடையூறு விளைத்தல். செயலாயின கட்டு நீங்கி - அவ்வாறு
செய்வதனாலாகிய இன்னல்களின் தொடக்குமுற்றும் நீங்கி. கட்டு -
சைவத்தை விளங்கவொட்டாமற் செய்த பந்தங்கள்.மலக்கட்டு நீங்கிய
வழியே உயிர் தழைக்கும் என்ற உண்மையும் காண்க. சமணர்
கலகம்பற்றி அப்பர் சுவாமிகள் ஆளுடைய பிள்ளையார் சரிதங்களில்
வருவன காண்க. "கலக மிடும் அமண்முருட்டுக் கையர்" என்ற
திருத்தொண்டர் புராண வரலாறும் காண்க.

     கட்டுநீங்கி - நீடுவாழ - உயர்ந்துமன்ன உதவும்மும்மையினால்
- மூர்த்தியார் உலகாண்டனர் என இந்த இரண்டு பாட்டுக்களையும்
தொடர்ந்து முடித்துக் கொள்க.

     நிலவும்........வாழ - நிலவுதல் என்றும் அழிவில்லாது
இருத்தல். நீற்று நெறித்துறை - நீற்று நெறியாவது சிவநெறி.இதுவே
ஒளிநெறி, பெருநெறி, திருநெறி, அருணெறி என்று பலவாறாகப்
பாராட்டித் தமிழ் மறைகளாற் போற்றப்படும். நெறி - ஒழுகிச்
செல்கின்ற வழியினையும், துறை - (அவ்வழியில்) புகுதல், நிற்றல்,
இருத்தல் முதலிய தொழில் நிகழும் இடத்தையும் குறிக்கும். நெறியும்
துறையும் என்க. உம்மைகள் தொக்கன. "நிலை கொள்ளும்
வழித்துறை யொன்றறியேன்" (திருவதிகை) என்ற அப்பர் சுவாமிகள்
தேவாரமும், "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க"
(திருஞா - புரா - 1), "தூயதிரு நீற்றுநெறி யெண்டிசையுந் தனிநடப்ப"
(மேற்படி 23) என்றவையும் காண்க.

     உலகு எங்கும் நிரம்பிய சைவம் - சைவநிலையே
உலகமெங்கும் நிரம்பியுள்ளது என்பதாம். சிவசத்தியடையாளங்களே
உலகெல்லாமாவது என்பது, "சத்தியுஞ் சிவமுமாய தன்மையில்
வுலகமெல்லாம், ஒத்தொவ்வா வாணும் பெண்ணு முயர் குண
குணியுமாகி, வைத்தன னவளால் வந்த வாக்கமிவ் வாழ்க்கை
யெல்லாம், இத்தையு மறியார் பீட லிங்கத்தி னியல்பு மோரார்",
"யாதொரு தெய்வங் கொண்டீ ரத்தெய்வ மாகியாங்கே, மாதொரு
பாக னார்தாம் வருவர்" என்ற சிவஞானசித்தியாராலும், "காதன்
மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்,
கண்டே னவர்திருப்
பாதங் கண்டறியாதன கண்டேன்" (அப்பர்சுவாமிகள் -காந்தாரம் -
திருவையாறு) என்ற தமிழ்மறையின் உள்ளுறையினைச், "சத்தியுஞ்
சிவமுமாஞ் சரிதைப், பன்மை யோனிகள் யாவையும் பயில்வன
பணிந்தே" என்று விரித்த திருநாவுக்கரசர் புராண (374) த்தாலும்,
வேதங்களாலும் அறிக. சைவமே எல்லாமாய் நிற்பதென்ற உண்மை
"இதுவாகு மதுவல்ல தெனும் பிணக்க தின்றி, நீதியினா லிவையெல்லா
மோரிடத்தே காண நின்றதியாதொரு சமய மதுசமயம்"
(சிவஞானசித்தி - 8 - 13) என்றதனாலுணர்த்தப்படும்.

     உயர்ந்து மன்ன - இங்கு உலகமெங்கு நிரம்பிய சைவம்
எஞ்ஞான்றும் மன்னியிருத்தல் ஒருதலையாகவே அதனுக்காகமுயற்சி
ஒன்றும் வேண்டா என்பாருளராதலின், அந்த ஐயம் நீக்க உயர்ந்து
மன்ன
என்றார். ஏனைச்சமயங்களுக்குத் தாழ்ந்ததாகவாவது,
அவற்றோடொப்பாகவாவது, இராமல், இதுவே எல்லாவற்றினும்
உயர்ந்தது என்று நிலை பெற்றிருக்க என்றபடியாம். "மௌன மோலி
யயர்வறச் சென்னியில் வைத்துராஜாங்கத்திலமாந்தது வைதிக சைவம்
அழகி தந்தோ?", "சைவமுதலாம் அளவில் சமயம் வகுத்து"
என்பனவாதி தாயுமானார் திருவாக்குக்களும் கருதுக. 45