1017.
|
தாது சூழுங்
குழன்மலையா டளிர்க்கை சூழுந்
திருமேனி
மீது சூழும் புனற்கற்றை வேணி நம்பர் விரும்புபதி
சோதி சூழு மணிமௌலிச் சோழர் பொன்னித்
திருநாட்டுப்
போது சூழுந் தடஞ்சோலைப் பொய்கை சூழும்
பூம்புகலூர். 1 |
1017. (இ-ள்.)
தாது........நம்பர் - தாதுக்களையுடைய பூக்கள்
சூழும் கூந்தலையுடைய பார்வதியம்மையாரது தளிர்போன்றகைகளாற்
சுற்றித் தழுவப்பட்ட திருமேனியையும், மேலே கங்கைசூழும்
கற்றையாகிய சடையையுமுடைய சிவபெருமான்; விரும்பும் பதி -
விரும்பி அமர்கின்ற திருப்பதியானது; சோதி......நாட்டு - ஒளி சூழும்
மணிமுடி சூடிய சோழர்களது காவிரிபாயும் திருநாட்டிலுள்ள;
போது.....பூம்புகலூர் - மலர்கள் நிறைந்த பெரிய சோலைகளையுடைய
பொய்கையினாற் சூழப்பட்ட திருப்பூம்புகலூர் என்பதாகும்.
(வி-ரை.)
தாது சூழும் குழல் - தாது - பூந்தாது.ஆகுபெயர்.
மகரந்தம் என்பர். சூடிய புதிய பூக்களினின்றும் பூந்தாதுக்கள்
உதிர்ந்து நிரம்பும் கூந்தல் என்றலுமாம்.
மலையாள்-
மலைமகள் - பார்வதி.
தளிர்க்கை
சூழும் திருமேனி - காஞ்சிபுரத்தில்
கம்பையாற்றின் கரையில் மாவின்கீழ்க் காமாட்சியம்மையார்
சிவலிங்கத் திருமேனி கண்டு பூசித்தபோது கம்பையாறு
பெருகிவரவே, அது அத்திருமேனிமேல் அடர்ந்துவருமென
வெருவித் "தேவர்நா யகரை, முலைக் குவட்டொடு வளைக்கையா
னெருக்கி முறுகு காதலாலிறுகிடத் தழுவி"னார் என்பதுசரிதம்.
திருக்குறிப்பு - புரா - 63 - 64 பார்க்க.
மீதுபுனல்
சூழும் கற்றை வேணி என்க. புனல்-கங்கை.
மீது சூழ்தலாவது கரைபோல முடித்த சடைக்கற்றையில் நிறைந்து
மேல்வழிந்து பாய்தல். கற்றை - தொகுதி.
விரும்பு
பதி - பூம்புகலூர் என்று கூட்டுக.பெயர்ப்பயனிலை கொண்டு முடிந்தது.
மணிமௌலிச்
சோழர் பொன்னித் திருநாட்டுப் புகலூர்
என்பதாம். ஆசிரியர் இப்புராணத்தை அருளிச்செய்தகாலத்தில்
சோழமன்னர் சோழநாட்டை ஆண்டு வந்தனர் என்பதுணரப்படும்.
"கடல்சூழ்ந்த வுலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன்
கழற்சிங்கன்" என்ற திருத்தொண்டத்தொகையிலும் இவ்வாறே
காண்க. மணிமௌலி - மணிமுடி; மணிகளிழைத்த அரசமுடி.
கிரீடம் என்ப. பொன்னி - காவிரி - வையையும் பொருநையும்
பாயும்பாண்டி நாட்டினையும் ஓரோர் காலம் சோழர்கள் ஆண்டனர்.
"தென்னவனா யுலகாண்ட செங்கணார்" என்றதும் காண்க.
அதனின்றும் பிரித்துணரச் சோழர் பொன்னித் திருநாடு
என்றார்.
போது
சூழும் தடம்சோலைப் பூம்புகலூர் என்றும்,
பொய்கைசூழும் பூம்புகலூர் என்றும் தனித்தனி
கூட்டியுரைக்க.
போது - மலர்கள். போது
சூழும் சோலை என்றதனால்நால்வகை
மலர்களுள் கோட்டுப்பூ - நிலப்பூ - கொடிப்பூ என்ற மூன்றும்,
பொய்கை என்றதனால் நீர்ப்பூ என்ற ஒன்றும்
குறிக்கப்பட்டன.
இதனுள் நால்வகைப்
பூத் திருப்பணியுடைய இச் சரிதக் குறிப்பும்
காண்க. "மொய்ம்மலரின், பொறிக லந்தபொழில் சூழ்ந்தழ காரும்புக
லூரே" (1) "கொய்து பத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித் துதிசெய்து,
மெய்த வத்தின் முயல் வாருயர் வானக மெய்தும் புகலூரே" (10)
என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரங் காண்க.
தாதுசூழும்
குழல் என்றதனால் இந் நால்வகைமலர்களையும்
தொண்டர்கள் விதிப்படி எடுத்துத் தொடுத்துச் சாத்த, அவற்றை
இறைவன் ஏற்று அருள் கொடுக்கும் சிறப்பும் கூறப்பட்டது. இதனால்
இந்நாயனாரது சரிதக் குறிப்பினை நாடு நகர் கூறுமுகத்தா
லறிவிக்கப்பட்டது கண்டுகொள்க. அவ்வச் சரித நிகழ்ச்சி மயமாக
நின்று அந்தக் கண்கொண்டே ஆசிரியர் நாடு நகர் முதலியவற்றைக்
கண்டு காட்டுகின்ற திறமும் மரபும் காண்க.
அன்றியும் இப்புராணத்தை
ஆறுசீர் விருத்தத்தாலேயாத்ததுவும்,
இத்திருப்பாட்டில் சூழும் என்ற சொல் ஆறுமுறை சொற்பொருட்பின்
வருநிலை யணிபெறத் தொடுத்துதவும், அறுதொழிலுடைய
அந்தணராகிய முருகனார் (1021), ஆறுவகைப் பூந்தொடையல்களை
(1025), ஆறு காலங்களிலும் அவ்வக்காலங்களுக்கேற்றவாறு
அமைத்துச் (1026) சாத்திய சிறப்புக் குறிப்பதும் காணத்தக்கது.
பூம்புகலூர்
- அழகிய புகலூர் என்றும், தாமரைபோன்ற
புகலூர் என்றும் உரைக்க நின்றது. "அனையதனுக் ககமலரா
மறவனார் பூங்கோயில்" (135) என் புழிப்போலக்கொள்க.
பூங்கமலவாவியினாற் சூழப்பட்டு அதனடுவிற் பூத்தகமலம் போல
இத்திருக்கோயில் விளங்குவதனால் இவ்வாறு கூறினார் என்க.
பொய்கை
சூழும் என்ற கருத்தும் அது. "பூம்புகலூர் மேவிய
புண்ணியனே" என்ற திருத்தாண்டக ஆட்சியினை நினைப்பிக்க
இவ்வாறு கூறினார் என்பதுமாம்.
புகலூர்
- பிறவிக்கஞ்சிய உயிர்கள் வந்து புகலடையச்
(சரணடையத்) தக்க ஊர் என்பதை "தன்னைச் சரணென்று
தாளடைந்தேன்" என்ற திருவிருத்தத்தானுமறிக.
இத் திருப்பாட்டால்
நாடு, நகரம், ஆறு, அரசு, மூர்த்தி என்ற
சிறப்புக்களை ஒருங்கே கூறியதனோடு சரிதச்சிறப்பும் உடன்
குறித்துக் கூறிய அமைதியும் அழகும் காண்க.
குழன்
மடவாள் - என்பதும் பாடம். 1
|