1018.
நாம மூதூர் மற்றதனு ணல்லோர் மனம்போ
                               லவரணிந்த
சேம நிலவு திருநீற்றின் சிறந்த வெண்மைத்
                           திருந்தொளியால்
யாம விருளும் வெளியாக்கு மிரவே யல்ல;
                            விரைமலர்மேற்
காமர் மதுவுண் சிறைவண்டுங் களங்க மின்றி
                            விளங்குமால்.
2

     (இ-ள்.) நாமம்......அதனுள் - புகழினையுடைய பழமையான
அத்திருப்பதியினுள்; நல்லோர்......ஒளியால் - நல்ல அடியார்களது
மனங்களைப் போலவே அவர்கள் திருமேனிமேல் அணிந்த
காவலுடைய திருநீற்றினது வெள்ளிய திருத்தம் செய்கின்ற
ஒளியினாலே; யாம இருளும்....அல்ல - நடுயாமத்தினிருளினையும்
வெளியாக்கும் இரவு மட்டுமல்ல; விரைமலர்.......வண்டும் -
மணமிக்க மலர்களின்மேல் தங்கும் அழகான தேன் உண்கின்ற
சிறையுடைய கருவண்டுகளும்; களங்கம் இன்றி விளங்கும் -
கருமையின்றி விளங்குவன. (ஆல் - அசை).

     (வி-ரை.) நாமம் மூதூர் - நாமம் - புகழ். நாமம் -பெயர்
எனக்கொண்டு, முன் பாட்டிற்கூறிய திருநாமத்தைக் கொண்ட
பழம்பதி என்றலுமாம். நாமம் - அச்சம் எனக்கொண்டு
ஆன்மாக்களிடத்து வினைகள் வந்தடர அஞ்சும் என்றுரைப்பினுமாம்.
"ஆலமிடற் றானடியா ரென்றடர வஞ்சுவரே" "இயமன் றூதரு
மஞ்சுவர்" முதலியவை காண்க.

     நல்லோர் - நன்மையுடையவர். நன்மையே செய்பவர்.
நல்லடியார்கள் என்க. நன்மை - இயற்கைப் பண்புமொழி.

     மனம் போல் - மனம் அதன் ஒளிக்கு ஆகுபெயர்."மாசி
லாத மணிதிகழ் மேனிமேற், பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்"
(141) என்றபடி நல்ல அடியார் மனமும் அவர்கள் பூசும் திருநீறும்
கூடி உள்ளும் புறமும் ஒரு தன்மையாய தூய ஒளியுடன்
விளங்குவன என்க.

     சேம நிலவு திருநீறு - தன்னையணிந்தோரைக் காக்குந்
தன்மை நிலவுகின்ற நீறு. "மந்திர மாவது நீறு", "சேணந் தருவதுநீறு",
"ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு" முதலிய தமிழ்மறைத்
திருவாக்குக்கள் காண்க. இது பற்றியே இதனைத் திருநீற்றுக்
காப்பு
என்பது மரபு. "வேறுபல காப்புமிகை யென்றவை விரும்பார்,
நீறுதிரு நெற்றியினிறுத்திநிறை வித்தார்" (திருஞான - புரா - 43).
"இறைவர்திரு நீற்றுக்காப் பேந்தி" (மேற்படி 262) முதலியவை
காண்க. இரட்சை என்ற பெயரும் கருதுக. வசுதேவர் கண்ணனுக்கு
நீறிட்டார் என்பது விஷ்ணுபுராணம்.

     திருந்து ஒளி - உயிர்கள் திருந்துவதற்குக் காரணமாகியசிவ
ஒளி. திருத்தும் ஒளி என்க. பிறவினைப் பொருளில் வந்தது.
சேமநிலவு - இன்பநிலவும் பொருட்டு என்றலுமாம்.

     யாம இருளும் வெளியாக்கும் இரவு - நடு இரவின்
திணிந்த இருளினையும் வெளி என ஆக்கத்தக்க புலரிக்காலம்
என்பர். உம்மை உயர்வு சிறப்பு. இரவு களங்கமின்றி
விளங்குதலாவது
- வெண்மை ஒளிமிக்கதனால் இருளின் தன்மை
காணப்படாது நிற்றல்.

     காமர் வண்டு என்று கூட்டுக. காமர் என்பதை மதுவுக்கும்
சிறைக்கும் அடையாக்கி அதற்குத்தக உரைப்பினுமாம். வண்டு
இங்குக் கருவண்டு குறித்தது.

     மதுவுண் வண்டு- முன் பாட்டிற் போது சூழந்
தடஞ்சோலை
என்றதைத் தொடர்ந்து வரும் பொருளியைபு காண்க.

     களங்கம் - கருமை. வண்டு களங்க மின்றி
விளங்குதலாவது
- கருமை நிறங்காட்டாது தோன்றுதல்.

     இரவேயல்ல; வண்டும் களங்கமின்றி விளங்கும்.வண்டும்
-
உம்மை சிறப்பொடுகூடிய இறந்தது தழுவிய எச்சவும்மை.
மேல்வரும் இரண்டு பாட்டுக்களினும் இவ்வாறே முடித்துக் கண்டு
கொள்க.

     இரவு களங்கமின்றி விளங்கும் - இரவு தீய
எண்ணங்களுக்கும் தீயசெயல்களுக்கும் காமமுதலிய
மனநிகழ்ச்சிகளுக்கும் உரியதாய் நிகழும் காலப்பகுதியாகிய பொருள்.
அது, நல்லோர் மனச்செயலாலும் திருநீற்றுச் சார்பினாலும், தனது
தீமை செய்கின்ற சத்தி நீங்கி நிற்கும் என்பது குறிப்பு. இது சிவஞான
போதம் 12 - ம் சூத்திரத்துள் உணர்த்தப்பட்ட உண்மையை விளக்கி
நிற்பதும் காண்க.

     இப்பாட்டில் யாமஇருளும், வெளியாக்கும் இரவும் என்று
எண்ணும்மையாக வைத்து இரண்டு பொருள்களாகக் கொண்டுரைத்து,
இருள் - இரவு - வண்டு என்ற மூன்றும் முறையே ஆணவம் மாயை
கன்மம் என்ற மும்மலங்களையும் குறிப்பாலுணர்த்துவன என்றும்,
இவை திருநீற்றுச் சார்பினால் தமது வலிமைகெட்டுச்
சிவானுபவத்துக்குத் துணை செய்வனவாகித் தோன்றும் என்றும்
இங்கு விசேடவுரை காண்பாருமுண்டு. 2