1022.
|
அடைமே
லலவன் றுயிலுணர வலர்செங் கமல
வயற்கயல்கண்
மடைமே லுகளுந் திருப்புகலூர் மன்னி வாழுந்
தன்மையராய்,
விடைமேல் வருவார்க்காளான மெய்ம்மைத்தவத்தா,
லவர்கற்றைச்
சடைமே லணியத் திருப்பள்ளித் தாமம் பறித்துச்
சாத்துவார், 6
|
1022. (இ-ள்.)
வெளிப்படை. (தாமரை) இலைகளின்மேல்
துயின்ற நண்டுகள் உறக்கத்தினின்றும் எழ, அலரும் செங்கமலங்கள்
பூக்கும் வயலிற் கயல்மீன்கள் மடைகளின்மேலே பாய்தற்கிடமாகிய
திருப்புகலூரில் நிலைபெற்று வாழும் தன்மையுடையோராய்,
விடையின் மேல் எழுந்தருளிவரும் சிவபெருமானுக்கு ஆளாயின
மெய்த்தவத்தினாலே, அவரது கற்றையாகிய சடையின்மேல்
அணிவதற்குத் திருப்பள்ளித்தாமம் பறித்துச் சாத்துவாராகி, 6
1022.
(வி-ரை.) துயில் உணர்தல் - விழித்தெழுதல்.துயிலும்
நிலையினின்றும் நீங்கி, உணரும் நிலையில் (சாக்கிரம் என்ப)
வருதல். வாளா உணர என்று கூறுவதும் மரபு. அலவன் -
நண்டு.
அடை - இலை; இங்குத் தாமரையிலையைக் குறித்தது. தடங்களில்
தாமரையோடு ஏனைப் பூக்களும் இருப்பினும் பெரும்பான்மையும்
சிறப்பும் பற்றி அவற்றைத் தாமரைத்தடம் என்றே கூறுவர்.
முன்னரும் "வாச முகையவிழ்ந்த குளிர்பங் கயங்க ளேயல்ல" (1020)
என்று தாமரையைக் குறித்தது காண்க. "துறைமலி யாம்பல்பல்
லாயிரத் துத்தமி யேயெழினும், நறைமலி தாமரை தன்னதன்றோ
சொல்லு நற்கயமே" (11-ம் திருமுறை - திருவாரூர் - மும் - கோவை
- 24) என்ற கழறிற்றறிவார் திருவாக்குக்காண்க.
அலவன்
துயில் உணரக் - கயல்கள் உகளும் என்று
கூட்டுக.
மன்னிவாழும்
தன்மை - நிலைபெற்று வாழ்கின்ற தகைமை.
"இவ்வூரில, வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டு
கென்றார்" (210) என்றது காண்க. முருகனாரும் அவர்தம்
முந்தையோர்களும் திருப்புகலூரில் நிலையான குடிகளாக வாழ்ந்து
வந்தனரென்பதும் அவர்களது வாழ்வு அவ்வூரின் பெருமைக்குத்
தகுதியாகப் பொருந்தியதென்பதும் கருதப்படும்.
ஆளான
மெய்ம்மைத் தவத்தாற் - சாத்துவார் என்க.
தவங்கள் பலவகைப்படும்; அவற்றுள்ளே சிவனுக்காளாகும் தவமே
மெய்த் தவமெனப்படும்; அவ்வாறு மெய்ம்மைத்தவ மியற்றிய
காரணத்தாற் சாத்துவாராகி என்க. தமிழினையும், ஆளுறும் தமிழ்
என்றும் ஆளுறாத் தமிழ் என்றும் இருவகைப்படுத்தி, ஆளுறாத்
தமிழ் உயிர்களை மேலுயர்த்தாமையேயன்றிக் கேடும் உறுவித்தலால்
அழிவாக்கத் தக்கதென்று அப்பர் சுவாமிகள் அருளியதனை இங்கு
நினைவு கூர்க. "வாயிருந்தமி ழேபடித் தாளுறா, வாயி ரஞ்சம
ணும்மழிவாக்கினான்" (திருக்குறுந்தொகை - பழையாறை வடதளி
- 9) என்ற தேவாரங் காண்க. திருப்பள்ளித் தாமஞ் சாத்திச் சரியை
கிரியையாதிகள் செய்வதற்கும் முன்னாளில் தவஞ் செய்திருத்தல்
வேண்டுமென்பதாம். "முன்பு செய் தவத்தி னீட்டம்" (751) என்றதும்,
"அறத்துறைக ளவையடைந்தும் அருந்தவங்கள் புரிந்தும்......
சென்றாற் சைவத் திறத்தடைவர்" (8 - 11) என்ற சிவஞான
சித்தியாரும் காண்க. "எத்தவத் தோர்க்கு மிலக்காய்நின்ற
வெம்பெருமான்" (நட்டபாடை - புகலியும் திருவீழிமிழலையும் - 10)
என்ற ஆளுடையபிள்ளையார் திருவாக்கின்படி எல்லாவகைத்
தவத்துக்கும் சிவனே இலக்காய் நிற்பவன். ஆயின் அவை எல்லாம்
முற்றிக் காலாந்தரத்திற் பயன் றருவன. சிவனுக்காளாய்ச்
செய்யப்படும் தவமே மெய்ம்மைத் தவமாய் இம்மையிலே பயன்தந்து
திருவடி சேர்க்கும் என்பது.
திருப்பள்ளித்
தாமம் - 559-ல் உரைத்தவை பார்க்க. 6 |