1025.



கொண்டு வந்து, தனியிடத்தி லிருந்து, கோக்குங்
                               கோவைகளும்
இண்டைச் சுருக்குந் தாமமுட னிணைக்கும் வாச
                               மாலைகளும்
தண்டிற் கட்டுங் கண்ணிகளுந் தாளிற் பிணைக்கும்
                             பிணையல்களும்
நுண்டாதிறைக்குந்தொடையல்களுஞ்சமைத்து
                      நுடங்குநூன் மார்பர், 9

     1025. (இ-ள்.) வெளிப்படை. நுடங்கிய நூலணிந்த
மார்பினராகிய முருகனார் கொண்டுவந்து தனியிடத்தில் அமர்ந்து,
அவற்றைக் கோக்கின்ற கோவைகளும், சுருக்கும் இண்டைச்சுருக்கும்
தாமங்களோடு, இணைக்கின்ற வாசனை பொருந்திய மாலைகளும்,
தண்டுபோலக் கட்டும் கண்ணிகளும் தாளிலே பிணைக்கும்
பிணையல் வகைகளும் நுண்ணிய மகரந்தங்களை வீசுகின்ற
தொடையல்
களும், ஆக அமைத்து, 9

     1025. (வி-ரை.) தனியிடத்தில் - திருப்பூமண்டபத்தில்.
பூக்களைக்கொண்டு வந்து சேர்த்து மாலை தொடுத்தற்கென்று
தூயதான குளிர்ந்த தனியிடம் இருத்தல் வேண்டும். இதன்
அமைதிபற்றி ஏயர்கோன் - புரா - 225 - 226 பாட்டுக்களிலும்,
பிறாண்டும் பார்க்க. அசுத்தம் முதலியன தொடக்காமலும்,
வெயில் காற்று முதலியவை தாக்காமலும் இருக்கத் தனியிடம்
அமைத்தல் மரபு.

     கோக்கும் கோவை - கோக்கப்படுதலால் கோவை எனப்
பெயராயிற்று. இண்டை- மாலைவகை. இது பெரும்பாலும் தலையில்
அணிவது. கண்ணி - கொண்டை மாலை. தாளிற் பிணைக்கும்-
மலர்களை அடியோடு சேர்த்துக் கட்டுதல் என்பர். பிணையல் -
பிணைக்கப்படுதலாற் போந்தபெயர். தொடுக்கப்படுவது தொடையல்.
இவை மாலை வகைகள்.

     நுண்தாது இறைக்கும் - நுண்ணிய பூந்தாதுக்கள் வீழ்கின்ற.
புதிதின் மலர்ந்த பருவமாதலின் பூக்களினின்றும் மகரந்தங்கள்
சிந்துவன.

     சமைத்தல் - மேற்கூறிய மாலை வகைகளாக ஆக்குதல்.
வெவ்வேறு மாலை வகைகளைப்பற்றி 164 - பார்க்க.

     நுடங்கு நூல் - தோளிற்கிடந்து கீழே மார்பில் அசையும்
பூனூல்.

     சுருதிகளிற் கூறப்படும் "பிரஞானம் பிரமம்","அகம்பிரம்மாஸ்மி",
"தத்துவமசி", "அயமாத்மா பிரமம்" என்ற நான்கு மகா
வாக்கியங்களைநால்வகை மலர்களாகத் தெரிந்து எடுத்தனர் என்றும்,
அச்சுருதிப் பொருள்களை ஆறங்கங்கள் விளக்குவனவாதலின்
அவற்றை ஆறுவகை மாலைகளாக்கிச் சடத்துவ சோதனைக்குரிய
ஆறுகாலங்களினும் சாத்தினர் என்றும், ஆறுகாலங்களாவன :
உஷத்காலம் - திரோபவத்தினால் உயிர்களை இருளினின்றும்
வெளிப்படுத்தும் காலம்; உதயகாலம் - உயிர்களுக்கு இருவினைத்
தொழில்களைக்காட்டி அவைகளில் விடுங்காலம்; உச்சிக்காலம்
- அவற்றாலாகிய பொருள்களை நுகர்விக்குங்காலம்;
பிரதோடகாலம்
- அனுபவத்தில் செல்லானவைபோக மிகுதியைக்
கணித்து வைக்குங்காலம்; சாயங்காலம் - கணித்து வைத்தவற்றை
நீக்குங்காலம்; அர்த்தயாமம் - தன்வசப்பட்டுச்
செயலற்றிருக்குங்காலம் என்றும் இங்கு விசேடவுரை காண்பர்
ஆலாலசுந்தரம் பிள்ளை.

     இறைக்குந் தொங்கல்களும் - என்பதும் பாடம். 9