1027.
|
தள்ளு முறைமை
யொழிந்திடவித் தகுதி யொழுகுமறை யவர்தாந்,
தெள்ளு மறைகள் முதலான ஞானஞ் செம்பொன்
வள்ளத்தில
அள்ளி யகில மீன்றளித்த உம்மை முலைப்பா
லுடனுண்ட பிள்ளை யார்க்கு நண்பருமாம் பெருமை யுடையா
ராயினார். 11
|
(இ-ள்.)
வெளிப்படை. நூல்களால் விலக்கப்பட்டவை நீங்க,
இவ்வாறு தக்க நல்லொழுக்கத்தில் வாழும் திருமறையோராகிய
முருகனார், தெள்ளும் மறைகளில் முதலாக எடுத்துக்கூறப்பட்ட
சிவஞானத்தைச் செம்பொற் கிண்ணத்தில் அள்ளி எடுத்து எல்லா
உலகங்களையும் பெற்றுக்காக்கின்ற அம்மையாரது
திருமுலைப்பாலுடன் உண்டருளிய ஆளுடையபிள்ளையாருக்கு
நண்பருமாகின்ற பெருமையினை உடையாராயினார்.
(வி-ரை.)
தள்ளும் முறைமை ஒழிந்திட - தள்ளும்
முறைமை - அறநூல்களாலும் அறிவோராலும் விலக்கப்பட்ட
தகைமையுடைய செயலொழுக்கங்கள். முறைமை -
முறைமையின்
வரும் செயல்களைக் குறித்தது. ஆகுபெயர். ஒழிந்திட - நீங்க -
போக. அவரது முயற்சியின்றியே அத்தீயவை அவர்பாலணுகாது
தாமே ஒதுங்கின என்று குறிக்க ஒழித்திட
என்னாது ஒழிந்திட
என்றார்.
இத்தகுதி
- முன் 1022 முதல் 1026 வரை கூறிய
இந்தச்சரியை கிரியை முதலாகிய தவநெறி வாழ்வு. இ -
அண்மைச்சுட்டு. இப்போது கூறிய இந்த என்க.
தெள்ளும்
மறைகள் - உலகுக்கு உண்மை தெளிவிக்கும்
வேதங்கள். தெள்ளும் - தெளிவிக்கும். இவை
வேதமுடிவு,
வேதசிரசு,வேதமுதல், உபநிடதம் என்று பலவாறும் உபசரித்துக்
கூறப்படுவன.
முதலான
ஞானம்- சிவஞானம். மறைகளில் முதலாவதாக -
சிறந்த முடிவாக - எடுத்துச் சொல்லப்படும் ஞானம். "தெள்ளிவடித்
தறிந்தபொருள் சிவன்கழலிற்செறிவு" (சிறுத் - புரா- 4 ) என்றது
காண்க.
மறைகள் முதலான
ஞானம் - மறைகள் முதலானவும்
சிவஞானமும் என்று உம்மைத் தொகையாக்கி உரைப்பினும்
அமையும்.ஞானம் என்றது அபரஞானங்களாகிய கலைஞானங்களும்,
உணர்வரிய மெய்ஞ்ஞானமாகிய பரஞானமுமாம். "வாரிணங்கு
திருமுலைபொன் வள்ளத்துக் கறந்தருளி" (67), "எண்ணரிய
சிவஞானத் தின்னமுதங் குழைத்தருளி" (68) என்ற திருஞானசம்பந்த
நாயனார் புராண வரலாறுகள் காண்க.
ஞானம்....பிள்ளையார்
- அவர்தம் புராணம் 61-68
பாட்டுக்களிற் கூறும் சரித வரலாறு பார்க்க. அவ்வாறு
உண்டமையால் மெய்ஞ்ஞானமுணர்ந்து "தாவில் தனிச் சிவஞான
சம்பந்த ராயினார்" (69) என்றதும் காண்க.
ஞானம் - அள்ளி
- முலைப்பாலுடன் - பொன்வள்ளத்தில் -
உண்ட - பிள்ளையார்.
அகிலம் ஈன்று அளித்த
அம்மை - உலகங்களுக்கெல்லாம்
தாயாகிய உமையம்மையார்.
முலைப்பால்
- பரம் அபரம் என்ற இரண்டு ஞானங்கள்
திருமுலைகளாக உபசரித்துக் கூறப்படுவது மரபு. இதுபற்றியே
"உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானந்,
தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தா ரந்நிலையில்" என்று அத்
திருமுலைப்பாலுண்டருளியதன் விளைவைப் புராணத்தினுள்
கூறியதும் காண்க. 257-ல் உரைத்தவையும் பார்க்க.
நண்பருமாம்
பெருமை - முன் சொல்லிய தகுதி ஒழுகும்
பெருமையோடு என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை.
"சண்பைநாதற்குத்
தோழன்" என்றது வகை நூல். இப்பெருமை
ஆளுடைய பிள்ளையாரையும், ஆளுடைய அரசுகளையும்
அவர்களுடன் போந்த எண்ணிறந்த திருத்தொண்டர்களையும் பல
காலம் தமது திருமனையில் வைத்து உபசரித்தமையும் பிறவுமாக
அவ்வப் புராணங்களுள் விரிக்கப்படுவது. இது பற்றி 1029-ல்
உரைக்கப்பட்டவை பார்க்க. 11
|