1029.




அங்க ணமருந் திருமுருக ரழகார் புகலிப்
                             பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன்செய்த பூசை யதனாற்
                              புக்கருளிச்
செங்க ணடலே றுடையவர் தாஞ் சிறந்த வருளின்
                            பொருளளிக்கத்
தங்கள் பெருமா னடிநீழற் றலையாம் நிலைமை
                            சார்வுற்றார்.  13

     (இ-ள்.) வெளிப்படை. அவ்விடத்து அமர்கின்ற
திருமுருகனார்,அழகிய புகலியில் வந்த ஆளுடைய
பிள்ளையாருடைய சிவம் பொங்கும் திருமணத்தில் முன்செய்த
பூசையின் பயனாலே புகுந்தருளிச், செங்கண்ணுடைய வலிய
இடபத்தையுடைய சிவபெருமான் சிறந்த அருளாகிய இனிய
பொருளை அளிக்கத், தம் பெருமானாரது திருவடிநீழலின்
கண்ணதாகிய நிலைபெற்ற தன்மையைச் சார்வுற்றனர்.

     (வி-ரை.) அங்கண் - அவ்விடத்து - புகலூரில். அங்கண் -
அதன்கண் அஃதாவது பூசையின்கண் என்று உரைப்பினு மமையும்.
அங்கண்மை- அன்புடைமை என்ற உட்குறிப்பும் காணப்படும்.

     அமரும் - விரும்பியிருக்கும். பூத்திருப்பணியிலும், பூசையிலும்
ஆளுடையபிள்ளையாரது நண்பினிலும் விரும்பி ஒழுகும்.
"பரிந்துள்ளார்" (1026), "நன்னர் மகிழ்ச்சி மனங்கொள்ள" (1028)
என்றவை காண்க.

     அழகார் புகலி - புகலி - சீகாழி. புகலியின் அழகுச்
சிறப்புக்களை ஆளுடைய பிள்ளையாரது திருப்பதிகங்களாலும்,
அவர்தம் புராணம் 2-9 பாட்டுக்களாலும், பிறாண்டும்
கண்டுகொள்க.

     பொங்குமணம் - சிவம்பெருக்கும் பிள்ளையாரது சிவம்
பெருக்கும் திருமணம். பொங்குதல் - மேன்மேல் வளர்தல்.
திருமணத்தில் வந்த எல்லாரும் சோதிவாயிலினுள்ளே புகும்வரை
சோதியோங்கியும் அத்திருவாயில் திறந்தும் சிவத்துவம்
வளர்ந்துகொண்டேயிருந்த சரிதம் காண்க.

     முன்செய்தபூசை - முன் 1022-1025, 1028-ல் கண்டபடி,
இப்பிறப்பிற்செய்த பூசையும், அப்பூசைக்குக் காரணமாயிருந்த
முன்னைத் தவமும் (1022) இங்குப் பூசை எனப்பட்டது.

     பூசையதனாற்புக்கருளி - ஆளுடைய பிள்ளையாரது
திருமணத்திற் புகுவதற்குப் பூசைகாரணமாகிய.து. பூசையாகிய தவம்
செய்தோரே அத்திருமணத்திற் புகப்பெற்றார் என்பதுண்மை.
என்னை? அதிற்புகுந்தோர் அனைவரும் முத்தியடைந்தமையாலும்,
"வேத சிரப்பொருளை மிகத்தெளிந்தும் சென்றாற் சைவத்,
திறத்தடைவரிதிற் சரியை கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தாற்
சிவனடியைச் சேர்வார்" (சிவஞான சித்தியார் -8-11) என்பதும், தவஞ்
செய்யாதார் சிவனடி சேரார் என்பதும் உண்மை முடிபாதலாலும்
முன்செய்த பூசைகாரணமாகத் திருமணத்திற்புக்கனர் என்றார்.
அவ்வாறு திருமணத்திற் புகுதலே முத்திபெற்ற தாய் முடிந்ததாலின்
புக்கருளி
என்று அருமைப்பாடு பெறக்கூறினார்.

     சிறந்த அருள் இன்பொருள் - சிறந்த அருள்- சிவனருள். இன் பொருள் - சிவஞானம். சிவானந்தம் என்பாருமுண்டு.

     அடிநீழல் தலைஆம் நிலைமை - நீழல் தலை - நீழலின்
கண்ணே - தலை - ஏழனுருபு. ஆம் - ஆகின்ற. நிலைமை -
நிலைபெற்ற தன்மை - மீளாநிலை. பேராவியற்கை என்றதும் இது
சிவனடி பெறுதலாகிய நிலைத்த வீடுபேறு...."செலுத்தியபின்
ஞானத்தாற் சிவனடியைச் சேர்வார்" என்றும், "ஈனமிலாப்
பொருளதனைச் சிந்தித்த லைந்தும், இறைவனடி யடைவிக்கு
மெழில்ஞான பூசை" (சித்தி -8-23) என்றும் கூறியபடி இந்நாயனார்
செய்த பூசை இவருக்குத் திருமணத்தின் வழியே இறைவனடியில்
குடியிருக்கும் நிலை தந்தது. ஞானத்தாற் சிவனடி சேர்தல் என்ற
உண்மையானது இந்நாயனாரளவில் ஞானசம்பந்தரது துணையால்
என்ற குறிப்புத்தர நிகழ்ந்ததும் காண்க. அது குறிக்கவே ஆசிரியர்
"மணத்திற் புக்கருளி அடிநீழல் - நிலைமை சார்வுற்றார்"
என்றருளினர். இந்நாயனார் மலர்பறித்துச் சாத்திமகிழ்தலாகிய
சரியையும், சாந்தம் புகை முதலியன கொண்டு சிவலிங்கத்தில்
பூசித்தும் அருச்சித்தும் வழிபடுதலாகிய கிரியையும், அஞ்செழுத்துப்
பயிலும் அகப்பூசையாகிய யோகமும், செலுத்தியபடியால் அவை
காரணமாக ஞானத்தினுட் புகுந்தனர் என்ற குறிப்பும் பெறப்
பூசையதனால் புக்கருளி என்ற நயமும் காண்க.

     சார்வுற்றார் - சார்பு - சைவசித்தாந்த முணர்த்தும்
மரபுப்பெயர். முன்னர் இப்பிறவியின் சார்வுற்ற உயிர், தான்
சாரவேண்டிய மேலைச்சார்பினையுணர்ந்து, இவ்வுலகச் சார்பு கெட
ஒழுகிய சிவஞான ஒழுக்கத்தாலே சிவனடி நீழலாகிய நிலைத்த
சார்பினை அடைந்தார் என்க. இவ்வாறு இந்நாயனார் சிவனடி நீழல்
சார்வுற்ற சரிதம் "சீர்பெருகு நீலநக்கர் திருமுருகர் முதற்றொண்டர்"
(1250) என்ற திருஞானசம்பந்த நாயனார் புராணத்திருப்பாட்டாலும்,
அச்சரித வரலாற்றாலும் அறிக. 13