1038.



காத லன்பர்த மருந்தவப் பெருமையுங் கலந்த
வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி
யாதி நாயக ரமர்ந்தருள் செய்யமற் றவர்தாந்
தீதி லாநிலைச் சிவபுரி யெல்லையிற் சேர்ந்தார். 8

     (இ-ள்.) வெளிப்படை. விருப்பமிக்க அன்பருடைய
அரியதவத்தின் பெருமையினையும், அந்தத்தவத்துடன் கலந்த
வேதமந்திரத்தின் நியதியின் அளவு கடந்த மிகுதியினையும்
ஏற்றுக்கொண்டு ஆதிநாயகராகிய சிவபெருமான் விரும்பி
அருள்செய்யவே, பசுபதியார் தீதிலாநிலைச் சிவபுரியினது
எல்லையிற் சேர்ந்தனர்.

     (வி-ரை.) காதல் அன்பர் "தூயஅன்பொடு" - "நேய
நெஞ்சினர்" (1034) என்றது பார்க்க.

     தவம் - 1036ல் குறித்த செயல் தவமெனப்பட்டது. தவம் -
தபி
க்கச் செய்தல். இங்கு உடலை வாட்டுதல் என்ற பொருளில்
வந்தது. " மாரி நாளிலும் வார்பனி நாளிலும், நீரிடை மூழ்கி
நெடிது கிடந்தும்....தளர்வுறும் யாக்கையைத் தளர்வித் தாங்கவர்,
தம்மைத் தாமே சாலவு மொறுப்பர்..." (திருவிடை - மும் -
கோவை - 19) என்ற பட்டினத்தடிகள் திருவாக்கும் காண்க.

     நாயகர் - பெருமையும் - மிகுதியும் விரும்பி - அமர்ந்து
அருள்செய்ய, அவர் - சிவபுரி எல்லையிற் சேர்ந்தார் என்று
முடிக்க. அருள் செய்ய என்ற வினையெச்சம் சேர்ந்தார் என்ற
பிறவினைமுதல் வினை கொண்டது.

     அமர்தல் - விரும்பி வீற்றிருத்தல். இங்குத் தவத்தினுள்ளும், நியதியின் மிகுதியினுள்ளும் விரும்பியிருத்தல் குறித்தது.
"ஆளவுடையார் தம்முடைய வன்பரன் பின் பாலுளதாய், மூள
வமர்ந்த நயப்பாடு முதிர்ந்த பற்று முற்றச்சூழ், கோள மதனி
லுண்ணிறைந்து குறித்த பூசை கொள்கின்றார்" (சண்டீசர்புரா - 36)
என்றது காண்க. இறைவன் மந்திரத்தினுள்ளும் அன்பினுள்ளும்
விளங்குகின்றான் என்பதுண்மை.

     தீதிலா நிலைச் சிவபுரி- தீமையை யில்லையாகச்செய்து
நிலைபேறுடைய வாழ்வு தரும் சிவனுலகம். இதனைச் சேர்தல்
பசுபதியாரின் தவப்பெருமையின் பயனாகியது. தீது -
ஆணவமாகிய மலம்.

     மகிழ்ந்தருள் செய்ய - அறிந்தருள் செய்ய -
எல்லையிற்சென்றார்
- என்பனவும் பாடங்கள். 8