1040.
|
அயில்கொண்
முக்குடு மிப்படை யார்மருங் கருளாற்
பயிலு ருத்திர பசுபதி யார்திறம் பரசி
யெயிலு டைத்தில்லை யெல்லையி னாளைப்போ
வாராஞ்
செயலு டைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை
மொழிவாம். 10 |
(இ-ள்.)
வெளிப்படை. கூர்மை கொண்ட திரிசூலத்தை ஏந்திய
சிவபெருமானது அருகிலே பயில் உருத்திர பசுபதியாரின்
திறத்தினைத் துதித்து, மதில் சூழ்ந்த தில்லையின் எல்லையில்
நாளைப்போவாராகிய செயலுடைய புறத்திருத் தொண்டருடைய
திறத்தினை இனி மொழிகின்றோம்.
(வி-ரை.)
அயில்கொள் முக்குடுமிப்படையார் -
முக்குடுமிப்படை- மூன்று தலையுடைய சூலம். கழுக்கடைஎன்றும்
கூறுவர். "மூவிலை யொருதாட் சூல மேந்துதல், மூவரும் யானென
மொழிந்த வாறே" (திரு ஒற்றியூர் ஒருபாவொரு பஃது - 6) என்ற
பட்டினத்தடிகள் திருவாக்கும்,"ஆதி யரியாகிக் காப்பா னயனாய்ப்
படைப்பா, னரனா யழிப்பவனுந் தானே" (திருக்கயிலாயஞானவுலா)
என்ற கழறிற்றறிவார்நாயனார் திருவாக்கும், "உயிரவைதம,
பவமலிதொழி லது நினைவொடு பதுமநன்மல ரதுமருவிய சிவன்" (1),
"சுரர்முத லுலகுகள் நிலை பெறும்வகை நினைவொடுமிகு,
மலைகடனடு வறிதுயிலம ரரியுருவியல் பரன்" (2) "உயிரவையவை
முழுவதுமழி வகைநினைமுத லுருவியல் பரன்" (3) (நட்டபாடை -
திருவிராகம் - சிவபுரம்) என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரக்
கருத்துக்களும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கன "மும்மலங்கள் பாயுங்
கழுக்கடை" "அழுக்கடையாம லாண்டுகொண் டருள்பவன்,
கழுக்கடை தன்னைக் கைக் கொண் டருளியும்" என்பனவற்றால்
சூலப்படை ஏந்துதலின் கருத்து உணரப்படும். வாமை,
சேட்டை,ரௌத்திரி எனவும், ஜனனீ ரோதயித்திரீ ஹாரணி எனவும்
பெயர்பெற்றுத், தீக்கையில் பாசச் சேதம் பண்ணுவனவும்,படைத்தல்
காத்தல் அழித்தலைச் செய்வனவும்,ஆகிய அச் சத்தி மூன்றுமே
முக்குடுமிப் படையாயும், முத்தொழில் மூர்த்திகளை
அதிட்டிப்பனவும் ஆம். இச்சத்திகளை அதிட்டித்துநின்ற முதல்வனும்
பிரம விட்டுணு ருத்திரப் பெயர் பெறுவர். அம்முதல்வன் தோற்ற
நிலை யிறுதிகளைச் சங்கற்பித்துநின்ற வடிவங்களையே
மேற்காட்டிய சிவபுரத் தேவாரங்கள் குறித்தன. நினைவொடு என்றது
காண்க. சிவலிங்கத்தின் அடி நடு முடிகளில் பிரமன் முதலியோரைப்
பூசிப்பதும் இக்கருத்துப்பற்றியதேயாம். இங்கு, உருத்திரபசுபதியார்
சடையார் மருங்கு பயில் பதம் என்றது முழுமுதலாகிய
சிவன்
பதமாமென்பதும், உருத்திரன் என்ற பெயராலறியப்படும்
குணமூர்த்திகளுள் ஒருவராகிய உருத்திரருலகு அன்றென்பது குறிக்க
முக்குடுமிப்படையார் என்ற இப்பெயராற் கூறினார்.
சூலப்படையினராகிய சிவபெருமானைக் குறித்துத் தை
அமாவாசையில் ஒருபோதுண்டு காக்கும் விரதம் சூலவிரதம் என்பது
ஆகமம். இது சிவவிரதமெட்டனுள் ஒன்று. "கொல்லுறு சூல விடை
விரதமெனுமெட்டுஞ் சிவவிரதங் குணிக்குங்காலே"
என்பது பிரமாணம்.
பயில்
இங்கு என்றும் மீளா நிலையாகிய பேறுபெற்றிருக்கும்
என்ற பொருளில் வந்தது. உருத்திரம் பயில் பசுபதியார்
என்று
அவர் சரிதத்தை முடித்துக் காட்டிய திறமும் காண்க.
எயிலுடைத்
தில்லை எல்லை - எயில் - மதில். தீமை
உட்புகாத காவல் குறித்தது. எல்லை - நாற்புறமும் காததூரத்தில்
தில்லையைச் சூழ்ந்த இடம். 238 - ல் உரைத்தனவும் பிறவும்
பார்க்க.
தில்லை....தொண்டர்
- இது மேல்வரும் சரிதத்திற்குத்
தோற்றுவாய் செய்து அறிவித்தபடியாம். இதனால் அந்நாயனாரது
பெயர்க்காரணமும் சரித வரலாறும் கூறினார். 1060 - 1061 - 1062
திருப்பாட்டுக்கள் பார்க்க முதனூலாகிய திருத்தொண்டத்
தொகையினுள் இப்பெயராலே அவர் துதிக்கப்பட்டமையின் இப்பெயர்
கொண்டே தோற்றுவாய் செய்ததுமன்றித், தில்லை எல்லையில்
-
போவார்- என்று சரித விளைவுடன்கூட்டிப் பெயர்
விளக்கமுஞ்செய்தார். புறத்திருத் தொண்டர்
- கோயிற்புறத்திலே
யிருந்து தொண்டுசெய்பவர். அவர் மரபு குறித்தபடியாம்.
திருவந்தாதியும் காண்க.
ஆசிரியர் தமது
மரபின்படி இதுவரை கூறிவந்த சரிதத்தை
முடித்துக்காட்டிய திறமும், வருஞ்சரிதத்தை எடுத்துத் தோற்றுவித்த
திறமும்கண்டுகொள்க. 10
|