1049.
|
செறிவலித்திண்
கடைஞர்வினைச் செயல்புரிவை
கறையாமக்
குறியளக்க வழைக்குஞ்செங் குடுமிவா ரணச்சேக்கை
வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி விரிநீழல்
மருங்கெல்லாம்
நெறிகுழற்புன் புலைமகளிர் நெற்குறுபாட்
டொலிபரக்கும். 9 |
(இ-ள்.)
வெளிப்படை. மிக்க வலிமையுடைய திண்ணிய
கடைஞர்கள் உழவுத் தொழிலுக்குரிய செயல்களைச் செய்யத்
தொடங்கவேண்டிய காலமாகிய வைகறையாமத்தின் நேரத்தை
அளந்துகாட்டி அவர்களைத் தொழிலிற் செலுத்துவதற்கு அழைக்கின்ற,
சிவந்த உச்சிக் கொண்டையினையுடைய கோழிகள் தங்குமிடமாகிய,
வாசனை பொருந்திய குளிர்ந்த கிளைகளையுடைய காஞ்சியின் விரிந்த
நீழலின் பக்கங்களில் எல்லாம், நெறித்த குழலினையுடைய புன்புலை
மகளிர் நெல்லைக் குற்றும் பாட்டு ஒலி மிகுதியும் பரக்க உளதாம்.
(வி-ரை.)
செறிவலித்திண் கடைஞர் - வலிமை -திண்மை
- ஒரு பொருட் பன்மொழி. மிகுதி குறித்தன. செறி என்றதனால்
இவைமேலும் திரண்ட மிகுதிப்பாடு குறிக்கப்பட்டது.
கடைஞர்
வினைச் செயல்புரி யாமக்குறி - வினை -
கடைஞர்களின் மரபுக்குரிய தொழில். இவை, உழவுத்தொழிலின்
பகுதிகளும், ஊர் காவலின் பகுதிகளுமாம். செயல் -அத்தொழிலின்
பொருட்டுச் செய்யப்படுவன. இவை, காலந்தப்பாது நீர் பாய்ச்சுதல்,
காவல் புரிதல், பறைசாற்றுதல் முதலியன. செயல்புரி யாமக்
குறி -
அச்செயல்களிற் புகுந்து வேலை செய்யும் காலமாகிய இரவின்
கடையாமங்களின் தொடக்கமாகிய காலம்.
அளக்க
அழைக்கும் வாரணம் - கடைஞர்களைச் "செயல்
புரிதற்கு உரிய காலம் வந்து விட்டது! விழித்துச் செல்லுங்கள்!"என்று
அழைப்பன போலக் கூவும் வாரணம். (வாரணம் - கோழி). தற்குறிப்பேற்றம். முன்பாட்டிற்
கோழிப் பெடைகளின் இயல்பும்,
இப்பாட்டில் செங்குடுமியுடைய ஆண் கோழிகளின் இயல்பும்
கூறப்பட்டன. இவை இவ்வாறு மக்கட் கூட்டத்துக்குச் செய்யும்
உபகாரம் கருதிப் பாராட்டியும், மக்களை அதிகாலையில்
விழிக்கச்செய்து கடவுளைத் தியானிக்கவும் அதன்பின் உலகநிலைத்
தொழில்களிற் செல்லவும் உதவும் பேருபகாரத்தைப் பாராட்டியும்,
கருணையுடன் சாந்தலிங்க சுவாமிகள் எடுத்துக் கூறினர்;
இவ்வுபகாரங்களுக்குப் பிரதியாக இவற்றைக் கொடுஞ்சித்தமொடு
கொன்று தின்றுவிடும் மனிதனது நன்றிமறந்த கொடுமையினையும்
எடுத்துக் காட்டிக் கடிந்துள்ளார். இவை முருகப்பெருமானது
கொடியாகும் பெருமையினைச் செங்குடுமி என்ற
அடைமொழிகள்
குறிப்பன.
சேக்கை
- நீழல் - மருங்கு சேவல்கள் தங்கும் பரந்த
நீழலின் பக்கங்களில். சேக்கை - துயிலுமிடம் என்றலுமாம்.
"சேக்கை மரனொழியச் சேணீங்குபுள்" (நாலடி).
நெல்
குறு பாட்டு - நெல்லைக் குற்றும்போது பாடும் பாட்டு. உடல் முயற்சியாலாகிய
தொழில்களை மக்கள் கூடிச்செய்யும் காலத்து
உடல்வருத்தந் தோன்றாதிருக்கப் பாட்டுப்பாடிக்கொண்டே தொழில்
செய்வது இந்நாட்டு நல்வழக்கங்களுள் ஒன்று.
இவ்வாறே புலைமகளிரும்
நெற்குற்றும்போது பாட்டுப் பாடுவர்.
நெற்குறுபாட்டு - இலக்கணை. தமக்கு உரிமைக்காகக்
கிடைத்த
நெல்லைத் தம் உணவுக்காகக் குற்றுவர். தமது உழவுத் தொழில்
முயற்சிகளுக்கு இடையூறில்லாதபடி இரவிலும் விடியற்காலையிலும்
இவர்கள் நெற்குற்றுவதும் வழக்கு.
காஞ்சி
விரிநீழல் - காஞ்சி மரத்தின் நீண்டு விரிந்த
கிளைகளின் நீழல்.
நெறிகுழல்
- நெறித்த - நெறிப்பையுடைய - கூந்தல்.நெறிப்பு
- அலைகள் போன்ற சிறு வளைவுகளை யுடைத்தாதல்.
புன்
புலைமகளிர் - புன்மைத்தொழில் செய்யும் மரபுடைய
கடைசியர். புலைத் தொழில் புன்மை எனப்பட்டது. வரும்பாட்டிலும்
இதனைத் தொடர்ந்து "புன் புலைச்சியர்கள்" (1050) என்றது காண்க.
9
அளக்க உளைக்கும்
-என்பதும் பாடம்.
|