1076.
|
அந்தணர்க
ளதிசயித்தா; ரருமுனிவர் துதிசெய்தார்;
வந்தணைந்த திருத்தொண்டர் தம்மைவினை
மாசறுத்துச்
சுந்தரத்தா மரைபுரையுந் துணையடிக டொழுதிருக்க
வந்தமிலா வானந்தப் பெருங்கூத்த ரருள்புரிந்தார். 36
|
(இ-ள்.)
வெளிப்படை. அந்தணர்கள் அதிசயித்தனர்; அரிய
முனிவர்கள் துதித்தனர்; தம்மை வந்தடைந்த திருத்தொண்டரை
வினைமாசு அறுத்து அழகிய தாமரை போலும் துணையடிகளைத்
தொழுதுகொண்டு இருக்கும்படி அந்தமில்லாத ஆனந்தப் பெருங்
கூத்தராகிய அம்பலவாணர் திருவருள் புரிந்தார்.
(வி-ரை.)
அதிசயித்தார் - "அருளும் மெய்ந்நெறி
பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டோமே" என்ற திருவாசகக்
கருத்தினை உன்னுக. உள்ளே புகுந்தாரது உருவம் காணமுடியாதபடி
மறைந்தது கண்டவர்கள் அஃது இன்னதென்றறிய முடியாததொரு
பெருமித உணர்ச்சி பெற்றனர். அதுவே அதிசயம்
எனப்படுவதாம்.
வந்தணைந்த
திருத்தொண்டர் - நாளைப்போவார் என்று
எதிர்கால நிகழ்ச்சியாய் இருந்தது, வருகின்றார்
என முன்னர்
நிகழ்கால நிகழ்ச்சி ஆயிற்று. அதுவும் முற்றுப்பெற்று
நிறைவாகியதனால் வந்து அணைந்த என இறந்தகாலத்தாற்
கூறப்பட்ட நயம் காண்க. அணைந்த - கூடிய,
சேர்ந்த.
"அணைவாய்" என்ற (1068) ஆணையின்படி அணைந்த என்க.
உயிரும் இறைவனும் சித்தாகிய ஒப்புடைப் பொருள்கள். ஆதலின்
இவையே ஒன்றோடொன்று அணையத்தக்கன. "அணைந்தோர்
தன்மை" என்பது சாத்திரம்.
வினைமாசு
அறுத்து - வினையினையும் மாசினையும்
அறுத்து. எண்ணும்மைகள் தொக்கன. வினை -
இருவினை.
கன்மமலம். இங்கு வினை என்றது மூலகன் மத்தை. இதனை
அறுத்து என்றது போக்கி என்ற பொருளில் வந்தது. மாசு
ஆணவமலம். அறுத்து என்றது வலிகெடச் செய்து என்ற பொருளில்
வந்தது. மும்மலங்களுள் மாயாமலம் அறுபட்டதனை "இம்மாயப்
பொய்தகையு முருவொழித்து" எனவும், "புண்ணிய மாமுனி வடிவாய்"
எனவும் கூறினார். ஆதலின் ஏனை இரண்டும் அறுத்தவகையினை
இங்குக் கூறினார். "சாருமல மூன்றுமற" (803) என்றவிடத்து
உரைத்தவை காண்க. "எல்லையில் பிறவி நல்கும் இருவினை எரிசேர்
வித்தின், ஒல்லையின் அகலு மேன்ற உடற்பழ வினைய தூட்டும்
தொல்லையில் வருதல் போலத் தோன்றிரு வினைய துண்டேல்,
அல்லொளி புரையுஞானத்
தழலுற அழிந்து போமே" (89) என்ற
சிவப்பிரகாசத் திருவாக்கும் இங்குக் கருதத்தக்கது.
அந்தமிலா
ஆனந்தப் பெருங்கூத்தர்- தில்லை நடனங்
கூற நேர்ந்த இடமெல்லாம் இவ்வாறு கூறித் திளைத்து நிற்பது
ஆசிரியர் மரபு. "ஆனந்த வெள்ளத்தினிடை மூழ்கி அம்பலவர்,
தேனுந்து மலர்ப்பாதத் தமுதுண்டு" (திருநாவுக்கரசு - புரா - 101)
"ஆனந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின், வந்தபே ரின்ப
வெள்ளம்" (252) முதலியவை காண்க. "அந்தமிலா ஆனந்தம்
அணிகொள் தில்லை கண்டேனே" என்ற திருவாசகத்தினை இது
நினைவுறச் செய்தலையும் காண்க. பெருங்கூத்தர் -இது ஒப்பதாகிய
கூத்துப் பிறிதில்லையாதலின் பெருங்கூத்தென்றார்.
"தனிப்பெருங்கூத்தின்" என்றதும், பிறவும் காண்க. 36
|