1082. கறைவி ளங்கிய கண்டர்பாற் காதல்செய்ம்
                            முறைமை
நிறைபு ரிந்திட நேரிழை யறம்புரிந் ததனால்
                               பிறையு
ரிஞ்செயிற் பதிபயில் "பெருந்தொண்டை நாடு
முறைமை யா" மென வுலகினின் மிகுமொழி
                          யுடைத்தால்.
 5

     (இ-ள்.) கருமை விளங்கும் கழுத்தினையுடைய
சிவபெருமானிடம் அன்பு செய்கின்ற முறைமையின் நிறைவினை
விரும்ப உமையம்மையார் அறம் புரிந்ததனால், பிறைதடவு மளவும்
உயர்ந்த திருமதிலையுடைய தலமானது பயில்கின்ற பெரிய
தொண்டை நாடானது சிவநெறியின் நியதியை யுடையது என்று
உலகத்தார் போற்றும் சிறப்பினை யுடையதாகும்.

     (வி-ரை.) கறை - விடத்தினாலாகிய கருமை. கறை
விளங்கிய கண்டர்
- திருநீலகண்டர். கறை விளங்கிய - தாழ்ந்து
மறைந்து இருக்கத்தக்க கருமையுடையவிடம் சிவபெருமான்
றிருமிடற்றில் தங்கப்பெற்றதனால் விளக்கம் பெற்றது என்ற
குறிப்புமாம். "நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்" என்றது
நீதிமொழி.

     காதல் செய்ம்முறைமை நிறை புரிந்திட - அன்பு
செய்கின்ற முறையாவது சிவபூசை செய்தல். நிறை - நிறைவு;
புரிதல்
- விரும்புதல். அம்மையார் சிவபிரானிடம் ஆகமத்
திறங்களைக் கேட்டுத் தாம் சிவபூசைசெய்து அன்பு செய்வதனை
விரும்பிய வரலாறு 1128 - 1131-ல் பார்க்க. "ஈசர்கழல் முறைபுரிந்த
முன்னுணர்வு" (திருஞா - புரா - 61) என்றது காண்க.

     நேரிழை - நேரிய - அழகிய - இழைகளாலாகிய அணிகளை
அணிந்தனர்.

     அறம்புரிந்ததனால் - அறங்களைச் செய்த வரலாறு 1146 -
1148 - 1149 பாசுரங்களிற் காண்க.

     எயிற்பதி - காஞ்சிபுரம். சாதியொருமையாகக்கொண்டு
அநேக நகரங்கள் என்பாருமுளர். "வளம்பதி பயின்றது" (1079)
எனப் பிற பதிகளை முன்னர்க் கூறியது காண்க. பதி பயில் நாடு
என்க. பயிலுதல் - விளங்குதல்.

     முறைமையாம் - நீதியுடைத்தாகும். மிகுமொழி - தேற்றம்
பெற அறிவோர் பலரும் எடுத்துரைக்கும் சொல்.