1085. கொண்டல் வானத்தின் மணிசொரி வனகுல
                            வரைப்பால்;
தண்டு ணர்க்கொன்றை பொன்சொரி வனதள
                                  வயற்பால்;
வண்டன் மூத்தநீர் மண்டுகால் சொரிவன வயற்பால்;
கண்டன் முன்றுறைக் கரிசொரி வனகலங் கடற்பால்.
8

     (இ-ள்.) வெளிப்படை. குலவரையிடங்களில் (மலையிடங்களில்)
மேகங்கள் வானத்தினின்று முத்துக்களைச் சொரிகின்றன;
முல்லையின்அயலிடங்களில். குளிர்ந்த கொத்துக்களையுடைய
கொன்றைகள் பொன் சொரிவன; நீர்மிகுந்த கால்வாய்கள்
வயலிடங்களில் உள்ள வண்டலில் முத்துக்களைச் சொரிவன;
கடற்பாலில் தாழைகளை முன்னிடங்களிற் கொண்ட துறைகளில்
கலங்கள் யானைகளைக் கொணர்ந்து சொரிகின்றன.

     (வி-ரை.) கொண்டல் மணி சொரிவன - முத்துக்கள்
பிறக்கும் இடங்களுள் மேகமும் ஒன்றாமென்பர்; ஆதலின்
மேகங்கள் மலையுச்சியில் பெய்யும்போது முத்துக்களையும்
சொரிந்தன என்றார். மணி என்பதற்கு மணிபோன்ற மழைத்துளி
என்று கொண்டுரைத்தலுமாம். கடலில் இப்பியின் அகட்டில்
மழைத்துளி வீழ்ந்தால் அதுவே முத்தாகத் தரித்து விளைவதாம்
என்பதும் இங்குக் கருதத்தக்கது.

     குலவரை - நீண்டு உயர்ந்த பெருமலைகள். கொண்டல்
மணி- குறிஞ்சிக் கருப்பொருள். பால் - ஏழனுருபு. பகுதியுமாம்.

     துணர்க் கொன்றை பொன் சொரிவன - கொன்றையின்
இதழ்கள் பொற்காசுபோல உதிர்வன என்பது கருத்து. "விரைசேர்
பொன் னிதழிதர" (மேகரா - குறி - திருவீழி - 4) என்ற
திருஞானசம்பந்த நாயனார் தேவாரங்கள் காண்க.

     தளவு அயல் - முல்லைநிலப் பக்கம். தளவு - முல்லை.
இங்கு நிலமும் மலரும் குறித்தது. இவை முறையே முல்லையின்
முதற்பொருளும் கருப்பொருளுமாம். முல்லை நிலத்தில்
கொன்றையும் முல்லையும் மலர்வன என்பதாம்.

     வண்டல் - எருப்பகுதி நிறைந்த சேறு. "திருமேனி
வெண்ணீற்று வண்டலாட" முதலிய ஆட்சிகள் காண்க.

     நீர்மண்டு கால் வண்டல் முத்தம் சொரிவன என்க.
வண்டல்
முத்தம் - என்பதற்குச் சிறுமகளிர் வண்டலாட்டயர்ந்து
விளையாடிச் சிந்திய முத்துக்கள் என்றுரைப்பாருமுண்டு.
இப்பொருளில் வண்டல் - சிறுமியர். விளையாட்டினொன்று.
"வண்டல்பயில் வனவெல்லாம்" (காரைக் - புரா - 5). வயல் -
மருதநிலப்பகுதி.

     கண்டல் - தாழை. இது நெய்தனிலக் கருப்பொருள்.

     கலம் துறைக் கரி சொரிவன என்க. அயல் நாட்டு
யானைகளை மரக்கலங்கள் ஏற்றிக் கொணர்ந்து துறைமுகத்திற்
சேர்ப்பன என்றபடி. யானையேற்றிவரத்தக்க பெருமரக்கலங்களும்
அத்தகைய கடல் வாணிபமும் இருந்தன என்பதாம். கலஞ்சொரிந்த
கரிக்கருங்கன்றும்" (வாயிலார் புரா - 3) என்பதும் காண்க.

     இப்பாட்டினால் நானிலப் பகுதியின் கருப்பொருள்களும்
வளங்களும் முறையே கூறியதாயிற்று. 8