1091. அம்பொன் வார்குழற் கொடிச்சிய ருடனர மகளிர்
வம்பு லாமலர்ச் சுனைபடிந் தாடுநீள் வரைப்பின்
உம்பர் நாயகர் திருக்கழுக் குன்றமு முடைத்தால்
கொம்பர் வண்டுசூழ் குறிஞ்சிசெய் தவங்குறை
                                 யுளதோ?
14

     (இ-ள்.) வெளிப்படை. அழகிய பொன்னிறமுடைய மலர்களை
அணிந்த, வளர்ந்து முடித்த கூந்தலையுடைய கொடிச்சியர்களுடன்
தெய்வமாதர்கள் மணம் பொருந்திய பூக்களையுடைய சுனைகளிற்
படிந்து முழுகுகின்ற நீண்ட இடங்களையுடைய, தேவர் தலைவராகிய
சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கழுக்குன்றத்தையும்
அக்குறிஞ்சி தன்னிடத்துடையது. ஆதலின் மரக்கொம்புகளில்
மலர்களில் வண்டுகள் மொய்த்தற்கிடமாகிய அந்நாட்டுக்
குறிஞ்சி நிலம் செய்தவம் குறைவுடையதாமோ? (அன்று.)

     (வி-ரை.) அம் பொன் வார் குழல் - "கொடிச்சியர் குழன்
மூழ்கி" (1089) என்ற கருத்தினைத் தொடர்ந்து கூறியபடி. பொன் -
பொன்னிறமுடைய மலர்கள். பொன்னணிகள் என்றலுமாம்.வார்குழல்
- பலதிறப்பட வார்ந்து முடிக்கப்பட்ட. அழகிய பொன்னிறம் ஒழுகும்
என்றுரைப்பாரும் உண்டு.

     உடன் படிந்தாடும் - என்க. கொடிச்சியரின் சிறப்பு நோக்கி
உடன் என்ற உருபை அப்பெயருடன் சேர்த்து ஓதினார். அரமகளிர்
- மலைவாழும் தெவச்சாதிப் பெண்கள். "வான் அரமகளிர்", "சூர்
அரமகளிர்" என்பன காண்க. உடைத்து - குறிஞ்சி என்ற எழுவாய்
வருவிக்க. அக்குறிஞ்சி எனச்சுட்டு வருவிக்க.

     குறையுளதோ? - ஓகாரவினா இன்மை குறித்தது. செங்கண்மால்
விடையார் திருக்காளத்தியும், ஆறுசூழ்சடை அண்ணலார்
திருவிடைச்சுரமும், உம்பர் நாயகர் திருக்கழுக்குன்றமும் தன்னுட்
பொருந்தப்பெற்றதென்றால் குறிஞ்சி செய்தவம் நிறைவுடையதேயாம்
என்பது. இத்தவம் வேறெந்தக் குறிஞ்சிக்குள்ளது என்பதும் குறிப்பு.
உம்மை - முன் சொன்னவற்றோடு என இறந்தது தழுவிய
எச்சவும்மை.

     திருக்கழுக்குன்றம் - தொண்டை நாட்டு 28-வது திருத்தலம்.
தேவாரப்பாடல்களும் திருவாசகங்களும் பெற்ற சிறப்புடையது.
செங்கல்பட்டு நிலையத்திலிருந்து தென்கிழக்கே கற்சாலையில் 9
நாழியளவில் உள்ளது. இரண்டு கழுகுகள் முறையே நான்கு
யுகங்களினும் பூசிக்கும் காரணத்தாற் போந்த பெயர். வேதங்கள்
மலையுருவமாயினமையின் வேதகிரி எனப்படும். கழுகுகளின் பூசை
இன்றும் காணத்தக்கது. வடநாட்டார் பட்சி தீர்த்தம் என்பர். 12
ஆண்டுகளுக் கொருமுறை நீரிடியின் பூசை நடைபெறுகிறது. 12
ஆண்டுகளுக்கு ஒருமுறை அடிவாரத்தில் உள்ள சங்க தீர்த்தத்தில்
சங்கு விளைந்து மிதந்து வருவதனை இக்காலத்தும் கண்கூடாகக்
காணலாம். இச்சங்க தீர்த்தத்தில் மூழ்கி மலைசுற்றி வந்து தரிசித்துப்
"பிணிதான் தவிருமென்று பிறங்கிக் கிடப்பார்" நோய் நீங்கப்பெற்றுச்
செல்லுதல் இன்றும் காணும் காட்சியாகும். 14