1092.
|
கோல
முல்லையுங் குறிஞ்சியு மடுத்தசில் லிடங்க
ணீல வாட்படை நீலிகோட் டங்களு நிரந்து
கால வேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப்
பாலை யுஞ்சொல லாவன வுளபரன் முரம்பு. 15 |
(இ-ள்.)
வெளிப்படை. அழகிய முல்லை நிலத்தையும்
குறிஞ்சி நிலத்தையும் அடுத்த பரற்கற்களோடு கூறிய மேட்டு
நிலங்களாகவுள்ள சில இடங்கள், நீலநிறமுடையவளாகிய
வாட்படையேந்திய துர்க்கையினது கோயில்களும்
நெருங்கியுள்ளனவாய்ப், பெரும்பொழுதாகிய வேனிற்காலத்திற்
கடும்பகற் பொழுதினைப்பற்றிப் பாலைநிலமென்றும்
சொல்லும்படியாகவுள்ளன.
(வி-ரை.)
பாலையும் சொல்லலாவன - நடுவுநிற்றல்
காரணமாகப் பாலைத் திணை நடுவுநிலைத் திணை எனப்
பெயர்பெற்ற தென்பர் மாதவச் சிவஞான யோகிகள்.
"‘நடுவணைந்தினை நடுவண தொழியப், படுதிரை வையம் பாத்திய
பண்பே' என நிலம் பகுத்தோதுங்கால் நடுவணதெனக்
குறியிட்டாராகலின், அங்ஙனம் பகுக்கப்படு நிலங்களுமாகாது,
அவற்றின் வேறுமாகாது, தனக்குரிய நிலம் நடு நிகர்த்ததாய்
நிற்றல்பற்றி நடுவுநிலைத்திணை யெனக் குறியிட்டாளுதலே
ஆசிரியர் கருத்தென்க. அங்ஙனமாதல், "முல்லையுங் குறிஞ்சியு
முறைமையிற் றிரிந்து, நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப்,
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்" (சிலப்பதிகாரம்)
என்பதனானுமுணர்க. இங்ஙனங் குறியிட்டமையாற் பாலைக்கு
நிலமுண்டென்பதூஉம், அதனை யேனை நிலங்களின் வேறாக
வைத்துப் பகுத்தெண்ணுதல் மரபன்றென்பதூஉம், ஆசிரியர்
கருத்தாதலுணர்க. இவ்வுண்மையுணராதார் பாலை சான்ற சுரம்
நானிலத்து ளடங்காதென வேறு வைத்தெண்ணி ஆசிரியரோடு
மாறுகொண்டு நிலமைந்தெனத் தமக்கு வேண்டியவாறே கூறுப"
என்றும், "ஆசிரியர் (தொல்காப்பியர்) முல்லை - குறிஞ்சி - மருதம்
- நெய்தல் - பாலை என முறை செய்தற் கேது, மாலை - யாமம் -
வைகறை - காலை - நண்பகல் என்னுஞ் சிறுபொழுதின் கிடக்கை
முறையேயன்றி வேறின்மை" என்றும், எமது மாதவச் சிவஞான
யோகிகள் தமது முதற்சூத்திர விருத்தியில் உரைத்தவை இங்கு
நினைவு கூர்தற்பாலன. பாலைக்கு நிலமுண்டாயினும் அது
நானிலங்களுமாகாது அவற்றின் வேறுமாகாது நிற்றல்பற்றி அதன்
நிலம் நானிலங்களின் வேறாக வைத்தெண்ணப்படுதல் மரபன்மை
யுணர்த்துதற்குப் பாலையும் சொல்லலாவன - பான் முரம்பு
என்று சிறப்பு உம்மை தந்தோதினார். இக் கருத்துப்பற்றியே
"நானிலத் தைந்திணை வளமும்" என்றனர் காஞ்சிப்
புராணமுடையார்.
வேனிலிற்
கடும்பகற் பொழுதினைப்பற்றி - நிலமும்
பொழுதும் என்ற முதற் பொருளிரண்டனுள் பாலைக்கு நிலமும்
பொழுதும் கூறினார். வேனில் அதற்குரிய பெரும்பொழுதும்,
கடும்பகல் - உரிய சிறு பொழுதுமாம். கடும்பகல்
- நடுப்பகல்
நண்பகல் என்ப.
காலம் - பொழுது என்ற முதற்பொருள்.
பொழுதினைப் பற்றி - காலவேறுபாட்டால்
பாலையாவது
என்பதாம்.
நீலிகோட்டங்களும்
நிரந்து - நீலி - துர்க்கை. நீல
நிறமுடையவளாதலின் நீலி எனப்படுவாள் என்று
குறிப்பார்
நீல - நீலி என்றார். கரம் கரி - என்றாற்போல நின்றது.
வாட்படை - வாளாகிய படை. இது நீலியின் படை.
முல்லையும்
குறிஞ்சியும் அடுத்த சில் இடங்கள் -
முல்லையும் குறிஞ்சியும் தம்முள் விரவிய நிலங்களில்
காலவேறுபாட்டால் தமது தன்மை திரிந்த நிலையிற் பாலை
எனப்படும். ஆதலின் சில் இடங்கள் என்றார்.
இது வேறு;
முல்லையும் குறிஞ்சியும் தம்மியல்பு திரியாது மயங்கும் திணை
மயக்கம் வேறு; அதனை 1120-ல் வேறுகூறுவது காண்க.
முதற்பொருளுக்குள் நிலமும் பொழுதும், கருப்பொருளுக்குள்
தெய்வமும் கூறினார். பாலைக் கருப்பொருள்களுள்
ஏனையவற்றையும் உடன் கொள்க.
அடுத்த
சில் இடங்கள் - ஐந்திணைகளும், தனி நிலமுள்ள
நான்கினையும் பொது வகையாற் சொல்லி, அவற்றுள்
முதன்மைபெற்ற குறிஞ்சியைச் சிறப்புவகையால் முதலிற் கூறினார்.
மேலே, இனி முல்லையைச் சிறப்புவகையாற் கூறத்தொடங்குகின்ற
ஆசிரியர், முல்லையும் குறிஞ்சியும் அடுத்து நடுவுநிலைத் திணை
எனப்படுவதாய காலவேறுபாடுபற்றித் திரிந்த பாலையை
அடுத்துவைத்துக்கூறி, மேலே முல்லையைத் தொடர்ந்து சொல்லும்
வைப்புமுறை கண்டுகொள்ளத்தக்கது. 15
|