1103. தளைத்த டம்பணை யெழுந்தசெந் தாமரைத்
                                  தவிசின்
இளைத்த சூல்வளை கண்படுப் பனவிடை யெங்கும்;
விளைத்த பாசொளி விளங்குநீள் விசும்பிடை                                  யூர்கோள் வளைத்த மாமதி போன்றுள மருதநீர் வைப்பு.
26

     (இ-ள்.) வெளிப்படை. நீர்வளம் மிக்க மருதநிலப்பகுதியில்
வரம்புகளையுடைய பெரிய வயல்களில் முளைத்தெழுந்த
செந்தாமரைப் பூவாகிற இருக்கையில் சூல்கொண்டு இளைத்த
தூங்குவனவாகிய சங்குகள், அந்த இடமெங்கும் முற்றிய பச்சைநிற
ஒளிபெற்று விளங்குவதாகிய ஆகாயத்தினிடையே பரிவேடத்தால்
வளைக்கப்பட்ட முழுமதி போன்றுள்ளன.

     (வி-ரை.) தடம்பணை - எங்கும் - சூல்வளை கண்படுப்பன
எனக்கூட்டுக. வயல்களிற் செந்தாமரை முளைத்தெழுந்து பூத்தன;
தாமரை மலரில் ஏறிச் சூல்கொண்டிளைத்த சங்குகள் துயின்றன;
சுற்றிலும் எங்கும் நெற்பயிர் பச்சைநிறத்துடன் விளங்கியது; அந்தச்
சங்குகளின் தோற்றம், பசியவானத்தினிடையில் பரிவேடத்தால்
வளைக்கப்பட்ட முழுமதியின் றோற்றம்போன்றிருந்தது என்பதாம்.

     பசிய பயிர் - வானம்; செந்தாமரை - மதியைச் சுற்றிய
செந்நிறமுடைய பரிவேடம்; அதனிடையில் சங்கு - முழுமதி;
போன்றன என்க.

     தளை - வரம்பு. நீரினையும் எரு முதலிய உரங்களையும்
வயலினின்றும் வெளிப் போகாமல் தடுத்து நிறுத்துதலால்
வரம்புகள் தளை எனப்பட்டன. "சிறைவான் புனல்" (திருக்கோவை)
என்பதுங் காண்க.

     பணை எழுந்த செந்தாமரை - இதுபற்றி முன் உரைத்தவை
பார்க்க. எழுந்த - தாமரைக்கொடி முளைத்தெழுந்ததனையும்,அதன்
பூக்களின் தண்டு உயர எழுந்து நிற்பதனையும் குறித்தது.

     தாமரைத் தவிசு - தவிசு - இருக்கை, படுக்கையிடம்;
சேர்க்கை. "செறியிதழ்த் தாமரைத் தவிசிற் றிகழ்ந்தோங்கு
மிலைக்குடைக்கீழ்" (மேகரா - குறி - வீழி - 2) என்றும்,
"சேற்றெழந்த மலர்க்கமலச் செஞ்சாலி கதிர்வீச, வீற்றிருந்த"
(பழந்தக்க - தோணிபுரம் - 6) என்றும் வரும்
ஆளுடையபிள்ளையார் தேவாரங்களும் காண்க.

     சூல் இளைத்தவளை என்க. சூல்கொண்டதனால்
அயர்வடைந்த சங்கு. கண்படுதற்குக் காரணங் கூறியவாறு.

     விளைத்த பாசொளி - மயிர் விளைந்து முற்றியதனால்
விளங்கும் பசியநிறம். இதனால் நட்ட நெற்பயிர் இடைக்காலத்துள்
முதிர்ந்து பச்சையாய் விளங்கிய நிலையும் குறிக்கப்பட்டது காண்க.

     ஊர்கோள் - பரிவேடம். ஊர்கோள் வளைத்த - ஊர்கோளினால் வளைக்கப்பட்ட. தச்சனாற் கட்டப்பட்ட
என்புழிப்போல, வினைமுதற்பொருளில் வந்த மூன்றனுருபும்,
படுவிகுதியும் தொக்குநின்றன. இங்கு ஊர்கோள் என்றது
ஓரோர்காலம் முழுமதியைச் சூழ்ந்துகாணும் சிவந்த
கதிர்ப்படலத் தொகுதியை.

     மாமதி - முழுமதி. நீர்மருதவைப்பினிடத்துக்
கண்படுவனவாகிய சூல் வளைகள் - போன்றுள என்க.
வளை
- சாதியொருமையாதலின் பன்மைவினை கொண்டது.

     நீள் வைப்பு - என்பதும் பாடம். 26