1114. காயல் வண்கரைப் புரைநெறி யடைப்பன கனிமுட்
சேய தண்ணறுஞ் செழுமுகை செறியுமுண்
                                 டகங்கள்;
ஆய நுண்மணல் வெண்மையை மறைப்பன வன்னந்
தாய முன்றுறைச் சூழல்சூழ் ஞாழலின் றாது.
 37

     (இ-ள்.) வெளிப்படை. கழிக்கானல்களின் வளப்பமிக்க
கரைகளிற் குற்றமுடைய சிறுவழிகளை, முதிர்ந்த முட்களையுடைய
சிவந்த குளிர்ந்த மணம் பொருந்திய செழித்த அரும்புகள் நிறைந்த
முள்ளிச்செடிகள் அடைப்பன; அவ்விடத்தில் உள்ள நுண்மணலின்
வெண்மையை அன்னங்கள் தாவி விளையாடும் முன்கரையின்
சூழலினைச் சூழ்ந்து முளைத்துள்ள ஞாழல் மலர்களின்
பூந்தாதுக்கள் மறைப்பன.

     (வி-ரை.) காயல் - உப்பளம் என்றலுமாம். வண்கரை -
வண்மையாவது கடல்படு வளங்கள் யாவும் பிறநாட்டு வளங்களும்
வந்துகூடிக் கிடைத்தற் கிடமாதல்.

     கரைப் புரை நெறி - கரையில் உடைப்பும் துவாரங்களும்
உள்ள சிறு வழிகள். கரையில் அலைகளால் அரித்து அழிக்கப்பட்ட
பிளவுகளையும் துவாரங்களையும் நீர் முள்ளிச் செடிகள் மறைத்து
நிற்றல் இயற்கை. முண்டகம் - தாழையென்றும், கனிமுள் -
மெல்லிய முள் என்றும், அடைப்பன - மூடுவதற்குப் பயன்படுவன
- மூடுவன - என்றும் கொண்டு உரைப்பாருமுண்டு. "கண்டகங்காள்
முண்டகங்கள் கைதைகாள்" என்ற தேவாரத்தால் முண்டகம்
வேறென்பதறியப்படும்.

     சேய முண்டகம் - தூரத்திலிருந்து வந்த தாமரை
என்றுரைப்பாரு முண்டு. அவர்கள் நெய்தனிலம் மருதநிலத்தை
அடுத்திருப்பதனால் ஆறுகளும் ஓடைகளும் தாமரைகளை வாரி
வருதலும் கூடும் என்றும் - "கமல வண்டலர் கைதை" (242) என
முன்னுரைத்தவை காண்க என்றும் கூறுவர்.

     ஆய - அக்கடற்கரையில் உள்ள. நுண்மணல்
வெண்மையினை ஞாழலின்தாது மறைப்பன
என்பது
வெண்பரப்பு முழுமையும் மறையும்படி ஞாழலின் பூந்தாதுக்கள்
நிறைந்தன என்பதாம். அவ்விடத்து ஞாழல்களின் மிகுதி
குறித்தது.

     ஞாழல் - கடல்சார்ந்த இடங்களில் மிகுதியும் உளதாகும்
ஒருவகைச் செடி. நெய்தற் கருப்பொருள்களுள் ஒன்று; புலிநகக்
கொன்றை என்பாருமுண்டு.

     அன்னம் - சிறுபான்மை நெய்தனிலத்திற் பயிலும்பறவைகளுள்
ஒன்று. முன்றுறை - துறையின் முன் பக்கம். இல்முன் என்பது
முன்றில் என வருவது போலக் கொள்க. சூழல் - சூழ்ந்துள்ள இடம்.

     கயல்முள் - என்பதும் பாடம். 37