1129.
(வி-ரை.) நங்கை
- பெண்ணினல்லாருக்கு வழங்கும்
சிறப்புப்பெயர். நாயகன் - தலைவன் என்றும்,
நங்கைக்கு நாயகன் -
கணவன் - என்றும் இருபொருளும் பட நின்றது.
அங்கண்
எய்திய முறுவல் - அங்கண்மையினால் -
அருளினால் - பொருந்திய புன்சிரிப்பு. அங்கண்
- அவ்விடத்து -
அப்பொழுது என்றுரைத்தலுமாம்.
நீ
மொழிந்த ஆகமத்தின் இயல்பு - "ஆகமத் திறனெலாம்"
(1127) என்றது காண்க. இயல்பு - விதித்த
முறைமை. இயல்பு -
சிவபூசை செய்தலே உயிர்களுக்கு அடுத்த இயற்கை - தன்மை; பிற
எல்லாம் மாறுபட்ட தன்மை என்பது குறிப்பு. வாயின் தன்மை
வாய்மை என்றதுபோல.
என்
ஆசை பொங்குகின்றது - பொங்குதல் - உள்
அடங்காது மேற்கிளம்புதல். மேன்மேலும் அதிகரித்தல்.
போகமார்த்த
பூண்முலையினாள் - "போகமார்த்த
பூண்முலையாள்" (திருநள்ளாறு - 1) என்ற ஆளுடையபிள்ளையாரது
தேவார ஆட்சி போற்றப்பட்டது காண்க. (1) சைவத்தின் முடிந்த
உண்மையாவது சிவபூசை என்று காட்டும் இந்த இடத்தில்
சைவத்தாபனத்துக்கு உதவிபுரிந்து உலகத்துக்கு எடுத்துக் காட்டிய
இத்திருப்பதிகத்தினை நினைவுகூர்தற்பொருட்டு இதனை
எடுத்தாண்டனர்; (2) அம்மையாரின் அருட்டிருமேனியாகிய
பெண்மையுருவக் குறிப்புப்பெறக் கூறியதும் கருத்து; (3) பரம் அபரம்
என்னும் இரண்டு ஞானநிலயங்களே அம்மையாரது இரண்டு
தனங்களாக உரைக்கப்படும். இந்த இருவகை ஞானங்களே சிவபோக
விளைவுதருவன என்பது குறிக்கவும் இங்கு இத்தன்மையாற் கூறினார்.
முறுவல்
- தமது உபதேசப்பயனை உலகத்துயிர்கள்
பறப்போகும் நிலையினுக்கு மகிழ்ந்தனர் என்ற குறிப்பும் காண்க.
அருச்சனை
புரிதல் - பூசித்தலுக்கு விதித்த எல்லா அங்கமும்
செய்தல். 52