1136. உம்பர் நாயகர் பூசனைக் கவர்தா
     முரைத்த வாகமத் துண்மையே தலைநின்
றெம்பி ராட்டியர்ச் சனைபுரி வதனுக்
     கியல்பில் வாழ்திருச் சேடிய ரான
கொம்ப னார்கள்பூம் பிடகைகொண் டணையக்
     குலவு மென்றளி ரடியிணை யொதுங்கி
அம்பி காவன மாந்திரு வனத்தி
     லான தூநறும் புதுமலர் கொய்தாள்.
59

    1136. (இ-ள்.) வெளிப்படை. தேவதேவராகிய சிவபெருமானது
பூசைக்கு, அவர் தாமே உபதேசித்த ஆகமங்களின்
உண்மையினையே தலைநின்று, எமது பெருமாட்டியார்
அர்ச்சிப்பதற்காக, இயல்பில் வாழும் திருத்தோழியர்களாகிய கொம்பு
போன்ற பெண்கள் திருப்பூங் கூடைகொண்டு அணையக் குலவுகின்ற
மெல்லிய தளிர்போன்ற அடியிணைகளால் மெல்ல நடந்து
அம்பிகாவன மென்னும் திருநந்தன வனத்தில்
சிவபெருமானுக்குஏற்றதூயவாசனையுடைய புதிய மலர்களைக்
கொய்தனர். 59

     1136. (வி-ரை.) ஆகமத்துண்மையே தலைநின்று -
ஆகமநெறியிலே உறைத்து நின்று.

     அர்ச்சனை புரிவதற்கு - அர்ச்சித்தலுக்காக, புரிவதற்குப்
- பூக்கொய்யப் - பூம்பிடகை கொண்டணைய என்க. அருச்சனை
புரிவதற்கு ஆன மலர் என்று கூட்டியுரைப்பதுமாம். அருச்சனை
- பூசை.

     இயல்பில்வாழ் திருச்சேடியர் - அம்மையாருடன்வந்ததனால்
தம்மியல்பாலே வாழ்வடைந்து நின்ற சேடியர் - தோழியர். இவர்கள்
அநிந்திதை - கமலினி என்ற இருவர்களும்,இலக்குமி, சரசுவதி,
இந்திராணி முதலியோரும் ஆவர்.

     பூம்பிடகை - திருப்பூங்கூடை. (மூன்று கூடைகளில்
நிரப்பிவைத்த காரணத்தால் புத்தனது நூல்களுக்குத்
திரிபிடகம்என்ற பெயர் வழங்குவது காண்க.)

     அடியிணை ஒதுங்கி - தளிரடிகளானதால் மெல்ல நடந்து
என்க. சிறு கற்களுக்கு ஒதுங்கி என்பாருமுண்டு.

     அம்பிகா வனம் - அம்மையார் தாமே உளதாக்கிய
நந்தனவனம் ஆதலின் இப்பெயர்பெற்றது. சிவபூசைக்குத் தாமே
நந்தனவனமமைத்தும், அதில் தாமே ஏற்ற பூக்களைக் கொய்தும்
பூசித்தல் வேண்டும் என்பது சிறந்த விதி. அம்பிகை பூக்கொய்யப்
பேறுபெற்றதனால் இப்பெயர் பெற்றதென்றலுமாம்.

     ஆன - உண்டாயின என்க. ஆன - சிவபூசைக்கான
- ஏற்ற - விதித்த - என்றலுமாம்.

     ஆன - தூ - நறும் - புது - மலர் என்ற நான்கு
அடைமொழிகளாலும் பூசைக்கு அம்மையார் எடுத்த மலர்களின்
சிறப்பைக் கூறினார். மலர்கள் நான்கு வகைப்படுதலும் குறிப்பு.
இவைபற்றி முருக நாயனார் புராணத்திலுரைத்தவை நினைவுகூர்க.59