1203. வானிறைந்த புனன்மழைபோய் மலர்மழையா
                               யிடமருங்கு
தேனிறைந்த மலரிதழித் திருமுடியார்
                         பொருவிடையின்
மேனிறைந்த துணைவியொடும் வெளிநின்றார்;
                          மெய்த்தொண்டர்
தானிறைந்த வன்புருகக் கைதொழுது தனிநின்றார்.
126

     (இ-ள்.) வெளிப்படை. ஆகாயத்தில் நிறைந்து பெய்த புனல்
மழை போய்ப் பூமழையாயிடப், பக்கத்தில், தேன்நிறைந்த கொன்றை
மலர்மாலை சூடிய திருமுடியினையுடைய சிவபெருமான் பொருகின்ற
விடையின் மேலே தம்முடன் நிறைந்த துணைவியாராகிய
உமையம்மையாரோடு ஆகாயத்தில் வெளிப்பட்டு நின்றனர்;
மெய்த்தொண்டர் அன்பினால் உள்ளுருகக் கைகூப்பித் தொழுது
கொண்டு தனியே நின்றார்.

     (வி-ரை.) வான் நிறைந்த புனன் மழை - வானஞ் செறிந்து
மழை பெய்த நிலை 1199-ல் உரைக்கப்பட்டது.

     புனன் மழை போய் மலர் மழையாயிட - புனல் மழையே
பூமழையாயிற்று என்னும்படி. தொண்டருடைய அந்நிலை
கண் டருள்புரிவதற்காக அருளால் வந்த புனல் மழையாதலின்
விளக்கம் கண்டவுடன் போயிற்று என்பது போய் என்ற தன் குறிப்பு.
மலர்மழை - திருவருளின் வெளிப்பாடு கண்டு தேவர்கள் பொழியும்
கற்பகப்பூமழை. "புனன்மழையோ மதுமழையோ பொழிவொழியா
பூஞ்சோலை" (1043), "மண்ணவர் கண்மழை பொழிந்தார்; வானவர்
பூமழை பொழிந்தார்" (130), "பொழியுந் தெய்வப் பூவின்மா மழையின்
மீள மூழ்குவார் போன்று தோன்ற" (398) முதலியவை காண்க.

     நிறைந்த துணைவி - அருளுருவாமகித் தம்முடனே எங்கும்
நிறைந்து விளங்கும் அம்மையார்.

     வெளி நின்றார்- அன்பர் காணும்படி வெளிப்பட்டு நின்றனர்.
செங்கை எழுந்து தோன்றுவதன்முன் மறைந்தருளி நின்றனர்;
பின்னர்ச் செங்கை மட்டில் எழுந்து பிடித்த அளவில் வெளிப்பட்டு
நின்றனர் என்க. வெளி நின்றார் - ஞான ஆகாய வெளியில்
நின்றனர் என்றலுமாம்.

     நிறைந்த அன்பு உருக - உள்ளத்தில் நிறைந்து பெருகிய
அன்பினால் கருவி கரணங்களெல்லாம் உருக என்க.

     தனிநின்றார் - தனியாக என்றும், ஒப்புயர்வற்றவராய் என்றும்
உரைக்கநின்றது. ஆண்டவர் வெளிநின்றார் - நாயனார் தனி
நின்றார்
என்ற சுவையும் காண்க. முன்னரும் "தனிநின்றார்" (1200)
என்றார். அது வேறு. அது திரோதசத்தி உருவமாகிய அருண்
மழையுள் நின்றநிலை. இது வெளிப்பட்ட திருஅருட் பூ மழையினுள்
நின்றநிலை. 126