1211.
வாழ்பொற் பதிமற் றதன்மருங்குமண்ணித் திரைகள்
                                வயல்வரம்பின்
றாழ்விற் றரளஞ் சொரிகுலைப்பாற் சமைத்த யாகத்
                                 தடஞ்சாலை
சூழ்வைப் பிடங்க ணெருங்கியுள தொடங்கு சடங்கு
                                முடித்தோறும்
வேள்வித் தலைவர் பெருந்தேர்கள் விண்ணோ ரேறும்
                                விமானங்கள்
. 6

     (இ-ள்.) வெளிப்படை. வாழ்வுடைய அந்த அழகிய பதியின்
பக்கத்தில் மண்ணியாற்றின் அலைகள் வரம்புகளினடியில்
முத்துக்களைச்சொரியும் கரையின் மருங்கு அமைக்கப்பட்ட
இடமகன்ற வேள்விச்சாலைகளைச் சூழ்ந்த வெளியிடங்களில்,
அங்குத் தொடங்கியாகச் சடங்குகளை முடித்துச்செல்லும் வேள்வித்
தலைவர்களின் பெருந்தேர்களும் அச்சடங்குகளில் வந்து
அவிப்பாகமுண்டு செல்லும் தேவர்கள் ஏறிச் செல்லும்
விமானங்களும் நெருங்கி உள்ளன.

     (வி-ரை.) முன்னிரண்டு பாட்டுக்களின் கருத்தினைத்
தொடர்ந்து யாகசாலைகளின் இருக்கையும் சிறப்பும்
வேள்வியின் முடிபும் கூறுகின்றார்.

     பதியின் மருங்கு மண்ணியாறு ஓடுகின்றது அதன் அலைகள்
புரண்டு பரவும் படி இரு கரையிலும் அடுத்து வயல்கள்
இருக்கின்றன;வயல் வரம்புகளை யடுத்து இடப் பரப்புடைய கரைகள்
உண்டு; நகர்ப்புறத்தே உள்ள அந்தப் பரந்த கரைகளில்
வேள்விச்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன; அவற்றினைச் சூழ
வைப்பிடங்களாகிய வெளியிடங்கள் உள்ளன; அந்த
இடங்களில் சடங்கு முடித்து வெளியேறும் வேள்வித் தலைவர்களின்
தேர்களும், வேள்விக்கு வந்த விண்ணோர்களின் விமானங்களும்
இடம் பெற்றிருந்தன என்பதாம்.

     வேள்விச்சாலைகள் அமைக்கத்தக்க இடங்கள், நகர்ப்புறத்தில்
அதன் பக்கத்தில் ஆறு, வயல், குளம் இவைகளை அடுத்த பரந்த
கரைகளாம் என்பதும், யாக சாலைகளைச் சூழத் தேர்கள்
நிற்கவேண்டிய அகன்ற வெளியிடங்கள் வேண்டப்படுவன என்பதும்,
தேர் ஏறிச்செல்லும் பெருந்திருவுடையோரும் தலைவர்களாய்
வேள்விகளை இயற்றுவிப்பர் என்பதும் பெற்றப்பட்டன. தேர்கள் -
தரையிற் செல்வனவும், விமானங்கள் - ஆகாயத்திற் செல்வனவும்
ஆம். தேர்கள் - விமானங்கள் - வைப்பிடங்களில் - நெருங்கியுள
-என்று முடிக்க. எண்ணும்மைகள் தொக்கன. குலை - கரை.
வைப்பிடம்- தங்கவைக்குமிடம். Place to park cars & carriages
என்பர் நவீனர். 6