1212.




மடையிற் கழுநீர் செழுநீர்சூழ் வயலிற் சாலிக்
                            கதிர்க்கற்றை
புடையிற் சுரும்பு மிடைகமுகு புனலிற் பரம்பு
                            பூம்பாளை
யடையிற் பயிலுந் தாமரைநீ ளலரிற் றுயிலுங்
                            கயல்கள்வழி
நடையிற் படர்மென் கொடிமௌவ னனையிற்றிகழுஞ்
                            சிளைக்காஞ்சி.
 7

     (இ-ள்.) வெளிப்படை. மடையில் செங்குவளைகளும்,
செழிப்புடைய நீர் சூழ்ந்த வயலின் செந்நெற் கதிர்க்கற்றைகளும்
பக்கத்தில் வண்டுகள்மொய்க்கும் கமுகிற் பூத்த நீர்ச்செழிப்பினால்
மிகுந்த கமுகம் பூம்பாளைகளும். இலைகள் மிகுந்த தாமரைகளின்
நீண்ட பூக்களில் துயிலும் கயல் மீன்களும், நடக்கும் வழியில்
(மேற்பந்தர் போலப்) படர்ந்த மெல்லிய முல்லைக்கொடிகளும்,
அரும்புகளால் விளங்கும் கிளைகளையுடைய காஞ்சி மரங்களும்
(உள்ளன).

     (வி-ரை.) அங்கங்கும் உள்ளன என்ற பயனிலை வருவிக்க. 
மடையில் கழுநீரும் - வயலில் சாலியும் - புடையில் கமுகுப்
பூம்பாளையும் அலரில் கயல்களும் - நடையில் கொடிமௌவலும்
கிளைக்காஞ்சியும், உள்ளன என்று கூட்டி உரைத்துக்கொள்க.

     செழுநீர் - செங்குவளை என்பாருமுண்டு. கழுநீர்-
செங்குவளை.

     செழுநீர் சூழ் என்றதனால் நீரின் செழிப்பினால்சாலிக்கதிர்கள்
கற்றையாக வளர்தற்குக் காரணங்காட்டியபடி. கதிர்க்கற்றை -
நெற்கதிரின் நீளமும் நெல் மணிகளின் செறிவும் குறித்ததுடன்
அவ்வகையான கதிர்கள் ஒரு தூற்றில் காணஉள்ளதும் குறித்தது.

     புடையில் - கமுகு - பூம்பாளை - என்க. நெல்வயலின்
ஓரங்களிற் கமுகுப் பயிர் உள்ளது பற்றி முன்னுரைத்தவை பார்க்க.
சுரும்புமிடை பூம்பாளை எனவும், கமுகுப் பூமபாளை எனவும்
கூட்டுக. கமுகம்பாளையிற் சுரும்பு மொய்த்தல் அதில் உள்ள
மலர்களின் மணமுடைய தேனை நுகர்தற்பொருட்டாம்.

    அடையிற் பயிலும் தாமரை நீள் அலர் - தாமரைக்
கொடிகள் இலைப்பரப்பு மிகுதியும் உடையன; நீரினுட் கொடிகள்
நெருங்கிச் சுற்றியதனால் இலைகளும் நெருங்கியுள்ளன. அவற்றின்
பூக்கள் ஏனை யிலைக்கூட்டத்தின் மேல்உயரக்கிளம்பிய ஒவ்வோர்
நீண்ட தண்டில் அலர்வன என்றதன்மைகள் குறிக்கப்பட்டனகாண்க.

     தாமரை அலரில் துயிலும் கயல்கள் - கயல் மீன்களின்
ஊற்றுச்சுவை நுகர்ச்சியின்ப உணர்வுடைமை கூறியபடியாம். 926
- ல் உரைத்தவை இங்குக் கருதத்தக்கன.

     வழி நடையில் படர்கொடி மௌவல் - சினைக்காஞ்சி
- இவை நடை வழியில் நிழல் செய்யும் பொருட்டு வளர்க்கப்படுவன.
மௌவல் கொடி படர்ந்துள்ள இலைச் செறிவினால் வழி
நடப்போர்க்கு இளைப்பில்லாமற் செய்ய நிழலும், பூக்களால் வழி
நடப்போர்க்குக் களைப்பு நீக்க நன்மணமும் தருவன. அவ்வாறே
நீண்ட கிளைகளையுடைய காஞ்சி மரமும் இலைகளால் நிழலும்
நனைகளால் மணமும் தருவன என்பது குறிப்பு. 1210 - ல்"அணிநீண்
மறுகு" என்றவிடத் துரைத்தவை பார்க்க. காஞ்சி - நீர்வளமுள்ள
இடங்களிற் செழித்து வளரும் ஓர் வகை மரம். காஞ்சியைச்
சாலைமரங்களாக வைத்து வளர்த்தனர் என்பதாம்.