1215.




பெருமை பிறங்கு மப்பதியின் மறையோர்
                          தம்முட்பெருமனைவாழ்
தரும நிலவு காசிபகோத் திரத்துத் தலைமை சான்மரபி
வருமை மணியு மளித்ததுவே நஞ்சு மளிக்கு மரவுபோ
லிருமை வினைக்கு மொருவடிவா மெச்ச தத்த
                             னுளனானான்.
10

     (இ-ள்.) வெளிப்படை. பெருமையால் விளங்கும் அந்தப்
பதியில் மறையவர்களுள்ளே சிறந்த இல்வாழ்க்கைக்குரிய
அறங்களில் நிலைத்த காசிப கோத்திரத்தில் தலைமையாகியகுடியில்,
அருமையாகியமணியையும் கொடுத்து அதுவே நஞ்சினையும்
கொடுக்கும் பாம்பினைப்போல, நல்வினை தீவினை என்ற
இருவினைகளையும்செய்தற்கு ஒரு வடிவாய் வந்தவனாகியஎச்சதத்தன்
என்பவன் ஒருவன் உள்ளவனானான்.

     (வி-ரை.) மறையோர் - வேதியர் என்ற பெரும் பிரிவு.

      காசிப கோத்திரம் - மறையோர்களுள் நிலவும்
கோத்திரங்கள் என்றுசொல்லும் பல உட்பிரிவுகளுள் ஒன்று. இது
காசிபர் என்ற இருடியிடத்திலிருந்து தொடர்புகொண்டு வருவதுபோலும். கோத்திரத்துத் தலைமைசால் மரபு -கோத்திரம்
என்ற உட்பிரிவினுள் வரும் சிறுபிரிவு. பிரவரம் என்று வழங்குவர்.

     அருமை....அரவுபோல் - அரவு மணியினையும் நஞ்சினையும்
தருவது. எச்சதத்தன் விசாரசருமர் என்னும் நற்புதல்வரைப்
பெறுதலாகிய நல்வினையும் பெற்றான்; அவர்செய்த சிவபூசைக்கு
இடையூறுசெய்தலாகிய சிவாபராதஞ் செய்யும் தீவினையினையும்
பெற்றான்;ஆதலால் இருமைவினைக்கு மோருருவாம் என்றார்.
பயன்பற்றி வந்த உவமம். நன்மை தீமை என்று மாறுபட்ட
செயல்களிரண்டும் ஒரு சேர ஒருபொருளிடத்தே காண உள்ளதொரு
உவமப்பொருள் இந்த இடத்துக் கேற்பக் கொண்டு உரைத்தது
ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகளது தெய்வக்கவி மாண்புகளுள்ஒன்று.

     எச்சதத்தன் - எச்சம் - யக்ஞம் என்ற வடமொழி தமிழில்
எச்சம் என வந்தது. "தக்கனையு மெச்சனையும் தலையறுத்தது"
(சாழல் - 5)என்ற திருவாசகமும், "தக்கனது பெருவேள்விச்
சந்திரனிந் திரனெச்ச னருக்க னங்கி, மிக்கவிதா தாவினொடும்
விதிவழியே தண்டித்த விமலர்" (மேகரா - முதுகுன்றம் - 3) என்ற
ஆளுடைய பிள்ளையார் தேவாரமும் பிறவும் காண்க. வேள்வி
செய்யும் மரபில் வந்தானாதலால் இப்பெயரால் வழங்கப்பட்டனன்.
தத்தன் - முன்னாளில் மறையோர் பூண்ட சிறப்புப் பெயர்களுள்
ஒன்று.

     பெருமனைவாழ் தருமம் நிலவு - சிறந்த இல்லறத்தில்
நிலவுகின்ற. இல்லறத்தின் பெருமையாவது "இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றி னின்ற துணை" யாவதும், "துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கு
மிறந்தார்க்கும்" துணையாவதும், "தென்புலத்தார் தெய்வம்
விருந்தொக்க றானென்றாங், கைம்புலத்தா றோம்" புதலும் ஆம்.
தம்பொருட்டன்றிப் பிறர்க்குதவி செய்தற்காகவே மனையறமாகிய
இல்வாழ்க்கைஉளதாகுமென்று வகுத்தனர் பெரியோர். 10