1233.
ஆய நிரையின் குலமெல்லா மழகின் விளங்கி
                                  மிகப்பல்கி
மேய வினிய புல்லுணவும் விரும்பு புனலு மார்தலினால்
ஏய மனங்கொள் பெருமகிழ்ச்சி யெய்தி யிரவு
                                   நண்பகலுந்
தூய தீம்பான் மடிபெருகிச் சொரிய முலைகள்
                             சுரந்தனவால். 28

        1233.(இ-ள்.) வெளிப்படை. அவ்வாறாகிய ஆனிரையின்
கூட்டமெல்லாம் அழகுடன் விளங்கி மிகவும் பெருகி, மேவிய
இனிய புல்லுணவும் விரும்பும் தண்ணீரும் நிறைய உண்ணமப்பெற்ற
காரணத்தால், எய்திய மனத்திற்கொண்ட பெரு மகிழ்ச்சி பொருந்தி
இரவிலும் நண்பகலிலும் தூய இனிய பாலினை மடிகள் பெருகிச்
சொரியும்படி முலைகள் சுரந்தன. 28

     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு
கொண்டன.

   1233. (வி-ரை.) ஆய் - மேற்சொல்லியபடி
காப்பாற்றப்பட்டனவாகிய.

     அழகின் விளங்கி மிகப்பல்கி- நல்ல புல்லுணவும்
நன்னீரும் பெற்று அச்சமின்றிச் செழித்து மனமகிழ்வுற்றிருந்தன
வாதலின் பசுக்கள் உடல் செழித்து அழகாய் விளங்கின என்க.
பல்கி
- மிகுந்து இனம்பெருகி. மேய - மேவிய - பொருந்திய.
மேய இனிய
- மேய்வதற்கு இனிமையாகிய என்று கொள்வது
மொன்று.

     ஆர்தல் - நிறைய உண்ணுதல். "அமலைக் கொழுஞ்சோ
றார்ந்த பாணர்க்கு" (புறநா - 34 - 14).

     ஏய - ஏய்தல் - பொருந்துதல். மனங்கொள் ஏய
பெருமகிழ்ச்சி
என்க.

     மனங்கொள் மகிழ்ச்சி எய்தி - பசுக்கள் மேற்கூறியபடி
நன்றாய் அன்புடன் பாதுகாக்கப்படின் மனமகிழ்ச்சி யடைவன;
மகிழ்ச்சி அடையவே பால்நிறையக் கறப்பன என்பது
உயிர்வருக்கநூற் றுணிபு. சில பசுக்கள் கீதம் பாடக்கேட்டு
மனமகிழ்ந்து மிக்க பால் கறக்குமென்பதும் அந்நூலோர் கண்ட
உண்மைகளுள் ஒன்று. பசு மேய்க்கும் இடைமகனாக வந்த
கோபாலனைக் குழல் ஊதுபவனாகக் (வேணுகோபாலன்) கூறுவதும்
இக்கருத்துப்பற்றியதேயாம். பசு மேய்ப்போர் குழலூதும் வழக்கமும்
ஆனாய நாயனார் சரித வரலாறும் கருதுக. "கனைத்த மேதிகாணா
தாயன் கைமேற் குழலூத, வனைத்துஞ் சென்று திரளும் சாரலண்ணா
மலையாரே" (தக்கேசி - 6) என்றஆளுடையபிள்ளையார்தேவாரமும்
காண்க. "ஆடிக் கறக்கும் பசுவை ஆடிக்கற; பாடிக் கறக்கிறதைப்
பாடிக்கற" என்ற முதுமொழிக் கருத்தும் காண்க.

     மகிழ்ச்சியினால் மடிபெருகி - முலைசுரந்தன என்று
கூட்டுக. மடிபெருகினும் கன்றுகள் வாய்வைத்து உண்ணாதபோது
முலைசுரத்தல் பெரும்பான்மையில்லையாம். கன்றின்மேல் பசுக்கள்
கொண்ட அன்பாகிய இன்பநிலை காரணமாகவே முலைசுரத்தல்
நிகழும். பசுக்கள் கன்றின்மேல் வைக்கும் அன்பாகிய வாத்சல்யம்
என்பது இறைவன் உயிர்கள் மேல் வைக்கும் அருளுக்கு
உவமிக்கப்படும். அதனாலே இறைவன் பக்தவச்சலன் எனப்படுவார்.
மேல் விசாரசருமரைக் கண்டு தாய்போன்ற தன்மைகொண்டு
கறவாமே பால் பொழியவும், அதனால் இச்சரித விளைவுக்குக்
காரணமுண்டாகியதும் ஆகியவற்றின் உள்ளுறை இங்குத் தொடங்கி
விளக்கப்பட்டதும் கருதுக.

     இரவும் நண்பகலும் - பால் கறந்துவிட்ட மடி மீளவும் பால்பெருகிச் சுரக்க உள்ள இடைக்காலங்கள்.

     முலைகள் தீம்பால் சொரியச் சுரந்தன என்க. தூய்மை
உடற்சுகம் தரும் தன்மை. தீம் - இனிமை. "நெருநலும் தீம்பல
மொழிந்த" (அகநா - 239). இது சுவையால் இனிதாந்தன்மை.

     எய்த இரவும் நண்பகலும் - என்று பாடங்கொள்வாருமுண்டு.
28