1245.

அச்சொற் கேட்ட வருமறையோ "ராய னறியா
                             னென்றவற்றின்
இச்சை வழியே யான்மேய்ப்பே னென்றெம் பசுக்க
                              டமைக்கறந்து
பொச்ச மொழுகு மாணவகன் பொல்லாங் குரைக்க
                               வவன்றாதை
யெச்ச தத்தன் றனையழைமி" னென்றா ரவையி
                           லிருந்தார்கள். 40

     (இ-ள்.) வெளிப்படை. அச்சொற்களைக்கேட்ட,
அவையிலிருந்தவர்களாகிய மறையவர்கள் "ஆயன் பசுக்களை
மேய்க்க அறியானாதலின் அவற்றின் இச்சையறிந்து அவ்வழியே
யான் மேய்ப்பேன் என்று சொல்லிக், கொண்டுபோய் எமது
பசுக்களைக் கறந்து வஞ்சனையாக ஒழுகுகின்ற மாணவகனது
பொல்லாங்கினைச் சொல்வதற்காக, அவனுடைய தந்தையாகிய
எச்சதத்தனை அழையுங்கள்" என்று சொன்னார்கள்.

     (வி-ரை.) அச்சொல் - அயல் மற்றொருவன் அறிவித்த
அந்தச்சொல்.

     "ஆயன் அறியான்...........அழைமின்" - என்றது
அவையிலிருந்த மறையவர் கூற்று. "ஆயன் அறியான் என்று..........
யான் மேய்ப்பேன்" என்றது விசாரசருமனார் தம்மிடம் ஆமேய்க்க
இசைவு பெற்றபோது கூறியசொற்களை மறையோர் நினைவு கூர்ந்து
சொல்லியது. "மறையோர் இசைவினால்" (1229) என்றது
காண்க.

     பொச்சம் - வஞ்சனை. பொச்ச மொழுகுதல் என்றது,
இதத்தின் வழியே மேய்ப்பேன் என்று கொண்டு போய்,
அதற்கு மாறாகப் பாலைக்கறந்து வீணாக்கி விளையாடுதலை.

     பொல்லாங்கு - தீச்செயல். பொல்லாங்கினை உரைக்க
என்று இரண்டனுருபு விரிக்க.

     அவன் தாதை எச்சதத்தன் தனை அழைமின் - சிறுவர்
செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோரே பொறுப்பாளிகளாவர்
என்றும், சிறாரைத் திருத்துதல் பெற்றோர் கடமையாம் என்றும்
உள்ள உலக நியாயம் பற்றித் தாதையை அழைமின்
என்றார்கள். இந்நாள் அரசாங்க நீதிமுறைகளிலும் இவ்வாறாகிய
விதிகள் விதிக்கப்பட்டிருத்தல் காண்க. சிறுவர்களை அவர்கள்
செய்த குற்றத்திற்குத் தண்டிக்காத நீதிமுறையும் காண்க.
விசாரசருமனார் அதுபோழ்து ஏழு ஆண்டு நிரம்பும் பருவச்
சிறுவராயினர் (1219) என்பதனையும் உன்னுக. 40