1247. (வி-ரை.)
அந்தணாளர் ஆகுதிக்கு - ஆறனுருபு
விரிக்க. ஆகுதிக்குக் கறக்கும் - ஆகுதிக்காக
வேண்டும்
வளங்களைத் தருவதற்குப்பால் கறக்கும் என்க. நான்கனுருபு
கொடைப் பொருளில் வந்தது. முன்னர்"ஓமதேனுக்கள்" (1210-1234)
என்றது காண்க. ஆகுதி - சிவவேள்வி. "பசுக்கள்
பால்குன்றியவழி
அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரங் கற்பமென்பன
ஓதாமையானும் வேள்வி நடவாதாம்" என்று "ஆபயன் குன்றும்"
என்ற குறளின்கீழ்ப் பரிமேலழகர் உரைத்தனர்.
சிந்தை..........போல்
- முன் "ஆயன்...........ஒழுகும்" (1245)
என்று தாம் கொண்ட கருத்தினை எச்சதத்தனிடம் அந்தணர்
அறிவிக்கும் மொழிகள். மேய்ப்பான் போல்
- என்றதனால்
மேய்ப்பதாகச் சொல்லியது வஞ்சமொழி என்றும், அவ்வாறு
செய்யமுற்பட்டது போலியே என்றும் குறித்தபடியாம்.
சிந்தை
மகிழ்ந்து - ஆ மேய்ப்பதில் கொண்ட உள்ள
நிறைந்த மகிழ்ச்சியே காரணம் என்று காட்டியபடி.
பரிவினால்
- பசுக்களின்மேல் வைத்த அன்பினால்.
பரிவினால் - சிவன்பால் வைத்த அன்பினால் என்ற உண்மைக்
குறிப்பும் காண்க.
வந்த
பரிசே - சிறாராகிய தமது மனதுக்கு வந்தபடியே."மனம்
போன போக்கெல்லாம்" என்றதுபோல. தாம் இவ்வுலகில் முன்னைத்
தொடர்ச்சியுடன் வந்த அத்தன்மைக் கேற்றபடியே என்றதோர்
உண்மைக்குறிப்பும் காண்க.
செய்கின்றான்
- என்றான் - அச்செய்தியைத் தாம் அறிந்த
வகையினைக் கூறியபடி. அது தாம் நேரிற் கண்டறிந்ததன்று;
மற்றவன்பாற் கேட்டறிந்ததொன்று என உணர்த்தியபடியாம்.
அவையோர் முறை செய்கின்றபோது ஒருவன் தம்முன் வந்து
சொன்ன செய்தியும், அதற்குப் பிறர் கூறும் பக்கமும் கேட்டுஒழுங்கு
செய்தல் போல, என்றானாதலின் அதற்கு
உனது விடை யாது?
என்ற குறிப்புப்பட நின்றது.
என்றான்
- அயன் மற்றொருவனென்ற எழுவாய் தொக்கது.
மற்றவனைக் குறித்த பெயரும் மறைந்து நின்றது.
வாய்மொழிதல்-
சொல்லுதல். நீதிமன்றத்தில் வழங்கும்
மரபுமொழி. வாய் என்றது வாளா பெயராய் நின்றதெனினுமாம்.
அந்தண்
மறையோர் - என்று மறையோர்
வாய்மொழிந்தார் - என்பனவும் பாடங்கள். 42